Tuesday, December 28, 2010

இரவுகளில் உருகும் இசை



இன்று 'வாலன்டைன்ஸ் டே' என்பதால் கண்டிப்பாக அவன் ஆஃபிஸிற்கு வருவான் என்று தோன்றியது.நான் இந்த உலகத்தில் இவனை விட யாரையும் அதிகமாய் வெறுத்ததுமில்லை;அதே நேரத்தில் அதிகமாய் காதலித்ததுமில்லை..

இப்ப வரைக்கும் எனக்கு புரியாத விசயம் என்னவென்றால் இவனை ஏன் எனக்குப் பிடித்து தொலைத்தது.என் மனதின் ஒவ்வொரு கிளையாய் பற்றி வேர் வரை என்னை ஆட்சி செய்கிறான். இப்பொதெல்லாம்,இவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதோ, இல்லை இவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நான் என்னையே கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் தொடங்கி விடுகிறேன். எத்தனையோ முறை என் காதலை இவனிடம் இலை மறை காயாய் வெளிப்படுத்தியதை இவன் உண்மையிலேயே புரிந்து கொள்ளவில்லையா; இல்லை புரிந்து கொண்டும் நடிக்கிறானா என்பது எனக்கு இன்னமும் புரியாத விசயம்.

இமயமலையாய் என் கண்களில் பெருகும் காதல்,அவன் இதயக் கதவின் காலிங் பெல்லைத் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறது.ஒரு பெண் வேண்டுமானால் பையன் மீதான தன் காதலை எளிதில் மறைத்து விடலாம்.ஆனால் பையனால் முடியவே முடியாது என்ற என் நினைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய் தகர்க்கத் தொடங்கி விட்டான்.என்னைப் பார்க்கும் போதெல்லாம்,நேரில் பேசும் வார்த்தைகளுக்கு கூட அவுட்கோயிங் சார்ஜ் இருப்பது போன்று மிக மிக குறைவான வார்த்தைகளைக் கொண்டே பேசுவான்.ஆனாலும் என் மீதான அவன் காதல் அவனையுமறியாமல்,சில நேரங்களில் அவன் கண்களில் தெரிவதைப் பார்க்கும்போது,மனம் குதூகலிக்கும். சில நேரங்களில் என்னை நேரில் பார்த்து,என் கண்களைப் பார்த்து பேச அவன் தடுமாறுவதை பார்க்கும்போது,பரிதாபமாகவும் இருக்கும்.

இப்படியெல்லாம் ஒரு ஆண் முழுமையாய் நம்மை ஆக்கிரமிக்க முடியுமா என்று ஆச்சரியமாய் இருக்கிறது.காலையில் கண் விழிப்பதிலிருந்து,எப்போதாவது இரவு நேரங்களில் கண் அயரும் வரை கடவுள் போன்று நான் பார்க்கும் இடங்களிலெல்லாம் பரவி நிற்கிறான்.வார இறுதி நாட்களிலெல்லாம்,அவன் ஞாபகம் தோன்ற ஆரம்பித்து என்னையுமறியாமல் ஆஃபிஸ் போய் உட்கார்ந்து கொள்கிறேன்.ஆஃபிஸில் அவனுடைய சீட்டைப் பார்த்துக் கொண்டே இருப்பது,ஓரளவிற்கு ஆறுதலளித்துக் கொண்டிருக்கிறது.ஏதாவது ஒரு வார இறுதியிலாவது அவன் ஆஃபிஸ் வந்தானென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கும் போதெல்லாம்,இறக்கைகளெல்லாம் முளைத்து தேவதையாக மாறுவது போன்று இருக்கும்.

இப்போதெல்லாம்,அவனாகத் தன் காதலை சொல்வான் என்ற என் நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் தொடங்கியிருந்தேன்.ஒரு நாள் எதுவுமே பேசாமல்,நான் யாரோ என்பது போல் நடந்து கொள்கிறான்.மறு நாளோ,என் மீதான அவன் காதலைத் தன் கண்களில் கடலளவுக்கு காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.அவன் கண்களில் என் ஒற்றைக் காதல் படகு மட்டும் இருப்பதை நினைத்து மனம் குதூகலிக்கத் தொடங்கும்.சில நாள் நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில்,ஏதோ என்னிடம் சொல்ல வந்து அவன் தடுமாறி நிற்பதைப் பார்க்கும்போது,அவனை ஏன் கஷ்டப்படுத்துவானேன்,நாமே அவ‌னிட‌ம் காத‌லை சொல்லிவிட‌லாமா என்றும் தோன்றும்.

இந்த வாரத்திலிருந்து,இன்னும் ஒரு வாரம்தான்,வால‌ன்டைன்ஸ் டேக்கு இருக்கிறது என்ப‌தை நினைக்கும் போது சிலிர்ப்பாக‌ இருக்கிறது.ஊரில் இருந்த மிக‌ப் பெரிய‌ பியூட்டி பார்ல‌ருக்கு சென்றேன்.என் உட‌ம்பில் ஒவ்வொரு துளியாய் பூச‌ப்பட்ட‌ கிரீம்க‌ளில் அவ‌ன் வ‌ழிந்து கொண்டிருந்தான். இன்னொரு முக்கியமான விச‌ய‌மாய் இந்த‌ வ‌ருட‌த்து வால‌ன்டைன்ஸ் டே வேறு ச‌னிக்கிழமை வருகிற‌து.ஆஃபிஸில் வேறு யாரும் எங்களை டிஸ்ட‌ர்ப் ப‌ண்ண மாட்டார்க‌ள்;அவ‌னோடு முழு நாளையும் செல‌வ‌ழிக்க‌லாம் என்று நினைக்கும் போது பெண்ணாய் பிற‌ந்த‌த‌ன் பேரின்ப‌ம் கிடைக்கத் தொட‌ங்கிய‌து.

இந்த அதிகாளை வேளையில்,எந்த‌ உடை அணிவ‌து என்று ப‌ல‌ வ‌ண்ண உடைக‌ளை மூன்று ம‌ணி நேர‌மாய் அணிய‌ ஆர‌ம்ப‌த்திருந்ததில் காலை ஏழு ம‌ணி ஆகியிருந்தது. இன்று ஆஃபிஸில் என்னைப் பார்த்த‌வுட‌னே, அவ‌னுள் பெருக்கெடுத்து ஓடும் காத‌லை நினைத்து எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. இன்னும் இர‌ண்டு ம‌ணி நேர‌ங்க‌ள் காத்துக் கொள்ளடா க‌ண்ணா! இந்த‌ ராதை உன‌க்குத்தான் என்று க‌ண்ணாடியின் முன் நின்று அவ‌னுட‌னான‌ என் வாழ்க்கையை ந‌ட‌த்திக் கொண்டிருந்தேன்.

இன்று எட்டு ம‌ணிக்கே ஆஃபிஸிற்கு சென்று அவ‌ன் க‌ண்டிப்பாக வ‌ருவான்;காத‌ல‌ர் தினமான‌ இன்று த‌ன் காதலை சொல்வான் என்று காத்திக் கொண்டிருக்கிறேன்.அவ‌ன் என்ன‌ உடையில் இன்று வ‌ருவான்;எப்ப‌டி த‌ன் காத‌லை என்னிடம் சொல்வான் என்று கனவுலகத்தில் மூழ்கிக் கொண்டிருந்ததில்,நேர‌ம் வேறு ப‌த்து ம‌ணி ஆகியிருந்த‌து.

இந்தப் பாடலை வேறு எனக்கு ஏன் பிடித்துத் தொலைத்தது என்று புரியவில்லை. காலையிலிருந்து இந்தப்பாடலை மட்டுமே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.













இரவுகளில் உரு(க்)கும் இசை போன்று அவன் நினைவுகளில் உருகிக் கொண்டிருக்கிறேன்.உண்மையிலேயே என்னை அவ‌ன் காத‌லிக்கிறானா;அப்ப‌டியெனில் இந்நேர‌ம் அவன் ஆஃபிஸ் வந்து தன் காதலை என்னிட‌ம் சொல்லியிருக்க‌ வேண்டுமே என்று என் இத‌ய‌ம் தாறுமாறாக‌ துடிக்க‌ ஆர‌ம்பித்த‌து. அவ‌ன் வ‌ருகைக்காக‌ ஒவ்வொரு நொடியும், ம‌று பிற‌வி எடுத்து காத்துக் கொண்டிருக்கிறேன்.த‌லையில் வைத்திருந்த‌ பூக்க‌ளெல்லாம், என்னைக் கேலி செய்ய வேறு ஆர‌ம்பித்த‌ன. எங்க‌ள் தூக்க‌த்தைப் ப‌றித்து, உயிரைக் கொன்ற‌த‌ன் ப‌ல‌னை உன‌க்கு கொடுக்காமல் விட‌மாட்டோம்;இல்லாவிடில் உன் கூந்த‌லிலிருந்து ஒவ்வொரு பூவாய் கீழே விழுந்து உயிர் மாய்த்துக் கொள்வோம் என்ப‌து போன்று, ஒவ்வொரு பூவாய் உதிர்ந்து உயிரை மாய்த்துக் கொள்ள ஆர‌ம்பித்து விட்ட‌ன‌. நேர‌ம் வேறு ஆறு மணியைக் க‌டந்து விட்டது.இனிமேலும் அவ‌ன் வ‌ருவான் என்ற‌ ந‌ம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் தொடங்கியிருந்தேன்.அவ‌னுட‌ன் நான் பேச‌ நினைத்த‌ வார்த்தைக‌ள் ஒவ்வொன்றும், என் தலையின் மேல் என்னைக் கேலி பேசி சுற்றிக் கொண்டிருந்த‌ன‌. என் க‌ண்ணீர் துளிக‌ள் ஒவ்வொன்றாய்,
இதய‌த்தில் ப‌ட‌ர்ந்து ஆறுத‌ளித்துக் கொண்டிருந்த‌ன.

இந்த‌ ச‌னிக்கிழமை வேளையில்,ஆஃபிஸில் இப்படி த‌னியாய் அம‌ர்ந்து, அட‌க்க‌ முடியாத‌ க‌ண்ணீருட‌ன் அம‌ர்ந்து கொண்டிருப்பதை நினைத்து,எனக்கு என்னாலேயே ஆறுத‌ல் சொல்ல‌ முடிய‌வில்லை.ஓங்கி அழ வேண்டுமென்ப‌து போல் இருந்த‌து.கர்சீஃபில் வந்து விழுந்து கொண்டிருந்த கண்ணீர் துளிகளெல்லாம் நிரம்பி வழிந்து ஷாலை நனைத்துக் கொண்டிருந்தன.கைகளெல்லாம் நடுங்கி,இதயம் பட படவென்று துடிக்கத் தொடங்கியது.எங்கே என் இதயம்,மார்பை உடைத்துக் கொண்டு வெளியே வந்து விழுந்து,அவனுக்கு காயம் ஏற்பட்டு விடுமோ என்றும் தோன்றியது.வீட்டிற்கு சென்றாலாவ‌து நிம்ம‌தியாக‌ அழுது விட்டு வ‌ர‌லாம் என்று ஆஃஸை விட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.

இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிற‌து,அவன் பெயரையே அனுதினமும் உச்சரித்துக் கொண்டிருந்ததில்,இந்தக் கதையின் ஒவ்வொரு பாராவின் முதல் எழுத்தையெல்லாம், அவ‌ன் பெயரின் முதல் எழுத்தை வைத்தே எழுதியிருந்தது.இதயத்திலிருந்து அவனைப் பிடுங்கி எறிய முடியாத ஆத்திரத்தில்,'இ' எழுத்தை 'key board' லிருந்து பலம் கொண்ட மட்டும் பிடுங்கி வெளியே எறிந்தேன்.ப்போது ஏனோ மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாய் ருக்கிறது.

Friday, December 24, 2010

மன் மதன் அம்பு-திரை விமர்சனம்

தன் காதலியான த்ரிஷாவை சந்தேகப்படும் மாதவன்,அவரை உளவு பார்ப்பதற்காக எக்ஸ் மிலிட்டரி ஆஃபிஸர் கமலை அனுப்புகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கமலின் கதை,திரைக்கதை,வசனத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மன்மதன் அம்பு படத்தின் கதை.
தன்னை சந்தேகப்படும் மாதவனை விட்டுப் பிரிந்து,மன நிம்மதிக்காக த்ரிஷா ஐரோப்பா கண்டத்திற்கு பயணம் செல்வதில் படம் ஆரம்பிக்கிறது.தன் நண்பனின் கேன்ஸர் ட்ரீட்மெட்டிற்கான பணம் மாதவனிடமிருந்து கிடைப்பதற்காக,கமல் ஒரு பொய் சொல்கிறார்.கடைசியில் த்ரிஷா மாதவனைக் கைப்பிடிக்கிறாரா இல்லையா என்பதைக் காமெடி,சென்டிமென்ட் முலாம் பூசி கொடுத்திருக்கிறார்கள் கமலும்,ரவிக்குமாரும்.

பையனின் கட்டை விரல் ஆடுவதை வைத்து சங்கீதா,தன் பையன் தூங்கிகிறானா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது.பின்னால் நடந்து வருபவர்க்கு என்னைக் கடந்து போய் கொள்ளுங்கள் என்று கேண்ட் சிக்னல் காட்டுவது.பசங்களுக்கு பெண்களைப் பற்றி 33% அளவிற்காவது தெரியாமல் இருக்குமா என்று கமல் த்ரிஷாவிடம் கேட்பது,ஒரு உயிரும் காதலும் ஊசலாடுகிறது என்று மலையாளத் தயாரிப்பாளர் தன் படத்திற்கான டைட்டிலைப் பிடிப்பது,இன்னைக்கு மாதவன் தன்னிடம் ஸ்வீட்டாகப் பேசினார் என்று த்ரிஷா சொல்வதற்கு, தண்ணியோ என்று சங்கீதா கேட்பது,துப்பறிய ஐடியா கொடுத்தது உங்க அம்மாவா என்று மாதவனின் அப்பா அவரிடம் கவலையாய் கேட்பது,'லைன்ல பிராப்ளம் இருக்கு, கேட்கலை என்று சங்கீதா மாதவனிடம் ஃபோன் பண்னியவுடன் சொல்வது' என்று படத்தின் ப‌ல காட்சிகளில் நம்மை மனம் விட்டு சிரிக்க வைக்கிறார்கள்.அதேபோல் மலையாளத் தயாரிப்பாளர் சங்கீதாவின் பையனைப் பார்த்து 'நீ மலையாளியோ' என்று கேட்பதும், தப்பு கதா என்று கமல் தெலுங்கில் மாதவனிடம் சொல்வதற்கு மாதவன் கமலிடம், தப்பாத்தான் போயிட்டிருக்கு கதை என்பதும் கமல் டச்.

இன்டெர்வல் திருப்பம்,நீலவானம் பாடலை ரிவர்ஸிங் முறையில் படமாக்கியிருப்பது(அதுவும் வெள்ளை சுவரில் தெரியும் பெயின்டிங் கலக்கல்),கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால் கவிதையை ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பது என்று பல இடங்களில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறார்கள்.."சில நினைவுகளை மறைச்சு வைச்சுடலாம்,ஆனால் மறக்க முடியாது","நான் முட்டாள் இல்லை,இல்லைனா அந்த மாதிரி பேசாதீங்க","வீரத்தோட மறுபக்கம் மன்னிக்கிறது,வீரத்தோட உச்சகட்டம் அஹிம்சை","அவனை நோக்கி வந்துக்கிட்டு இருக்காங்க என்று மாதவனிடம் கமல் சொல்வது" என்று வசனகர்த்தா கமல் பல இடங்களில் பளிச்சிடுகிறார்.
படத்தின் பெரிய பலம் படத்தில் நடித்திருக்கும் கமல்,மாதவன்,த்ரிஷா,சங்கீதா,ரமேஷ் அரவிந்த் உள்பட அனைவரின் நடிப்பு. த்ரிஷாவின் குரலும்,டாட்டுவும் நன்றாக இருக்கின்றன.ரமேஷ் அரவிந்தின் சென்டிமென்ட் காட்சிகளும் நன்றாகப் படமாக்கப்பட்டு இருக்கின்றன.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் பெரிதாக கவரவில்லையென்றாலும்,படத்தின் பின்னனி இசை நன்றாக இருக்கின்றது. அதுவும் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் வானில் பறவைகள் பறக்கையில் நீல வானம் பாடலின் இசையை உபயோகித்திருப்பது புத்திசாலித்தனம்.மனுஷ் நந்தனின் கேமரா ஐரோப்பா கண்டத்தை அழகாகப் படம் பிடித்திருக்கிறது.

முதல் பாதி மெதுவாக செல்வது சில நேரங்களில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.,படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.அதேபோல் கமலின் படங்களில் பொதுவாக வரும் ஆள்மாறட்டக் காமெடியும் உண்டு.கடைசியில் மாதவன் சங்கீதாவிடம் காதல் கொள்வதில் எந்த லாஜிக்கும் இல்லை.

படத்தின் அடிநாதமே த்ரிஷா ஆண்கள் பெண்களை எவ்வாறு தப்பாக நினைகிறார்கள் என்று சொல்லும் கவிதையும்,பெண்களுக்கு எந்த மாதிரி ஆண் தேவை என்று கமல் அவரிடம் சொல்லும் கவிதையும்தான்.
மன்மதன் அம்பு-வச்ச குறி தப்பவில்லை(ஓரளவிற்கு).

Monday, December 20, 2010

பூ-மாலை


என்னைப் பார்க்க வரும்
எல்லோரும் கைகளில்
பூக்களையே கொண்டு வருகிறார்கள்!

என் முன்னே
சாவகாசமாக அமர்ந்து
என்னுடன் பேசிக்கொண்டே
பூ தொடுக்க ஆரம்பிக்கிறார்கள்!

அழகிய பூக்களெல்லாம்
மாலையாகத் தொடங்கு முன்பே
இறக்கத் தொடங்கி விடுகிறேன் நான்!

Saturday, December 18, 2010

ஈசன்-திரை விமர்சனம்

தன்னுடைய அக்காவின் வாழ்வை சீரழித்தவர்களை, தம்பி 'சிவனாக' மாறி பழிவாங்கும் 'புதுமையான' கதைதான் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'ஈசன்' படத்தின் கதை.

முதல் பாகம் முழுவதும் அரசியல்வாதியான அழகப்பனின் அட்டூழியங்களும்,அவரின் பையன் வைபவ் அவருடைய நண்பர்களுடன் அடிக்கும் கொட்டங்களும்,அவருக்கும் பிஸினெஸ் மேக்னட்(விஜய் மல்லையா(?)) ஒருவரின் பெண்ணிற்கும் நடக்கும் காதலை நாடகப் பாணியிலும், இரண்டாவது பாதியில் போலிஸான சமுத்திரக்கனி எவ்வாறு 'தொலைந்து போன' வைபவ்வைத் தேடிக் கண்டுபிடிக்கிறார் என்பதையும், அபினயாவின் கிராமத்து வாழ்க்கையையும் கொஞ்சம் விறு விறுப்பாக சொல்ல முயற்சித்து தோற்றிருக்கிறார் சசிக்குமார்.

படத்தின் பெரிய பலவீனமே படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு மெயின் கேரக்டர்களின் வாழ்க்கையையும், மிகவும் விலாவரியாகச் சொல்லியிருப்பது.வைபவ் பார்ட்டிகளுக்கு நண்பர்களுடன் செல்கிறார் என்பதற்கே மூன்று பாடல்கள்(இதுதான் இயக்குனர் அனுராக் காஷ்யப் 'தேவ்‍டியில், சசிக்குமாரைப் பாதித்த விதமா)என்றால் என்ன சொல்வது?.இதற்கு நடுவில் அரசியல்வாதிக்கும்,பிஸினஸ்மேனிற்கும் நடுவில் நடக்கும் ஈகோ வேறு.பின்பாதியில் அபினயாவின் கிராமத்துக் காட்சிகளும்,அவருடைய அப்பாவான மலையாள இயக்குனர் பிளெஸ்ஸிக்கு வரும் சாமி அருள் என்று அதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதினால், இந்தப் பதிவும் படம் போன்றே, படிப்பவர்களை சோர்வடையச் செய்யும்.அதிலும் படம் முடிந்தது என்று நினைக்கையில் வரும் வன்முறைக் காட்சிகள் 'வெந்த புண்ணில் வேல்'

படத்தின் ஒரே ஆறுதல் 'கண்ணில் அன்பை சொல்வாளே' பாடலும்,அப்பாடல் படமாக்கப்பட்ட விதமும்தான்.அபினயாவின் தம்பியாக நடித்திருக்கும் பையனின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.1980 களில் நடப்பது போன்ற கதையானாலும் 'சுப்ரமணியபுரம்' மாடர்னாக எடுக்கப்பட்டிருந்தது. மாடர்ன் உலகத்தைப் பற்றிப் பேச முயற்சிக்கும் 'ஈசன்' ,1980 களில் வெளிவந்த படம் போன்று இருக்கிறது.

இந்தப் படம் பார்க்க வருவதற்கு முன்பு 'சுப்ரமணியபுரம்' படத்தை மறந்துட்டு தியேட்டருக்குள் வாங்க என்று தன்னுடைய பேட்டியில் சசிகுமார் சொல்லியிருந்தார். ஆனால் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு உடனே மறந்துவிடுவது நமக்கு நல்லது.

ஈசன்‍- ஈ.ஈ.ஈ

Wednesday, December 15, 2010

விரலைப் பிரிந்த நகம்



ஏகாந்த இரவு
சுகமான தென்றல் காற்று
மார்கழி மாதப் பனி
புதிதாய் வாங்கிய புத்தக மணம்
இளையராஜாவின் இனிமையான இசை
மனதைத் தூண்டும் பெண்களின் பேச்சு
நண்பர்களின் உற்சாக அரவணைப்பு
மேலதிகாரியின் பாராட்டுப் பத்திரம்
உற்றார்களின் உண்மையான அன்பு
இவை எல்லாவற்றையும்
ஒரே நொடியில் ம‌றக்கச் செய்து விடுகிறது
நீ எனைப் பிரிந்த தருணம்

Tuesday, December 14, 2010

Top 10 Songs-December

1) அய்யய்யோ-‍‍ஆடுகளம்-‍‍இசை:G.V.பிரகாஷ்குமார்

2) நெஞ்சில் நெஞ்சில்-‍‍எங்கேயும் காதல்-‍‍இசை:ஹாரிஸ் ஜெயராஜ்

3) யாரது யாரது-‍‍காவலன்-‍‍இசை:வித்யாசாகர்

4) என் நெஞ்சு-‍‍உத்தமபுத்திரன்-‍இசை:விஜய் ஆண்ட‌னி

5) மேகம் வந்து போகும்-‍‍ மந்திரப்புன்னகை-‍‍இசை:வித்யாசாகர்

6) திக்கி திக்கி‍‍‍-‍‍நகரம்-‍‍இசை:தரன்

7) நீல வானம்-‍‍மன்மதன் அம்பு-‍‍இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

8) சின்ன சின்ன காட்டுலே-‍‍தென்மேற்கு பருவக்காற்றே-‍‍இசை: NR.ரகுநாதன்

9) பூவே பூவே‍‍ -‍‍சிங்கம்புலி-‍‍இசை:மணிசர்மா

10) கண்ணில் அன்பை-‍‍ஈசன்-‍‍இசை:ஜேம்ஸ் வசந்தன்

Tuesday, December 7, 2010

ரத்த சரித்திரம்-திரை விமர்சனம்


இரு இளைஞர்களின் வாழ்வில் அரசியல் உள்ளே நுழையும்போது அவர்களின் வாழ்வு எப்படி சின்னா பின்னமாகிறது என்பதுதான் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் சூர்யா,விவேக் ஓபராய் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'ரத்த சரித்திரம்' படத்தின் கதை.

கோட்டா சீனிவாச ராவின் சூழ்ச்சியால் தன் அப்பாவை இழக்க நேரிடும் விவேக் ஓபராய், ரவுடியாகவும் பின்னர் அரசியல்வாதியாகவும் மாற நேரிடுகிறது.அவரால் தன் குடும்பத்தை இழக்க நேரிடும் சூர்யா,விவேக் ஓபராயை எப்படி பழிவாங்குகிறார் என்பதை ராம்கோபால் வர்மா,ரத்தமும் சதையுமாக கொடுத்திருக்கிறார்.

குறைந்தபட்சம் இரண்டு கொலைகளாவது பண்ணியிருக்கும் ரவுடிகளுக்குக் கூட,படத்தில் வன்முறை கொஞ்சம் அதிகம் இருப்பது போல் தோன்றும்.முதல் முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கும் சூர்யா நன்றாகவே நடித்திருந்ந்தாலும்,ஒரு வேளை விக்ரம் நடித்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.பிரியாமணியை விட,ராதிகா ஆப்டேவிற்குத்தான்(பொண்ணு அவ்வளவு அழகு!) நடிப்பில் ஸ்கோர் பண்ணுவதற்கு வாய்ப்பு அதிகம்.

படத்தின் பெரிய பலமே சூர்யா,விவேக் ஓபராயின் நடிப்பும்,படத்தில் வரும் வசனங்களும்தான். கோட்டா சீனிவாச ராவ் இறந்தவுடன் அவர் வீட்டு நாய் குரைப்பது, சூர்யாவிற்கு பின்னால் பிரியாமணி நிற்பது போலவும், ஆனால் அவர் முன்னாடி பார்த்து பேசுவதும்,கடைசியில் சூர்யாவின் பின்னால் தெரியும் பிரியாமணியின் பிம்பம் கண்ணாடியிலிருந்து தெரிவது போன்ற காட்சி அமைப்பு ஆகட்டும், விவேக் ஓபராய் சூர்யாவிடம் என்னைக் கொல்றதுக்கு கனவு கண்டுட்டே இரு என்பதும் அதற்கு சூர்யா அவரிடம் 'முடிஞ்சா நீ தூங்கு' என்பதும் ராம் கோபால் வர்மா டச். அதே போல் படத்தில் சூர்யா பேசும் வசனங்களெல்லாம் அருமை. "நான் சாகப் பயப்படலை;ஆனால் அவன் சாகுறதுக்கு முன்னாடி செத்துடுவனோன்னு பயமா இருக்கு", "யாருக்காகவெல்லாம் அவனைப் பழிவாங்கக் கூடாதுன்னு நினைச்சனோ அவங்க எல்லோரையும் கொன்னுட்டான்", "பாடிகார்டோட வேலை உயிரோட இருக்கிறவனுக்குப் பாதுகாப்பு கொடுப்பது,செத்தவனுக்காக உயிரைக் கொடுப்பதில்லை" என்று வசனகர்த்தாவின் பேனா நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

ஒவ்வொரு காட்சியையும் பரபரப்பாகவும்,அதே நேரத்தில் மெதுவாகவும் நகர்த்திச் செல்லும் ராம்கோபால் வர்மாவின் யுக்தி,இந்தப் படத்திற்குப் பெரிதும் உதவவில்லை என்றே தோன்றுகிறது.ஆரம்பத்தில் விறு விறுப்பாக செல்லும் படம்,அதன் பின் நம் பொறுமையைச் சோதிக்கிறது.கடைசியில் பத்து வருடங்களுக்கு முன் வெளிவந்த டப்பிங் படத்தைப் பார்க்கும் உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது.

ரத்த சரித்திரம்-வெறும் ரத்தம் மட்டும்தான்

Tuesday, November 30, 2010

மைனா-திரை விமர்சனம்


ஒரு மலை கிராமத்தில் வசிக்கும் சுருளிக்கும்,மைனாவிற்கும் இடையேயான சிறு வயது நட்பு,அவர்கள் வளர்ந்த பிறகு காதலாக மாறுகிறது.அவர்களுடைய அந்த அந்நியோன்யமான காதல் கடைசியில் என்னவாகிறது என்பதுதான் பிரபு சாலமன் இயக்கத்தில் 'மைனா' படத்தின் கதை.

சுருளி,மைனா இவர்கள் இருவருக்குமிடையேயான காதல் அவ்வளவு அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.சுருளிக்கு மைனா மேல் இருககும் காதல் பெரிதா அல்லது மைனாவிற்கு சுருளி மேல் இருக்கும் காதல் பெரிதா என்று பட்டிமன்றமே வைக்கலாம்.மைனாவாக நடித்திருக்கும் அமலாபாலின் கண்களைப் போன்று பவர்ஃபுல்லான கண்களை உடைய எந்த நடிகையையும் சமீபத்தில் பார்த்தாக ஞாபகத்தில் இல்லை(கடைசியாக 'இவன்' படத்தில் சௌந்தர்யாவின் கண்கள்).அவருடைய அந்த அழகான பெரிய விழிகனுள்ளே,சுருளியுடன் சேர்ந்து நாமும் உள்ளே விழுந்து விடுகிறோம்.சுருளி,மைனாவாக நடித்திருக்கும் விதார்த்தும்,அமலாபாலும் பொருத்தமான தேர்வுகள்.

மைனா பரிட்சைக்குப் படிக்கையில்,சுருள் சைக்கிள் டைனமோ மூலம் வெளிச்சம் கொண்டு வருவதும்,மின் மினிப் பூச்சிகளைப் பாட்டிலில் அடைத்து வெளிச்சம் உருவாக்குவதும் கவிதையான காட்சிகள்.வெள்ளந்தியாக இருக்கும் சுருளியால் காப்பற்றப்படும் போலிஸ்காரர்கள் அவருக்கு நன்றி சொல்லும் இடம் நெகிழ்ச்சி.தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும்,கைதிகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் போலிஸ்காரர்களின் சிரமங்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

தம்பி ராமையாவின் காமெடி படத்தின் இறுக்கத்தைக் குறைப்பதில் பெரிதும் உறுதுணை யாய் இருக்கிறது.சுருளியும்,தம்பி ராமையாவும் எச்சில் படாமல் பீடி புகைப்பதும்,சுருளியும் மைனாவும் போலிஸ்காரராக இருக்கும் தம்பி ராமையாவிற்கு கணக்கு நன்றாக வருகிறது,அவரையே நாம் ஆரம்பிக்கப்போகும் கடைக்கு கணக்குப் பிள்ளையாக வைத்துக் கொள்ளலாம் என்று கலாய்ப்பதும் புன்னகை புரிய வைக்கும் இடங்கள்.காமெடிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் உடனடியாக வில்லத்தனத்தை தன் முகத்தில் கொண்டு வருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் தம்பி ராமையா.தேனியிலிருந்து மூணாறு செல்லும் அழகான,ஆபத்தான பாதையை அழகாகப் படம் பிடித்திருக்கிறது காமெரா.இமானின் பாடல்களும்,பின்னணி இசையும் நன்றாக இருக்கின்றன.

படத்தின் இடைவேளைக்குப் பிறகு,மலை கிராமத்திலிருந்து தேனிக்கு வரும் காட்சிகள் கொஞ்சம் இழுவை.சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் "ஒரு மனிதன் மரணத்தின் விளிம்பு வரை செல்கையில்,அவனுக்குள்ளிருக்கும் கோபம்,வெறி,வன்முறை போன்ற கெட்ட குணங்களெல்லாம் மறைவது போல்,அவனுக்கு நெருக்கமான ஒருவரின் மரணத்தில் இந்த கெட்ட குணங்களெல்லாம் வெளிப்பட்டு விடுகின்றன" என்பதை உணர்த்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் படத்தின் இயக்குனர் பிரபு சாலமன்.

மைனா-படத்தின் தலைப்பே போலவே படமும்.

Wednesday, October 20, 2010

பிருந்தாவனம்-திரை விமர்சனம்(தெலுங்கு)

கார்த்திக்,கௌசல்யா நடிப்பில்,செல்வா இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வந்த 'பூவேலி' படத்தை, அதிகமான மசாலா தூவி இயக்குனர் வம்சி தெலுங்கில் கொடுத்திருக்கும் படம்தான் 'பிருந்தாவனம்'.

சமந்தாவைக் காதலித்துக் கொண்டிருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு,ஒரு சந்தர்ப்பத்தில் காஜலின் காதலனாக நடிக்க நேரிடுகிறது.ஆரம்பத்தில் ஜூனியர் என்.டி.ஆரை வெறுக்கும் காஜல் குடும்பத்தினர் படிப்படியாக ஜூனியர் என்.டி.ஆர் மேல் அன்பு பாராட்ட ஆரம்பிக்கின்றனர்.ஜூனியர் என்.டி.ஆருக்கு காஜல் மேல் காதல் வரும் நேரத்தில்,சமந்தாவும் காஜலின் குடும்பத்திற்குள் நுழைகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் பிருந்தாவனம் படத்தின் கதை.

கார்த்திக் வேடத்தில் ஜூனியர் என்.டி.ஆரை நினைத்துப் பார்ப்பதற்கே கொடுமையாக இருந்தாலும்,சில காட்சிகளில் அவருடைய துள்ளலான நடிப்பும்,டான்ஸும் நன்றாக இருக்கின்றன.படத்தில் கஜோலின் வீடாகக் காட்டப்படும் செட்டிங்ஸும் அந்த கிராமமும் அவ்வளவு அழகாக இருக்கின்றன.இடைவேளைக்குப் பிறகு பிரமானந்தமும்,வேணுவும் அடிக்கும் காமெடிகள் அதகளம்.படத்தில் வரும் 'சில' சென்டிமென்ட் காட்சிகள் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

அழகான பெண்ணின் இரு கன்னங்களில் எந்த கன்னத்தில் முத்தமிடுவது என்று நாம் தடுமாறுவது போல்,காஜலும்,சமந்தாவும் வரும் காட்சிகளில் யாரைப் பார்த்துக் கொண்டிருப்பது என்று தெரியவில்லை.இவர்கள் இருவரும் வரும் காட்சிகளிலெல்லாம் காமராமேனுக்கு லைட்டிங் வைத்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.சமந்தாவை விட காஜலுக்குத்தான் ஸ்கோப் அதிகம்.அவருடைய சோகமான முகமும் அவருடைய வேடத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது.சோட்டா கே.நாயுடுவின் ஒளிப்பதிவுஅட்டகாசம்.தமனின் இசையும் பரவாயில்லை ரகம்.

அழகான காதல் கதையை அதிகமான மசாலா தூவி இந்த அளவிற்கு சிதைத்திருக்க வேண்டாம்.பூவேலியில் ஹீரா,கார்த்திக்கை ஆரம்பத்தில் காதலிக்காமல் இருப்பதால்,கார்த்திக்கிற்கு கௌசல்யா மேல் காதல் வருவது இயல்பாக இருந்தது. சமந்தாவும் ஜூனியர் என்.டி.ஆரும் ஏற்கெனவே காதலித்துக் கொண்டிருக்கையில்,ஜூனியர் என்.டி.ஆருக்கு காரணமேயில்லாமல் காஜல் மேலும் காதல் வருவது கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணிடக்கூடாது என்று அவர் கங்கனம் கட்டிக் கொண்டிருந்தது போல்தான் தெரிகிறது.

பிருந்தாவனம்-'கொஞ்சம்' ரணம்.

Saturday, October 2, 2010

எந்திரன் ஸ்பெஷல்(5) - ‍எந்திரன் திரை விமர்சனம்

இரும்பிலே செய்யப்பட்ட 'ரோபோ'விற்கு மனிதனுக்கு இருப்பது போன்று உணர்ச்சிகளைப் புகுத்துகையில்,மற்ற எல்லா உணர்ச்சிகளையும் எளிதில் சமாளித்துவிடும் ரோபோ,மனிதர்களைப் போலவே காதலை சமாளிக்க முடியாமல் எவ்வாறு தடம் பிறழ்கிறது என்பதுதான் ரஜினி,ஐஸ்வர்யாராய் நடிப்பில்,ரகுமான் இசையமைப்பில்,ஷங்கர் இயக்கி வெளிவந்திருக்கும் 'எந்திரன்' படத்தின் கதை.

விஞ்ஞானத்தின் மூலமாக நல்ல விசயங்களைப் பண்ண முடியும் என்பதைப் படத்தின் முதல் பாதியிலும்,கெட்ட விசயங்களையும் செய்ய முடியும் என்பதைப் படத்தின் இரண்டாம் பாதியிலும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.ரஜினி படங்களில் பொதுவாக வரும் நம்ப முடியாத சண்டைக் காட்சிகளை,இதில் ரோபாவாய் இருக்கும் ரஜினி பண்ணுவ‌தாகக் காட்டியிருப்பதில் ஷங்கரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.பொதுவாக ஷங்கரின் படங்களில் அவரின் கதாநாயகர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் வருவது போல்,இதிலும் ரஜினி மூன்று வேடங்களில்(விஞ்ஞானி,நல்ல ரோபோ,கெட்ட ரோபோ) வந்து கலக்குகிறார்.ரஜினியின் உழைப்பைப் பார்க்கும்போது அவருக்கு 61 வயதாகிறது என்பதை நம்புவதற்கு மிகவும் கடினமாக உள்ளது.குறிப்பாக ரோபாவாக வரும் ரஜினியின் உடலசைவுகள் க‌லக்கல்.

படத்தின் இரண்டாம் பாதியில் கெட்ட ரோபோ செய்யும் அட்டகாசகங்கள் சில இடங்களில்'ஆளவந்தானை' ஞாபகப்படுத்தினாலும்,இந்திய சினிமாவிலும் பணம் செலவழித்து ஹாலிவுட் தரத்தைக் கொண்டு வர முடியும் என நிரூபித்திருக்கிறார்கள்.அதேபோல் ரோபோ அட்டூழியம் செய்வதாக வரும் காட்சிகளில்,டைரக்டரின் கிரியேட்டிவிட்டிக்கும்,டெக்னிக்கல் டீமிற்கும் ஒரு சபாஷ்.கெட்ட ரோபாவாக வரும் ரஜினி,மூன்று முகம் அலெக்ஸ்பாண்டியனைக் ஞாபகப்படுத்தினாலும்,முப்பது வயதில் தான் பண்ணியதை,தன்னுடைய அறுபது வயதிலும் பண்ண முடியும் என்பதை ரஜினி நிரூபித்திருக்கிறார்.விஞ்ஞானியாக வரும் ரஜினியைப் பார்க்கும்போது மட்டும் பாவமாக இருக்கிறது.

ஷங்கரின் இயக்கம் பல இடங்களில் பளிச்.ஆயுத பூஜையில் மற்ற ஆயுதங்களோடு ரோபோ ரஜினியையும் உட்கார வைப்பது,நல்ல ரோபோ மனித உணர்ச்சி வந்தவுடன்,தன்னால் இறந்து போன பெண்ணின் சமாதியில் சென்று மலர் வைப்பது,ரோபோ ரஜினி பிரசவம் செய்யும் காட்சி என்று படம் முழுவதும் தன் ஆளுமையைக் காட்டியிருக்கிறார்."கணிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப் பொறி நீ","கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்கள் மெஷினையும்,நான் தனிமையையும் கட்டிக்கிட்டு அழனுமா?"அட்ரஸ் கேட்கும் நபரிடம் ரஜினி தன் ஐ.பி அட்ரஸ் சொல்வது,கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு ரோபோ கொடுக்கும் பதில் என்று பல இடங்களில் படத்தின் வசனங்களில் மறைந்த 'சுஜாதா' பளிச்சிடுகிறார்.ரத்ன வேலுவின் கேமராவும்,சாபு சிரிலின்(ப‌ட‌த்தின் ஒரு காட்சியில் வ‌ருகிறார்) செட்டிங்ஸும் ந‌ன்றாக‌ இருக்கின்றன.

ரோபாவாக வரும் ரஜினி எப்படி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதை,ஐஸ்வர்யாராய் தன்னிடம்தான் சொல்கிறார் என்று தப்பாக நினைத்துவிட்டார் போல்.ரஜினியைத் தவிர படத்தில் வரும் வேறு நடிகர்கள் யாவரும் மனதில் நிற்கவில்லை.ரகுமானின் பின்னணி இசை பல இடங்களில் நன்றாகவும்,சில இடங்களில் ஓவர் டோஸாகவும் தெரிகிறது.கலாபவன் மணி வரும் காட்சிக்கு கத்திரி போட்டிருக்கலாம்.இரண்டாம் பாதியில் வரும் சில கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருந்திருக்கலாம்.

'அவதார்' திரைப்படம் டெக்னாலஜியில் உலக சினிமாவின் உச்சம் என்று சொன்னால்,எந்திரனை இந்திய சினிமாவின் உச்சம் என்று தாராளமாக சொல்லலாம்.

எந்திர‌ன்-மன‌தை ம‌ய‌க்கும் ம‌ந்திர‌ன்.

Friday, October 1, 2010

எந்திரன் ஸ்பெஷல்(4)-ர‌ஜினிகாந்த்

தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டாரய் கோலோச்சிக் கொண்டு இருக்கும் ரஜினி,தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராய் மாறி,இப்போது இந்தியிலும் பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய 'எந்திரன்' படம் மூலமாக நுழைகிறார்.

எனக்கு சின்ன வயதில் மிகவும் பிடித்த நடிகரென்றால் அது ரஜினிதான்(இப்போது கமல்).அப்போதெல்லாம் ரஜினி படங்கள் பார்த்தால் வீட்டிற்கு நடந்து கூட வரத் தோன்றாது.தியேட்டரிலிருந்து வீட்டிற்கு ஓடித்தான் வரத் தோன்றும்.ரஜினியின் ஆக் ஷன் படங்கள் பார்த்துவிட்டு எனக்குள் ரத்த ஓட்டம் அதிகமாகி,புதுவித உற்சாகமும் உத்வேகமும் கிடைக்கும்.சின்ன வயதில் பார்த்த படங்களில் நான் போட்ட சவால்,கழுகு,மாவீரன்,நல்லவனுக்கு நல்லவன்,படிக்காதவன் போன்ற படங்களெல்லாம் மிகவும் பிடித்திருந்தன.அதன்பின்னர் வந்த குரு சிஷ்யன்,தர்மதுரை,மன்னன்,தளபதி படங்கள் வரை ரஜினி படங்களைப் பார்ப்பது போன்ற மனதுக்கு நிறைவான ஒரு விசயம் அந்த காலகட்டத்தில் வேறு எதுவும் இல்லை.

நான் பார்த்த ரஜினியின் படங்கள் 'கம்பம்' சக்திபாலா,'தேனி' கிருஷ்ணா,'மதுரை' குரு,'சென்னை' ஆல்பர்ட் முதற்கொண்டு எங்கு பார்த்தாலும் ரசிகர்களின் உற்சாகம் ஒரே மாதிரிதான் இருந்திருக்கின்ற‌து.ரஜினியின் ரசிகர்களுக்கு அவருடைய படங்களைப் பார்பதை விட சந்தோஷத்தைத் தரக் கூடிய வேறு விசயங்கள் மிகவும் குறைவுதான்.நான் இப்போது வரை ரஜினியிடம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே விசயம் அவரால் எப்படி மக்களின் மனதை எளிதாகப் புரிந்து கொண்டு அவர்கள் விரும்பும்படி தன்னுடைய படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க முடிகின்றது என்பதுதான்.பாட்ஷாவிற்கு பிறகு படையப்பா தவிர்த்து வேறு எந்த ரஜினியின் படங்களும் எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்,அவர் கடந்த 17 வருடங்களில் கொடுத்த ஃபிளாப் படங்கள் மிகவும் குறைவு.தன்னுடைய ரசிகர்களுக்கும்,பெரும்பாலான மக்களுக்கும் எந்த மாதிரியான படங்கள் பிடிக்கும் என்று சரியாகத் தெரிந்துகொண்டு,அதுபோன்ற‌ படங்களில் நடிப்பது சாதரணமான விசயம் கிடையாது.பாபா படத்தைக் கூட ரஜினி தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,அந்தப் படம் வெளிவருவதற்கு சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றி பெற்ற 'தாலி காத்த காளியம்மன்' போன்ற படங்களோ என்று தோன்றுகிறது.(சாமி படங்களுக்கு மார்க்கெட் வந்து விட்டது என்று நினைத்து பாபா போன்ற படத்தில் நடித்தாரோ என்னவோ).

அதேபோல் பாபா படத்தின் தோல்விக்குப் பிறகு,படத்தில் தனக்குப் பெரிய மெயின் ரோல் இல்லையென்றாலும்,மக்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து எடுத்த சந்திரமுகி,மறுபடியும் மக்களின் ரசனையை சரியாகப் புரிந்து கொண்டவர் ரஜினி என்பதைக் காட்டியது.எந்த மாதிரி படங்களில் இனிமேல் நடிப்பது என்று ரஜினி திணறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்த சரியான இயக்குனர்தான் ஷங்கர்.இன்றைய‌ கால‌க‌ட்டத்தில் ஷ‌ங்க‌ர் போன்று ம‌க்க‌ளுக்குப் பிடித்தாற்போல் ப‌ட‌ங்க‌ள் இய‌க்கும் இய‌க்குன‌ர்க‌ள் மிக‌வும் குறைவு.ர‌ஜினிக்கு,ஷ‌ங்க‌ர் போன்ற‌ ஒரு இய‌க்குன‌ர் தேவைப்ப‌ட்டார்.ஷ‌ங்க‌ருக்கும்,ர‌ஜினியைப் போன்ற‌ ஒரு பெரிய‌ ந‌டிக‌ர் தேவைப்ப‌ட்டார்.இந்த‌ இரு பெரும் ச‌க்திக‌ளும் சேர்ந்த‌தால்தான் கலாநிதிமாற‌னால் '150' கோடிக்கும் அதிக‌மான‌ ப‌ட்ஜெட்டில் ஒரு ப‌ட‌த்தைத் த‌யாரிக்க‌ முடிந்திருக்கின்ற‌து.

ர‌ஜினியிடம் அவ‌ரின் எளிமை,அட‌க்க‌ம்,ப‌ந்தா ப‌ண்ணாம‌ல் இருப்ப‌து,பிடித்திருந்தால் ம‌ற்ற‌வ‌ர்களை உட‌ன‌டியாக‌ப் பாராட்டுவ‌து,க‌ஷ்ட‌த்தில் இருக்கும் தயாரிப்பாளர்க‌ளுக்கு ப‌ட‌ம் ப‌ண்ணிக் கொடுப்ப‌து என்று ப‌ல‌ விச‌ய‌ங்க‌ள் பிடித்திருந்தாலும் அவ‌ரிட‌ம் பிடிக்காத‌ ஒரே விச‌ய‌ம் த‌ன்னுடைய‌ ப‌ட‌ம் ந‌ன்றாக‌ ஓட‌ வேண்டுமென்ப‌த‌ற்காக, த‌ன் ப‌ட‌ம் வெளிவ‌ரும் நேர‌ங்க‌ளில் எல்லாம் தேவையில்லாம‌ல் பேசி மாட்டிக்கொள்வ‌து.முன்பு த‌ன்னுடைய‌ ப‌டங்க‌ளில் அர‌சிய‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ங்க‌ளைப் பேசி தன்னுடைய படங்களின் மேல் எதிர்பார்ப்பை உண்டு ப‌ண்ணிக் கொண்டிருந்தார்.அப்புற‌ம் அவ‌ர் அர‌சிய‌லுக்கு வ‌ர‌வே மாட்டார் என்று தெரிந்து விட்ட‌ இன்றைய‌ நிலையிலும் கூட, ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பிற்காக‌ எந்திர‌ன் ஆடியோ கேசட் ரிலீஸ் ஃப‌ங்ச‌னில் ஷ‌ங்க‌ர்,க‌லாநிதிமாற‌ன்,ர‌குமான் போன்ற‌வ‌ர்களின் கூட்ட‌ணியில் வெளிவ‌ரும் எந்திர‌ன் ப‌ட‌த்தை மன‌தில் வைத்துக் கொண்டு "இந்த‌ மாதிரி ஒரு கூட்ட‌ணி கிடைத்தால் 234 தொகுதிக‌ளிலும் நிற்க‌லாம்' என்று பேசுவ‌தெல்லாம் ர‌ஜினியின் சுய‌ந‌ல‌த்தைத்தான் காட்டுகிற‌து.

த‌மிழ் சினிமாவில் ம‌ட்டும‌ல்ல‌ தென் இந்திய சினிமாவிலேயே த‌விர்க்க‌ முடியாத‌ ச‌க்தியாக‌ விளங்கும் ர‌ஜினி,த‌மிழ் ப‌ட‌ங்க‌ளுக்கான‌ மார்க்கெட்டை உல‌க‌ அளவில் ப‌ர‌ப்பிய‌தில் முக்கிய‌மான‌வ‌ர்.இன்று ர‌ஜினியின் ப‌ட‌ங்க‌ள் இந்தியாவில் உள்ள‌ அத்த‌னை முக்கிய‌மான‌ ந‌க‌ர‌ங்க‌ளிலும் த‌மிழிலேயே ரிலிஸாகிக் கொண்டிருக்கின்ற‌ன‌.இந்தியாவில் உள்ள வேறு எந்த‌ ந‌டிக‌ர்க‌ளையும் விட‌ ர‌ஜினியின் ப‌ட‌ங்க‌ளுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பு மிக‌வும் அதிக‌ம்.இனிமேல் எந்திர‌ன் போன்ற ஒரு ப‌ட‌த்தில் தற்போது 61 வ‌ய‌தாகும் ர‌ஜினி நடிப்ப‌து இயலாத‌ காரிய‌ம் என்றே தோன்றுகிற‌து.அதேபோல் ர‌ஜினியும் த‌ன‌க்குக் கிடைத்த‌ இந்த‌ வாய்ப்பை முழுமையாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன்.ரோபோ போல் வ‌ரும் ர‌ஜினியையும்,வில்ல‌னாக‌ வ‌ரும் ர‌ஜினியையும் பார்க்கையில்,ர‌ஜினி த‌ன்னுடைய‌ ர‌சிக‌ர்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்லாது அனைத்து த‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் ஒரு பெரிய‌ விருந்தை எந்திர‌னில் குடுப்பார் என்ற‌ ந‌ம்பிக்கையில், எந்திர‌ன் திரைப்ப‌ட‌ம் மாபெரும் வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள்.

Thursday, September 30, 2010

எந்திரன் ஸ்பெஷல்(3)-‍ஷ‌ங்க‌ர்

ஷங்கர் இயக்கத்தில் அவரின் பத்தாவது படமாக‌ 'எந்திரன்' நாளை வெளிவருகிறது.ஷங்கரைப் பொறுத்தவரை அவர் பெரும் பொருட்செலவில் தன்னுடைய படங்களை எடுத்து வந்தாலும்,அவர் தமிழில் எடுத்த அனைத்து படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றே வருவதால் அவரை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் '150' கோடிக்கும் மேற்பட்ட செலவில் வெளிவரும் 'எந்திரன்'.

ஷங்கருக்கு முன்னாடியே பிரமாண்டமான படங்களை இயக்கிய இயக்குனர்கள் பலர் தமிழில் இருந்தாலும்,அவரளவிற்கு தன்னுடைய படங்களில் டெக்னாலஜியைப் புகுத்திய இயக்குனர்கள் மிகவும் குறைவு.தன்னுடைய முதல் படமான 'ஜென்டில்மேன்' தொடங்கி அவர் பண்ணிக் கொண்டிருக்கும் டெக்னிக்கலான சில விசயங்கள்,பெரும் மார்க்கெட்டைக் கொண்டிருக்கும் இந்திப்படங்களில் கூட பொதுவாக வருவதில்லை.தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் டெக்னிக்கலாகப் புது புது விசயங்களை அறிமுகப்படுத்தும் ஷங்கர்,இப்போதும் வேறு எந்த இந்திய மொழிகளிலும் முயற்சிக்காத பல விசயங்களை தன்னுடைய 'எந்திரன்' படம் மூலமாகக் கொண்டு வருகிறார்.

தென்னிந்தியாவில் உள்ள மற்ற இயக்குனர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு பெருமை ஷங்கருக்கு உண்டு.அவர் தமிழ் தவிர்த்து வேறு எந்த தென்னிந்திய மொழிகளிலும் இதுவரை படங்கள் இயக்கியதில்லை.தெலுங்கில் படம் பண்ணச் சொல்லி எத்தனையோ தெலுங்குப்பட தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியும் ஏனோ இதுவரை மறுத்தே வந்திருக்கிறார்.ஆனாலும்,எந்த ஹீரோவைக் கொண்டு ஷங்கர் படங்கள் வெளிவந்தாலும் தமிழ்,ஆந்திரா,கேரளம்,கர்நாடம் என்று அனைத்து மாநிலங்களிலும் அவர் படங்களுக்குப் பெரிய வரவேற்பு இருக்கிறது.இதே போன்ற வரவேற்பு மணிரத்னம் படங்களுக்கும் இருக்கிறது என்றாலும் அவர் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளில் தலா ஒரு படமாவது இயக்கியுள்ளார்.அதேபோன்று சிவாஜி படத்திலிருந்தே ஷங்கரின் படங்களுக்கு இந்தியிலும் மார்க்கெட் உருவாகி வருவது ஒரு நல்ல விசயம்.இந்த மாதிரி வரவேற்பு இருந்தால் மட்டுமே ஒரு இயக்குனரால் மிகப் பெரும் பொருட் செலவில் தன்னுடைய படங்களை எடுக்க முடியும்.இந்த மாதிரி ஒரு நிலையை அடைவது எளிதான விசயமும் அல்ல.எல்லா மொழிகளிலும் தன்னுடைய படங்களுக்கான மார்க்கெட் வர வேண்டுமென்பதற்காகத்தான் ராம் கோபால் வர்மா, மோகன்லாலை தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பதன் மூலம் கேரளாவிலும்,கன்னட நடிகர் சுதீப்பை தன்னுடைய இந்திப் படங்களில் ஹீரோவாகப் போடுவதன் மூலம் கர்நாடகாவிலும்,இப்போது தன்னுடைய படத்தில் சூர்யாவை நடிக்க வைப்பதன் மூலமாக தமிழிலும் ஒரு இடத்தைப் பிடிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்.கவுதம் வாசுதேவமேனன் கூட தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுவதற்காக இரண்டு தெலுங்கு படங்கள் வரை இயக்கிவிட்டார்.ஆனால் ஷங்கர் தான் எடுக்கும் தமிழ் படங்களின் மூலமாகவே,அப்ப‌டங்க‌ளின் பிர‌மாண்ட‌த்தினாலும்,ப‌ட‌த்தின் க‌தைக்க‌ரு அனைத்து‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் பொதுவாக‌ இருப்ப‌து போல் பார்த்துக்கொள்வதாலும்,அவ‌ருடைய‌ ப‌டங்க‌ள் ம‌ற்ற‌ மொழிக‌ளில் 'ட‌ப்' செய்ய‌ப்ப‌ட்டே ந‌ல்ல‌ இலாப‌த்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற‌ன.

ஷ‌ங்க‌ர் ப‌ட‌த்தின் ஹீரோக்க‌ள் பெரும்பாலும் இர‌ட்டை வேட‌ங்க‌ளிலோ அல்ல‌து குறைந்த‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு வித‌ கெட்ட‌ப்புக‌ளிலாவ‌துதான் அவ‌ர் இயக்கிய‌ ப‌ட‌ங்க‌ளில் வ‌ந்திருக்கிறார்க‌ள்(காத‌ல‌ன்,பாய்ஸ் த‌விர்த்து).த‌ன்னுடைய‌ ப‌ட‌ங்க‌ளில் இந்தியாவில் சிறந்து விளங்கும் டெக்னீஷிய‌ன்க‌ளைத்தான் பய‌ன்ப‌டுத்தி வ‌ந்திருக்கிறார்.ர‌ஜினி ஒரு முறை ஷ‌ங்க‌ர் ப‌ற்றிக் குறிப்பிட்ட‌துதான் ஞாப‌க‌த்திற்கு வ‌ருகிற‌து."ஷங்க‌ர் ஒவ்வொரு துறைக‌ளிலும் சிற‌ந்த‌ ஆட்களாகத் த‌ன் ப‌க்க‌த்தில் வைத்துக் கொண்டிருப்ப‌தால்தான் அவரால் தொட‌ர்ந்து வெற்றி பெற‌ முடிகிற‌து".

ஷ‌ங்க‌ர் இய‌க்கிய‌ ப‌ட‌ங்க‌ளிலேயே எனக்குப் பிடிக்காத‌ ப‌ட‌மென்றால் அது சிவாஜிதான்.சிவாஜிப் படத்தை படம் வந்த இரண்டாவது நாளே பார்த்தாலும் கூட,இடைவேளை வ‌ரை அந்த‌ப் ப‌ட‌த்தை பார்த்தது மிக‌க் கொடுமையாக‌ இருந்தது.ஏதோ இடைவேளைக்குப் பிறகு படம் 'கொஞ்ச‌ம்' பரவாயில்லாம‌ல் இருந்த‌தாலும்,ர‌ஜினி ந‌டித்திருந்ததாலுமே அந்த‌ப் ப‌ட‌ம் வெற்றி பெற்றது என்று நினைக்கிறேன்.அதுவும் ர‌ஜினி போன்ற ஒரு ந‌டிக‌ரை வைத்து ஷங்க‌ர் அப்ப‌டி ஒரு 'மொக்கைப்' ப‌டம் கொடுத்த‌து கொஞ்ச‌ம் அதிர்ச்சிதான்.

க‌ம‌ல்,ஷாருக்கான் ந‌டிப்ப‌தாக‌ இருந்து இப்போது ர‌ஜினியை வைத்து ஷ‌ங்க‌ர் 'எந்திர‌ன்' ப‌டத்தை இய‌க்கியிருக்கிறார்.பொதுவாக ஷங்கர் தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் மிகுந்த இடைவெளி விடுவார்.ஆனால் சிவாஜி முடித்த கையோடு எந்திரன் படத்தை உடனடியாக ஆரம்பித்தது ஆச்சரியம்தான்.ஷங்க‌ருக்கும் இந்த‌ப்ப‌ட‌ம் க‌ன‌வுப் ப‌ட‌மாக‌ இருப்ப‌தால் சிவாஜி ப‌ட‌த்தில் அவர் ப‌ண்ணிய‌ த‌வறையெல்லாம் நிவ‌ர்த்தி ப‌ண்ணி,இந்த‌ப் ப‌ட‌த்தை மிக‌வும் ந‌ல்ல‌ வித‌மாக‌க் கொடுத்திருப்பார் என்று நம்புகிறேன்.இந்தப் படத்தைத் தவற விட்டதை நினைத்து ஷாருக்கான் கண்டிப்பாக வருத்தப்படுவார் என்றும் தோன்றுகிறது.'எந்திர‌ன்' ப‌டமும் மிக‌வும் ந‌ன்றாக‌ வ‌ந்திருக்கும் என்றே தோன்றுகிற‌து(ப‌ட்சி வேற‌ அப்ப‌டித்தான் சொல்லுகிறது)

எந்திரன் ஸ்பெஷல்(2)-‍ஏ ஆர் ர‌குமான்

இந்தியாவின் இப்போதைய இசையுலக சூப்பர் ஸ்டார் என்றால் அது கண்டிப்பாக ஏ ஆர் ரகுமான் தான். 1992 ஆம் ஆண்டு 'ரோஜா' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த ரகுமானுக்கு, அவருடைய முதல் படமே இந்தியிலும் 'டப்' செய்யப்பட்டு வெற்றி பெற்றதால்,ஒரே படத்தின் மூலமாகவே இந்தியா முழுமைக்கும் பிரபலமாகிவிட்டார்.

ரோஜாவில் ஆரம்பித்த ரகுமானின் பயணம் தெலுங்கு,இந்தி,ஆங்கிலம் என்று இன்று,உலகின் ஒவ்வொரு மூலையிலும் பயணப்பட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் அவருடைய கடுமையான உழைப்பும்,கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாகத்தான் இருக்க முடியும். அதுவும் தமிழில் இளையராஜா போன்ற பெரிய ஆளுமைக்கு நடுவில் ரகுமான் அடைந்திருக்கும் உயரம் சாதரணமானது அல்ல.தென் இந்தியாவில் இருந்த மக்களை எல்லாம் இளையராஜா(என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்)தமிழ் பாடல்களைக் கேட்க வைத்தாரென்றால்,ரகுமான் வட இந்திய மக்களுக்கும் தமிழ் பாடல்களின் மீதான ஆர்வத்தை உண்டு பண்ணினார்.

ரகுமானுக்கு அவரின் ஆரம்பக் காலத்தில் இருந்தே அவருடன் பணிபுரிந்து வரும் மணிரத்னம்,பாலசந்தர்,பாரதிராஜா,ஷங்கர்,கதிர் போன்ற இயக்குனர்கள்,அவரின் பாடல்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தார்கள்.தமிழ் சினிமாவில் பிரபுதேவாவின் வருகைக்குப் பிறகு ரகுமானின் ஆர்ப்பாட்ட இசைக்கு நன்றாக நடனம் ஆடுவதற்கு ஆட்களும் கிடைக்கத் தொடங்கி விட்டார்கள்.ர‌குமானின் வெற்றிக்கு ம‌ற்றொரு முக்கிய‌ கார‌ணம் அவ‌ருடைய‌ தொழில் நுட்ப‌ அறிவும்,ந‌ல்ல‌ குவாலிட்டியுட‌ன் த‌ன்னுடைய‌ பாட‌ல்க‌ளைக் கொடுக்க‌ ஆர‌ம்பித்ததும்தான்.அதுவும் அவ‌ருடைய‌ ப‌ட‌ப் பாடல்க‌ளை 'சோனி' நிறுவ‌ன‌ம் வாங்க‌த் தொட‌ங்கிய‌ பிறகு அவ‌ருடைய‌ பாட‌ல்க‌ள் கேச‌ட்க‌ளில் கேட்கும்போதும் கூடுதல் த‌ர‌த்துட‌ன் இருந்த‌ன‌.

ர‌குமான் ப‌ட‌ப் பாட‌ல்க‌ள் வ‌ரும்போது,அந்தப்படத்தின் நடிகர்,இயக்குனர் போன்றோரைப் பற்றியெல்லாம் கவலையே படாமல்,அவருடைய இசை ரசிகர்களெல்லாம்,அப்போதைய(இப்போதும்) கால‌க‌ட்ட‌த்தில் அவ‌ருக்காக‌ ம‌ட்டுமே கேச‌ட்டுக‌ள் வாங்கிக் கொண்டிருந்த‌ன‌ர்.அத‌னால்தான் பொதுவாக‌ ர‌குமான் ப‌ட‌ப் பாட‌ல்க‌ளை கேச‌ட்டுக‌ளில் ப‌திவு செய்வ‌தைத் த‌விர்த்து,ஒரிஜின‌ல் கேச‌ட்டையே விலைக்கு வாங்குவ‌தற்குக் கார‌ணம்,ப‌ட‌த்தின் எல்லாப் பாட‌ல்க‌ளுமே ந‌ன்றாக‌ இருந்த‌துதான்.
ர‌ங்கீலா பட‌த்திலிருந்து ரகுமான் இந்தியிலேயே அதிக‌மான‌ பட‌ங்க‌ள் ப‌ண்ண ஆர‌ம்பித்து விட்ட‌தால்,த‌மிழ் இசை ர‌சிக‌ர்க‌ளுக்கு கொஞ்ச‌ம் இழப்புதான்.முன்பாவ‌து,விக்ர‌ம‌ன்,அர்ஜீன்,ஜோதி கிருஷ்ணா போன்ற‌ இய‌க்குன‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளுக்கு இசைய‌மைத்த‌ ர‌குமான்,இப்போது பெரிய‌ இய‌க்குன‌ர்க‌ள்,ந‌டிக‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமே இசையமைக்க ஆரம்பித்து விட்டார்.த‌மிழில் முத‌ல் ப‌ட‌ம் இயக்கும் இய‌க்குன‌ர்க‌ளுக்கு ர‌குமான் இன்று எட்டாக்க‌னிதான்.ர‌குமானுக்கு போன‌ வ‌ருட‌ம் அவ‌ரின் கேரிய‌ரின் உச்ச‌ம் என்று சொல்ல‌லாம்.இர‌ண்டு ஆஸ்கார் அவார்டுக‌ள் வாங்கிய‌து ம‌ட்டும‌ல்லாம‌ல்,சென்ற வ‌ருட‌ம் அவ‌ர் இந்தியில் இசைய‌மைத்த‌ க‌ஜினி,டெல்லி 6 போன்ற‌ ப‌ட‌த்தின் பாட‌ல்க‌ளெல்லாம் அவ‌ரை உச்ச‌த்தில் நிறுத்தி‌ன‌.

ஷ‌ங்க‌ர்,ர‌ஜினி,ர‌குமான் காம்பினேஷ‌னில் வ‌ரும் இர‌ண்டாவ‌து ப‌ட‌ம் 'எந்திர‌ன்'.உண்மையைச் சொல்ல‌ வேண்டுமானால் சிவாஜி ப‌ட‌ப் பாட‌ல்க‌ள் அளவிற்கு கூட‌ எந்திர‌ன் பாட‌ல்க‌ள் இல்லைதான்-ஒருவேளை ப‌டம் பார்த்தபிற‌கு பாட‌ல்க‌ள் இன்னும் பிடிக்க‌ ஆர‌ம்பிக்க‌லாம்.இப்போதெல்லாம் ரகுமான் பாடல்கள் மீது சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு இருந்த‌துபோல் பெரிதாக‌ ஈர்ப்பு இல்லை.அத‌ற்கு கார‌ணம் அவ‌ருடைய‌ பாட‌ல்க‌ளின் த‌ர‌ம் குறைந்துவிட்ட‌தா இல்லை என்னுடைய‌ ர‌ச‌னை மாறி விட்டதாவென‌த் தெரிய‌வில்லை.

இன்றும் ர‌குமானின் பாட‌ல்க‌ள்,பெரும்பாலான இரவு நேர‌த் தூக்க‌த்திற்கு உத்திர‌வாத‌ம் அளித்துக் கொண்டிருக்கின்ற‌ன.பொதுவாக‌ ர‌குமானின் பெரும்பாலான‌ பாட‌ல்க‌ள் எனக்குப் பிடிக்குமென்றாலும்,எனக்கு மிக‌வும் பிடித்த‌ ர‌குமானின் ப‌த்து பாட‌ல்க‌ளைக் கீழே கொடுத்துள்ளேன்.

1) ச‌ந்தோஷக் க‌ண்ணீரே-உயிரே
2) கண்ணாளனே-ப‌ம்பாய்
3) மார்கழிப் பூவே-மேமாத‌ம்
4) புது வெள்ளை ம‌ழை-ரோஜா
5) அஞ்ச‌லி அஞ்ச‌லி-டூய‌ட்
6) க‌ரிச‌ல் த‌ரிசில்-தாஜ்ம‌ஹால்
7) க‌ண்ணும் க‌ண்ணும்-திருடா திருடா
8) காடு பொட்ட‌க் காடு-க‌ருத்த‌ம்மா
9) சிநேகித‌னே-அலைபாயுதே
10) உதயா உதயா-உதயா

Wednesday, September 29, 2010

எந்திரன் ஸ்பெஷல்(1)-சன் பிக்சர்ஸ்


இந்தியாவிலேயே முதன் முறையாக‌ 150 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் எடுக்கப்படும் 'எந்திரன்' படத்தின் தயாரிப்பாளர் என்னும் பெயரை தன்னுடைய சன் பிக்சர்ஸின் மூலமாக‌, சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் இப்போது பெறுகிறார்.

இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழும் ரஜினிகாந்த்,ஐஸ்வர்யாராய் நடிப்பில்,ஷங்கரின் இயக்கத்தில்,ஏ ஆர் ரகுமானின் இசையமைப்பில்,இந்தியாவின் மிகப் பெரிய டெக்னீஷியன்களைக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட எந்திரன் திரைப்படம் இந்த வாரம் உலகம் முழுவதும் ரிலீஸாகின்றது.

கலைஞர் குடும்பத்தினருடன் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக,கலாநிதி மாறன் 2008 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸை ஆரம்பித்தார். இதுவரை மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்தே படங்களை விலைக்கு வாங்கி, சன் பிக்சர்ஸ் தன்னுடைய பெயரில் வெளியிட்டு வந்திருக்கின்றது. காதலில் விழுந்தேன் படத்தில் ஆரம்பித்து தெனாவெட்டு,தீ,படிக்காதவன்,மாசிலாமணி என்று மொக்கைப் படங்களை மட்டுமே இப்போது வரை வெளியிட்டும் வந்து உள்ளது.தங்களிடம் உள்ள சேட்டிலைட் டிவிக்களின் உதவி கொண்டு எவ்வளவு மோசமான படத்தையும் வெற்றி பெறச் செய்து விடலாம் என்ற நினைப்பை, சன் பிக்சர்ஸிடம் இருந்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் பொய்யாக்கியிருக்கின்றன.அதேபோல் சன்டிவி மேல் இருக்கும் நம்பிக்கையும் 'தில்லாலங்கடி' போன்ற படங்களை 'இப்போது வரை' நம்பர் 1(?) இடத்தில் வைத்திருப்பதால் அதன் மேல் உள்ள நம்பிக்கையும் மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றது.நாளையே இவர்கள் ஒரு நல்ல படம் எடுத்து,அந்தப் படத்திற்கு நம்பர் 1 இடம் கொடுத்தால் கூட மக்களுக்கு அந்தப்படம் மேல் நம்பிக்கை வருமாவென்று தெரியவில்லை.

சினிமாவில் உள்ள மற்ற எந்த தயாரிப்பாளருக்கும் இல்லாத வசதியாக சன் பிக்சர்ஸிற்கு,சன் குரூப் டிவி சேனல்கள்,தினகரன் பத்திரிக்கை,குங்குமம் வார இதழ் என்று விளம்பரப்படுத்துவதற்கு அவர்களுடைய பல ஊடகங்கள் துணை நிற்கின்றன.இவ்வளவு தூரம் பணம்,ஊடகங்கள் என்று வசதிகள் பல இருந்தாலும் சன் பிக்சர்ஸிடமிருந்து இதுவரை வந்திருக்கும் படங்கள் எதுவும் நம்பிக்கை அளிப்பது போல் இல்லை என்பதுதான் உண்மை. மொசர் பியர் நிறுவனத்தினடிமிருந்து வந்திருக்கும் படங்கள் அல்லது பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸிடமிருந்து வந்திருக்கும் படங்கள் அல்லது குறைந்த பட்சம் ஷங்கரின் 'S' பிக்சரிஸிடமிருந்து வந்திருக்கும் படங்கள் போல், ஒரு படம் கூட சன் பிக்சர்ஸிடமிருந்து இதுவரை வந்த‌தில்லை.கலைஞர் குடும்பத்திலிருந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாநிதி அழகிரி,உதயநிதி ஸ்டாலின் கூட நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் பெரும்பாலான நல்ல படங்கள் மக்களிடம் சரியாக விளம்பரப்படுத்தப்படாததினாலேயே ஃபிளாப் ஆகியிருக்கின்றன. ஒருவேளை சன் பிக்சர்ஸ் மட்டும் நல்ல படங்களை எடுக்க ஆரம்பித்தால்,அவர்களால் அவர்களுடைய ஊடகங்களின் துணைகொண்டு மக்களிடம் அத்தகைய நல்ல படங்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். ஒரு நல்ல மாற்றத்தை தமிழ் சினிமாவிற்குள்ளும் கொண்டு வர முடியும். இனிமேலாவது இவர்கள் நல்ல படங்களைக் கொடுப்பார்களா என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

இந்தியாவிலேயே பெரிய‌ சினிமா இன்ட‌ஸ்ட்ரி என்றால் இந்தி,அத‌ற்க‌ப்புற‌ம் தெலுங்கு,மூன்றாவ‌த‌க‌த்தான் த‌மிழ். இருந்தாலும், இந்தியாவிலேயே அதிக‌மான‌ பொருட் செல‌வில் எந்திர‌னைத் தமிழில் த‌யாரிப்ப‌த‌ற்கான கார‌ண‌ம் ர‌ஜினிக்கு இருக்கும் மார்க்கெட்தான்‌.தென்னிந்தியாவிலேயே அதிகமான‌ பொருட்செல‌வில் த‌மிழ் ந‌டிக‌ர்க‌ளைக் கொண்டு ம‌ட்டுமே இப்போதைய‌ கால‌ க‌ட்ட‌த்தில் ப‌ட‌ம் எடுக்க‌ முடியும்.ர‌ஜினியும்,க‌ம‌லும் த‌மிழ் சினிமாவின் சூப்ப‌ர் ஸ்டார்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌. இவ‌ர்களுக்கு தென்னிந்தியா முழுமைக்கும் ந‌ல்ல‌ மார்க்கெட் உள்ள‌து. ஆர‌ம்ப‌ கால‌க் க‌ட்ட‌ங்க‌ளில் அனைத்து மொழிக‌ளிலும் ப‌ட‌ங்க‌ள் ப‌ண்ணிய‌தால் க‌ம‌லுக்கும், க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளாகவே ர‌ஜினியின் ட‌ப்பிங் ப‌ட‌ங்க‌ள் ஆந்திராவில் ச‌க்கைப் போடு போடுவ‌தால் ரஜினிக்கும்,இவ‌ர்க‌ளை ந‌ம்பிப் பெரிதாக‌ முதலீடு போட்டால் தயாரிப்பாளர்களுக்கு கொழுத்த இலாபம்.ரஜினி படம் வெளிவருகையில்,ஆந்திராவின் முன்னணி நடிகர்கள் கூட அவர்களுடைய படங்களைத் தள்ளிப் போடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.ஆந்திராவின் சூப்ப‌ர் ஸ்டார்களாக‌ இருக்கும் சிர‌ஞ்சிவிக்கோ, நாக‌ர்ஜீனாவிற்கோ,மகேஷ் பாபு போன்றவர்களுக்கோ த‌மிழில் பெரிதாக‌ மார்க்கெட் இருப்ப‌தில்லை. அவ‌ர்களின் ப‌ட‌ங்க‌ள் சென்னையின் சில‌ தியேட்ட‌ர்க‌ள் ம‌ற்றும் ஒசூரில் வெளியாவ‌தோடு ச‌ரி. ஆனால் ரஜினி,கமலின் படங்கள் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இன்றும் மிகப் பெரிய‌ ஓப்பனிங்கைக் கொண்டிருக்கின்றன.இவர்களைப் பின்பற்றித்தான் விக்ர‌மும்,சூர்யாவும் தெலுங்கிலும் கால் ப‌தித்து,இன்று இந்தியிலும் த‌ங்க‌ளுடைய‌ வேர்க‌ளைப் ப‌ர‌வவிட‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள். உண்மையில் சொல்ல‌ வேண்டுமானால் விஜய்,அஜித்தை விட‌ விக்ர‌ம்,சூர்யாவிற்குத்தான் மொத்தமாக மார்க்கெட் வேல்யூ அதிக‌ம். அதனால்தான் என்ன‌வோ இப்போது அஜித் ம‌ங்காத்தா தெலுங்கு பதிப்பிலும்,விஜ‌ய் 3 இடிய‌ட்ஸ் தெலுங்கு ப‌திப்பிலும் ந‌டிக்க‌ முய‌ற்சித்துக் கொண்டிருக்கிறார்க‌ள்.

எந்திர‌ன் போன்ற‌ ப‌ட‌ங்க‌ள் வெற்றி பெறுவ‌து த‌மிழ் சினிமாவிற்குத்தான் மிக‌வும் ந‌ல்ல‌து.இத‌ற்க‌ப்புற‌ம் கம‌லின் க‌ன‌வு ப‌ட‌ங்க‌ளான‌ ம‌ர்ம‌ யோகி,ம‌ருத‌ நாய‌க‌ம் போன்ற ப‌ட‌ங்க‌ள் வெளிவ‌ருவ‌த‌ற்கான‌ வாய்ப்புக‌ள் அதிகம் உள்ளது.நாளைக்கே ச‌ன் பிக்ச‌ர்ஸ் இதே போன்ற பெரிய‌ ப‌ட்ஜெட் ப‌ட‌ங்க‌ளை விக்ர‌ம்,சூர்யாவைக் கொண்டும் எடுக்க ஆரம்பிக்க‌லாம்.த‌மிழ் சினிமா எப்ப‌டி தெலுங்கு ப‌ட‌வுல‌கில் இப்போது ப‌ல‌மாக‌ கால‌டி ப‌தித்து நிற்கின்றதோ, அதேபோல் இந்திப் ப‌ட‌வுல‌கிலும் இதுபோன்ற‌ ப‌டங்களின் மூல‌மாக மட்டுமே காலூன்ற‌ முடியும். ரோஜா,பம்பாய் போன்ற‌ ப‌ட‌ங்க‌ளுக்கு அப்புற‌ம் த‌மிழின் நேர‌டிப் ப‌டங்க‌ள் எதுவும் இந்தியில் பெரிதாக‌ வெற்றி பெற்ற‌தில்லை. எந்திர‌ன் த‌மிழில் ம‌ட்டும‌ல்லாது,இந்தியிலும் பெரிதாக‌ வெற்றி பெற‌ வேண்டும். அத‌ன் மூல‌ம் த‌மிழ் சினிமா,தென் இந்தியா ம‌ட்டும‌ல்லாது வ‌ட‌ இந்தியாவிலும் காலூன்ற‌ வேண்டுமென்ப‌துதான் எல்லோருடைய‌ ஆசையாக இருக்க முடியும். அத‌ற்கான‌ அடித்த‌ளத்தை அமைத்துக் கொடுத்திருக்கும், ச‌ன் பிக்ச‌ர்ஸ் இப்போதைய கால கட்டத்தில் பாராட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள்.

ச‌ன் பிக்ச‌ர்ஸ் த‌மிழில் க‌தை அம்ச‌முள்ள ப‌ட‌ங்க‌ளையும்,நல்ல ம‌சாலாப் ப‌ட‌ங்க‌ளையும் இதற்க‌ப்புற‌மாவ‌து கொடுக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையில் அவ‌ர்க‌ளுக்கு வாழ்த்துக‌ள்.

Tuesday, September 21, 2010

பிரிய‌சகி-6

பவ‌ர் க‌ட்டான‌
ஒரு அமாவாசை இருட்டில்
நீ சிரிக்க‌த் தொட‌ங்கினாய்
திசை மாறிய பறவைகளெல்லாம்
கூட்டை நோக்கிப் ப‌ற‌க்க‌த் தொட‌ங்கின‌.

நல்ல கவிதையின்
ஒவ்வொரு வரிகளும்
அழகாய் இருப்ப‌து போல்
அழகாய் இருக்கும் உன்னில்
ஒவ்வொன்றும் அழகு.

ஆயிர‌க்க‌ணக்கில் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள்
இருந்தாலும் என‌க்கான
விடிவெள்ளியாய்
நீ ம‌ட்டுமே தெரிகிறாய்.

அடிக்கிற‌ கைதான் அணைக்குமாம்
ஒரு அடி அடித்துவிட்டு
அணைத்துக் கொள்ளேன் என்றால்
த‌லையில் கொட்டி விட்டு
தேய்த்து விடுகிறாய்.

சந்திரகிரகணத்தை
நான் நேரில் பார்த்தது
நீ தாவணியை
சரி செய்யும் போதுதான்.

Saturday, September 11, 2010

கொமரம் புலி-திரை விமர்சனம்(தெலுங்கு)


எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில்,ஏ.ஆர் ரகுமான் இசையில்,பவன் கல்யாண் நடிப்பில் வெளி வந்திருக்கும் தெலுங்கு படம் 'கொமரம் புலி'.

இந்தப் படத்தில் கதை முதற்கொண்டு எதுவுமே கிடையாதுங்க. இருந்தாலும்,கதை என்னன்னு தெரிஞ்சுகிட்டே ஆகனும்னு நினைக்கிறவங்க மட்டும் கீழே இருக்கிறதைப் படிங்க.

பவன் கல்யாண் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி.மக்கள் பிரச்சனையை தீர்க்கனும்கிறதுக்காக,ஒரு ரூபாய் காயின் பூத்திலிருந்து மக்கள் தன்னை நேரடியாக‌ தொடர்பு கொள்வது போல் ஏற்பாடு செய்கிறார்.அதற்கப்புறம் அவர்களின் பிரச்னையைத் தீர்த்துவிட்டு,படம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு புது பிரச்சனையைக் கொடுத்து,தியேட்டரை விட்டு வெளியே அனுப்புகிறார்.

படம் ஆரம்பத்தவுடனே 1985-ம் ஆண்டு என்று காட்டுகிறார்கள்.அப்போது வரும் காட்சிகளெல்லாம் அந்த ஆண்டில் வெளி வந்த படக் காட்சிகளை விடக் கொடுமையாக இருக்கின்றன.தன் மகனை போலிஸாக்கிப் பார்க்க நினைக்கும் சரண்யா லெஃப்ட்,ரைட் சொல்வதும் அதற்கு ஏற்றாற் போல்,வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை காலை ஆட்டுவதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு.பவன் கல்யாணுக்கு படம் நன்றாக வரும் என்று பெரிதாக நம்பிக்கை இருந்திருக்கும் போல,உடம்பையெல்லாம் குறைத்து,ஓவர் ஆக்டிங்கோடு நடித்திருக்கிறார்.ஹீரோயினைப் பார்த்து நாம் பரிதாபப்படுவதா இல்லை படம் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து அவர் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.

படத்தின் ஹீரோ அடிக்கடி பத்து,பதினைந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து வசனம் பேச ஆரம்பித்து விடுகிறார்.அவர் மூச்சு விடாமல் பேசி முடித்தவுடன்,நமக்கு தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது போல் இருக்கிறது.அதுவும் வில்லன் மனோஜ் பாஜ்பாய் பொய் சொல்கிறார் என்பதை "நடந்ததை உண்மையிலேயே,யோசித்து சொல்றவங்க மேலே பார்த்து பேசுவாங்க;பொய் சொல்பவர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் முகத்தைப் பார்த்து பேசுவார்கள்" என்கிறார் பாருங்கள்.சே! எஸ்.ஜே.சூர்யா மேலே பார்த்துட்டே கதை சொன்னதைப் பார்த்து,பவன் ஏமாந்துட்டார் போல.

ஏற்கெனவே கடுப்போடு படம் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு,மனோஜ் பாஜ்பாயின் நடிப்பும்,வசன உச்சரிப்பும்,அதிரடியாக எதிரணி ரன்கள் குவித்துக் கொண்டிருக்கையில்,இஷாந்த் சர்மாவிடம் பாலைக் கொடுத்து பவுலிங் போட சொல்வது போல் உள்ளது.ஷ்ரேயா ஒரு பாடலுக்கு கெஸ்ட் ரோலில் வருகிறார்.

படத்தில் உள்ள ஒரே உருப்படியான விசயம் ரகுமானின் இரண்டு பாடல்களான தோட்சே மற்றும் மாராலன்ட்டே(ஸ்லம்டாக் மில்லியனரில் வந்த Gangstar blues பாடலையே கொஞ்சம் மாற்றி 'தோட்சே' என்று போட்டிருந்தாலும்,ஸ்ரேயே கோஷலின் அழகிய குரலில்,ஸ்ரேயாவின் அழகிய.....இந்தப் பாடல் நம்மைக் கிறங்கடிப்பது உண்மை).

எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக முழு நீள ஆக்ஷன் படத்தை இயக்கியிருக்கிறார்.நல்ல வேளைக்கு இந்தப் படத்தை இவர் தமிழில் இயக்கவில்லை.படம்தான் நன்றாக வரவில்லையே,படத்தையாவது இரண்டு அல்லது இரண்டே கால் மணி நேரத்தில் முடித்துத் தொலைத்தால் என்ன?.அட தேவுடா,மூன்று மணி நேர அளவிற்கு நம்மைக் கொடுமைப்படுத்தி வெளியே அனுப்புகிறார்கள்.

கொமரம் புலி-நிஜப் புலிகிட்ட மாட்டியிருந்தால் கூட,இந்த அளவிற்கு கஷ்டம் இருந்திருக்காது!

Friday, September 10, 2010

பாஸ் (எ) பாஸ்கரன்-திரை விமர்சனம்


சிவா மனசுல சக்தி பட இயக்குனர் 'ராஜேஷ்' இயக்கத்தில் ஆர்யா,சந்தானம்,நயன் தாரா நடிப்பில் வந்திருக்கும் படம் 'பாஸ் (எ) பாஸ்கரன்.

இப்பவும் கூட போரடிக்கிறபோதெல்லாம் நான் பார்க்கிற படம் சிவா மனசுல சக்தி(முதல் பாதி மட்டும்). அதனால் இந்த படம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து போனேனோ,அதை முழுவதுமாய் நிறைவேற்றியிருக்கிறார் இயக்குனர்.

வேலை வெட்டி எதுவும் இல்லாமல் தன் அரியர் படிப்பை படித்துக்கொண்டிருக்கும் ஆர்யாவின் வாழ்வில் நயன் தாரா வருகிறார். அதன் பின் ஆர்யா எவ்வாறு திருந்தி,முன்னேறி,நயன் தாராவைக் கைப்பிடிக்கிறார் என்பதைக் காமெடியைப் பிழிந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.

பிட்டு கிட்டு அடித்தாவது பாஸாகிவிடு என்று சொல்லும் அம்மா,பிட்டு எடுத்துட்டு போனா மட்டும் பத்தாது;பாஸாகியும் காட்டிடனும் என்று சொல்லும் அண்ணன்,தனக்கு இருக்கும் ஒரே நண்பனுக்காக‌ எதையும்(?) செய்யத் தயாராகவிருக்கும் சந்தானம்,வேலை வெட்டியே இல்லாத காதலன் மேல் நம்பிக்கையோடு காத்திருக்கும் நயன் தாரா, யாரைப் பற்றியும்,எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் வழியிலேயே வாழும் ஆர்யா என்று இவர்களை மட்டும் சுற்றி செல்லும் கதையில்,ஒவ்வொரு சீனையும் காமெடியாக மட்டுமே காட்டுவது என்று கங்கனம் கட்டி எடுத்திருப்பார்கள் போல்,படம் முழுவதும் தொடர்ந்து காமெடி சரவெடி.

ஆர்யா முதல் முறையாக முழு நேர காமெடி படத்தில் நடித்திருக்கிறார்.இன்னும் கொஞ்சம் நன்றாகவே பண்ணியிருக்கலாம் என்று தோன்றினாலும்,தன்னால் முடிந்தவரை நன்றாகவே செய்திருக்கிறார்.சந்தானம் ஷகிலாவை கூப்பிட்டு வருவதைப் பார்த்து அவங்களை 'இங்க' ஏண்டா கூப்பிட்டுட்டு வந்த என்பதும்,அண்ணாமலை படத்தைப் பார்த்து விட்டு கனவுலகிலிருந்து திரும்பியவுடன்,எங்கே என் டிரைவர் நல்லதம்பி(சந்தானம்) என்பதும்,"உன் 'எக்ஸ்பீரியன்ஸைப்' பத்தி எனக்குத் தெரியாதா?" என்று சந்தானம் காலை அடிக்கடி வாருவது என்று நன்றாகவே பண்ணியிருக்கிறார்.வீட்டை விட்டு உணர்ச்சிவசப்பட்டு ஆர்யா வெளியேறும் காட்சியிலும்,அவர் கூலிங் கிளாஸை எடுத்துப் போட்டு செல்கையில் நம் அடி வயிறு குலுங்க ஆரம்பிக்கிறது.

ஆர்யாவிற்கு இணையான வேடம் சந்தானத்திற்கு.ஆர்யாவும்,இவரும் அடிக்கடி சேர்ந்து சொல்லும் 'நண்பேன்டா' என்பதாகட்டும்,பிஸினெஸ் சரியாகப் போகாத போதெல்லாம்,குடும்பத்தோடு தெருவில் நிற்பது போல் நினைத்துப் பார்ப்பதாகட்டும்,திட்டுற மூடு இல்லாமலேயே உங்களை எவ்வளவு திட்டியிருக்கிறான் பாருங்கள் என்று நயன் தாரா அப்பா சித்ரா லட்சுமணனிடம் ஆர்யாவைப் பற்றி போட்டுக் கொடுப்பது,அட்வான்ஸ் கேட்கும் இன்ஸ்டிடியூட் வாத்தியாரிடம் "பல்லு விளக்குறதுக்கு முன்னாடியே பாயாசம் வேணுமா?" என்று கிடைத்த வாய்ப்பை சந்தானம் நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

நயன் தாரா சிரிக்கும் போது(மட்டும்) அழகாக இருக்கிறார்.படம் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.நயனுக்கு இப்போதெல்லாம் நடனம் வேறு நன்றாகவே வருகிறது(ம்..ம்).

ஜீவா படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார். சரக்கு அடிக்கையில் ஊறுகாய் தீர்ந்தவுடன்,தொட்டுக்கொள்வதற்கு சித்ரா லட்சுமணனைப் பக்கத்தில் உட்கார சொல்வது என்று அவரும் தான் வரும் காட்சிகளில் கலகலப்பாக்கிவிட்டு செல்கிறார்.யுவனின் இசையில் 'பாஸு பாஸு' மற்றும் 'யார் இந்த பெண்தான்' பாடலும்,பின்னணி இசையும் நன்றாக இருக்கின்றன.ப‌ட‌த்தில் வ‌ரும் ஒரே ஒரே ச‌ண்டைக்காட்சியையும் காமெடியாக‌ மாற்றியிருப்ப‌தில் இய‌க்குனரின் சாம‌ர்த்திய‌ம் தெரிகிற‌து.இய‌க்குன‌ர் இளைய‌ராஜா ர‌சிகராக இருப்பார் போலும்.ப‌ட‌ம் முழுவ‌தும் ஆங்காங்கே இளைய‌ராஜா பாட‌ல்க‌ள் வ‌ருகின்ற‌ன.

படம் 2:40 நிமிடங்கள் ஓடுவதால்,ப‌டத்தில் சுவாரசியமில்லாமல் வ‌ரும் சில‌ காட்சிக‌ளை இய‌க்குன‌ர் நீக்கியிருந்திருக்கலாம்.அதேபோல் ட‌புள் மீனிங் வ‌ச‌ன‌ங்க‌ளையும் நீக்கியிருந்தால்,ப‌ட‌ம் இன்னும் ந‌ன்றாக‌வே இருந்திருக்கும்.

முழு நீள காமெடிப் ப‌ட‌ம் எடுக்கும் இய‌க்குன‌ர்க‌ளின் எண்ணிக்கை குறைந்து வ‌ரும் இந்நேர‌த்தில்,இய‌க்குன‌ர் ராஜேஷ் ந‌ம்பிக்கை ஊட்டுகிறார்.

பாஸ் என்கிற‌ பாஸ்க‌ர‌ன்-த‌மாஸ்.

Wednesday, September 8, 2010

Top 10 Songs-August

1) இரும்பிலே ஒரு இதயம்-எந்திரன்-‍இசை:A.R ரகுமான்

2) யார் இந்த பெண்தான்‍-‍பாஸ் என்கிற பாஸ்கரன்-‍இசை:யுவன் சங்கர் ராஜா

3) தட தட என்று-‍‍கனி மொழி-இசை:சதீஷ் சக்ரவர்த்தி

4) அடி சாரலே-‍சிக்கு புக்கு‌-இசை:கலோனியல் கசின்ஸ் & பிரவீன் மணி

5) ஆத்தாடி ஆத்தாடி-அய்யனார்-‍இசை:தமன்

6) இறகைப் போலே-‍நான் மகான் அல்ல‌-‍இசை:யுவன் சங்கர் ராஜா

7) ஏதேதோ ஏதே ஏதோ-‍ஊலலா-இசை:சேகர் சந்திரா & வி.குமார்

8) பார்வை உந்தன்‍‍-நில் கவனி செல்லாதே-‍இசை:செல்வகணேஷ்

9) ஒரு வானவில்லின்‍-காதல் சொல்ல வந்தேன்-இசை:யுவன் சங்கர் ராஜா

10) இரவினில் உந்தன்-‍‍நீயே என் காதலி-‍இசை:பிரேம் குமார்

Tuesday, September 7, 2010

க‌மல்ஹாச‌ன்-ஒரு அற்புத‌க் க‌லைஞன்


இந்தப் பதிவு கண்டிப்பாக நண்பர் கருந்தேள் எழுதிய பதிவிற்கு எதிர் பதிவு கிடையாது. அவருடைய பதிவுகளை,அவர் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே விரும்பி படித்து வருகிறேன். ஒவ்வொரு விசயத்தின் மீதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும்.இந்தப் பதிவில் கமலை எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதற்கான‌ காரணங்களை மட்டுமே கூற விரும்புகிறேன்.

கமல் மீது வைக்கப்பட்டிருக்கும் முதல் குற்றச்சாட்டு அவர் ஆங்கிலப்படங்கள் சிலவற்றை காப்பி அடித்து தமிழில் பெயர் வாங்கிக் கொண்டார் என்பது. நாம் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.கமல் ஆரம்ப‌த்திலிருந்து இப்போது வரை தன்னை நடிகனாக மட்டுமே முன்னிறுத்துபவர்.அதற்கப்புறம்தான் அவருடைய மற்ற பரிமாணங்கள்.
கமலின் ஆரம்பக் காலத்துப் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு காலத்தில் அவரும் ரஜினியுடன் போட்டி போட்டுக் கொண்டு மசாலாப் படங்களிலேயே அதிகமாக நடித்துக் கொண்டிருந்தார்.தமிழ் சினிமாவின் மோசமான காலகட்டமது. அதற்கு முன் மகேந்திரன்,பாரதிராஜா,பாலசந்தர் என்று தொடர்ந்து நல்ல இயக்குனர்களையும் நல்ல சினிமாக்களையும் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா,தொடர்ந்து மசாலா படங்களையே கொடுத்துக் கொண்டிருந்தது. எப்போதாவது அத்திப்பூத்தாற்போல் நல்ல படங்கள் வந்திருக்கலாம்.அந்தக் காலகட்டத்தில் பல புதிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து பண்ண வேண்டிய மாற்றத்தை,வேறு வழியில்லாமல் நடிகரான கமல் பண்ண வேண்டியதாயிருந்தது.

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்த கமலுக்கு சரியான தீனி கிடைக்கவில்லை.அதனால்தான்,அவரே வித்தியாசமான படங்களைத் தயாரித்து நடிக்க ஆரம்பித்தார்.இருப‌த்தைந்து ஆண்டுக‌ளுக்கு முன் வ‌ந்த‌ சாதா‌ர‌ண காமெடி ப‌ட‌மாகிய‌ 'எல்லாமே இன்ப‌ மைய‌ம்' ப‌ட‌த்தில் க‌ம‌லின் உழைப்பைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ள‌லாம்.தன்னுடைய 100 வது படமான 'ராஜபார்வை' யைத் தானே தயாரித்து நடித்தார்.கமலினுடைய ஆசையெல்லாம் வெளி நாட்டில் நல்ல கதைகளோடு வரும் படங்களைப் போன்று தமிழிலும் நல்ல படங்கள் வர வேண்டுமென்பதே.இதில் இன்னொரு முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.கமல் ஏதோ வெளி நாட்டுப் படங்களை படங்களை மட்டுமே தமிழுக்கு கொண்டு வந்தார் என்றில்லை. மற்ற மொழிகளில் தனக்குப் பிடித்த படங்களான 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'சத்யா','உன்னால் முடியும் தம்பி','குருதிப்புனல்' முதற்கொண்டு 'உன்னைப்போல் ஒருவன்' வரை இங்கு கொண்டு வந்திருக்கிறார்.இந்தப் படங்களையெல்லாம் முடிந்த அளவிற்கு நன்றாகவும் கொடுத்திருக்கிறார்.(குருதிப்புனல் பார்த்துவிட்டு அதன் ஒரிஜினல் டைரக்டர் சொன்னது; "ஒரிஜினலை விடவும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள்" என்பதுதான்.இதில் கமல் ஏன் வெளிநாட்டுப் படங்களை தமிழ் படுத்தும்போது 'கிரெடிட்' கொடுக்கவில்லை என்பது மற்றொரு பிரச்சனை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான இயக்குனர்கள் வெளி நாட்டுப் படங்களைக் காப்பி அடித்து இங்கு படமெடுத்திருக்கிறார்கள்.அவர்களெல்லோரும் டைட்டில் கார்டில் ஒரிஜினல் படத்திற்கு 'கிரெடிட்' கொடுத்திருப்பது போலவும், கமல் மட்டுமே இதுவரை அதுபோல் செய்யாமல் இருப்பது போலவும் அவரை 'மட்டுமே' குறை சொல்வது ஏனென்று தெரியவில்லை. அப்படி திட்ட வேண்டுமென்றால் எல்லோரையும்தான் திட்ட வேண்டுமே தவிர கமலை மட்டுமே குறிப்பிட்டு திட்டுவது நன்றாக இருக்காது.(இதில் பொதுவாக காப்பி அடிப்பதைப் பற்றி இந்தியர்கள் யாருமே பெரிதாக கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை.நம்மில் எத்தனை பேர் வின்டோஸ் ஒரிஜினல் வெர்ஷனையோ,திருட்டு விசிடியில் படம் பார்க்காமலோ,MP3 பாடல்களைத் தரவிறக்கம் பண்ணாமலோ இருக்கிறோம்).

இன்னும் சொல்லவேண்டுமானால் இப்படி கமல் நடித்த பெரும்பாலான படங்கள் அவருடைய தயாரிப்பிலோ,இயக்கத்திலோ வ‌ந்த‌வை கிடையாது.க‌ம‌ல் என்ன‌வோ அந்த‌ மாதிரி ப‌ட‌ங்களில் ம‌ட்டுமே ந‌டித்து பெய‌ர் வாங்கிய‌து போல் சில‌ர் சொல்வ‌து ஒப்புக் கொள்ள முடியாது.க‌ம‌ல் த‌ன‌க்குக் கதை பிடித்திருக்கும் பட்சத்தில் அந்த ப‌ட‌ங்கள் எந்த‌ மொழியிலிருந்தாலும் த‌ய‌ங்காம‌ல் ந‌டித்து வ‌ந்தார். அத‌னால்தான் புஷ்பக்,கோகிலா(க‌ன்னட‌ம்),ச‌ல‌ங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து(தெலுங்கு),ஏக் துஜே கேலியே(இந்தி) என்று அவ‌ரால் எல்லா மொழிக‌ளிலும் நல்ல ப‌ட‌ங்க‌ளைக் கொடுக்க முடிந்த‌து. மேலும்,த‌மிழ்,தெலுங்கு,க‌ன்ன‌ட‌ம்,ம‌லையாளம்,இந்தி என்று அனைத்து மொழிக‌ளிலும் நேர‌டிப்ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்து பல ஹிட் படங்களைக் கொடுத்த இந்திய ந‌டிக‌ர் கமல் ஒருவர்‌‌ ம‌ட்டும்தான் என்பது மறக்க முடியாத உண்மை.

தமிழ் சினிமாவிற்கு கமல் செய்த மிக நல்ல விசயம் என்னவென்றால், வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருந்ததுதான். மற்ற மொழிகளிலெல்லாம் இப்போதிருக்கும் இளம் நடிகர்கள் கொஞ்சம் நன்றாக நடித்தால் கூட தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். இங்கே விக்ரம்,சூர்யா போன்ற நடிகர்கள், நல்ல நடிகர்கள் என்று பெயர் வாங்குவதற்கு மிகக் கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியதிருக்கிறது.அதற்குக் காரணம், கமல் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே ஏற்படுத்தி வைத்திருக்கிற Standard தான். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் அமிதாப்பின் நடிப்பை 'பா' படத்தில் எல்லா வட இந்தியப் பத்திரிக்கைகளும் புகழ்ந்து எழுதியிருந்தன. இதேபோல் வேறு ஒரு நடிகர் நடித்து,தமிழில் வந்திருந்தால் மக்கள் என்ன சொல்வார்கள்,கமல்தான் இதே மாதிரி ஏற்கெனவே பண்ணியிருக்கிறாரே என்று சாதாரணமாக நினைப்பார்கள்.(அதற்காக நான் அமிதாப்பின் உழைப்பைக் குறை கூறுகிறேன் என்று யாரும் தயவு செய்து நினைக்க வேண்டாம்). அதுதான் கமலின் வெற்றி. அதனால்தான் இங்கே உள்ள நடிகர்கள் மிகுந்த உழைப்பைக் கொடுத்து வித்தியாசமான வேடங்களில் நடித்துப் பேர் வாங்குவதற்கான ஆரம்ப சுழி கமலிடமிருந்தே ஆரம்பமாகியது என்று கூறுகிறேன்(கமலுக்கு இதே போல் ஆதர்சனமாக விளங்கியவர் சிவாஜி கணேசன்).

கமல் காப்பி அடித்த படங்களை எல்லாம் ஒரு உதாரணத்திற்காக தமிழ் சினிமாவிலிருந்து நீக்கி விடுங்கள்.நமக்கு பல நல்ல படங்கள் கிடைத்திருக்காது;அது மட்டும்தான் உண்மை.விஜய் டிவி அவார்ட்ஸ்ஸில் பாலா பேசியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. "நான் கடவுள் படம் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஸனே அன்பே சிவம்' தான் என்றார். ஒரு வேளை கமல் அன்பே சிவம் போல் ஒரு படம் எடுக்காமல் இருந்திருந்தால் 'நான் கடவுள்' போன்ற ஒரு நல்ல படம் நமக்கு கிடைக்காமலே போயிருந்திருக்கும்.இதில் சில வெளிநாட்டுப் படங்களை இன்ஸ்பிரேஸனாக வைத்துக்கொண்டு கமல் எடுத்த படங்களையெல்லாம் அப்பட்டமான காப்பி என்பது ஒத்துக்கொள்ள முடியாதது.அப்படிப்பார்த்தால் பருத்தி வீரனையே,விருமாண்டியின் காப்பி என்று சொல்லி விடலாம்-அது கொஞ்சம் கூட உண்மையில்லை என்றாலும் கூட‌(இரு படங்களும் மதுரை மண் சார்ந்தவை,ஹீரோ ஊதாரித்தனமாகத் திரிவது,காதல் வயப்பட்டவுடன் திருந்தி நல்ல வாழ்க்கை வாழ நினைப்பது,காதலி கற்பழிக்கப்பட்டு இறப்பது).ஆனால் கமல் பருத்திவீரனுக்காக அமீரைப் பாராட்டித் தள்ளினார். கமல் படங்களைப் பார்த்து விட்டு, பல இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உத்வேகமாக படமெடுக்க ஆரம்பித்தார்கள் என்பதுதான் உண்மை.

க‌ம‌ல் வேறு மொழி ப‌ட‌ங்களைக் காப்பி அடித்து த‌மிழில் எடுத்த‌ பெரும்பாலான ப‌ட‌ங்க‌ள் அவ‌ருக்கு தோல்வியை ம‌ட்டுமே கொடுத்திருக்கின்ற‌‌ன‌‌.அவ‌ர் நினைத்திருந்தால் ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் போன்ற‌ ப‌ட‌ங்க‌ளில் தொட‌ர்ந்து ந‌டித்து காசு ஈட்டியிருக்க முடியும். ஆனால் சினிமாவில் உள்ள காத‌லால்தான் வித்தியாச‌மான ப‌ட‌ங்களைத் தொட‌ர்ந்து கொடுக்க வேண்டுமென்று நினைத்து,அவரால் அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற முடிந்திருக்கிறது.ந‌ன்றாக‌ நினைத்துப் பாருங்கள், ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌த்தை தேர்வு செய்து,க‌ஷ்ட‌ப்ப‌ட்டு அந்த‌ ப‌ட‌த்திற்காக‌ உழைத்து, ப‌ட‌மும் ந‌ன்றாக‌ வந்திருந்து ஃபிளாப் ஆவ‌து போல் கொடுமையான‌ விச‌ய‌ம் வேறு எதுவும் இருக்க‌ முடியாது. ஒரு த‌ட‌வை ஃபிளாப் ஆகிற‌தென்றால் பர‌வாயில்லை. ஆனால் தொட‌ர்ந்து தோல்வியடைந்தாலும்,தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்கிர‌மாதித்ய‌ன் போல் இருந்த ந‌டிக‌ர்க‌ள் இந்திய‌ சினிமாவில் மிக மிக‌ குறைவு.

க‌மலை ம‌ற்றொரு விச‌ய‌த்தில் எல்லோரும் குறை கூறும் விச‌ய‌ம் அவ‌ருடைய‌ 'உல‌க‌ நாய‌க‌ன்' ப‌ட்ட‌ம். அப்ப‌டிப் பார்த்தால் த‌மிழில் ப‌ட்ட‌ம் போட்டுக் கொண்டிருக்கும் எல்லா ந‌டிக‌ர்களையும் குறை கூற‌ வேண்டிய‌திருக்கும்.இதில் கமலை மட்டும் குறை கூறுவது ஏனோ?.க‌ம‌லுக்கும், இந்தியாவில் உள்ள‌ ம‌ற்ற‌ ந‌டிக‌ர்க‌ளுக்கும் உள்ள வித்தியாச‌ம் என்ன‌வென்றால்,மற்றவ‌‌ர்க‌ள் ந‌டித்த‌ எந்த‌ வேட‌த்தை வேண்டுமானாலும் க‌ம‌லால் ஓர‌ளவிற்கு ந‌டிக்க‌ முடியும். ஆனால் கம‌ல் ந‌டித்த‌ அனைத்து வேட‌ங்களையும்,இந்தியாவில் வேறு ஏதாவ‌து ஒரே ந‌டிக‌ர் ந‌டிப்ப‌து இயலாத‌ விச‌ய‌ம். ஏனைன்றால் க‌ம‌ல் வெறும‌னே ஒரு ந‌ல்ல‌ ந‌டிக‌ன் ம‌ட்டும‌ல்ல‌,க‌தை,திரைக்க‌தை,வச‌ன‌ம்,இயக்க‌ம்,த‌யாரிப்பு,ந‌ட‌ன‌ம்,பாட‌ல் எழுவ‌து,பாடுவ‌து,ச‌ண்டை காட்சிக‌ளில் ரிஸ்க் எடுத்து ந‌டிப்பது என்று பல விசயங்களையும் பண்ணிக் கொண்டிருப்பவர். உல‌க‌த்திலேயே வேறு ஏதாவ‌து ந‌டிக‌ர் இத்த‌னை திறமைக‌ளோடு இருப்ப‌தாக‌த் தெரிந்தால் பின்னூட்ட‌மிடுங்க‌ள்(டி.ராஜேந்த‌ர் என்று கூறுபவ‌‌ர்க‌ள் சொர்க்க‌த்திற்குப் போக‌க் க‌ட‌வ‌து).வேறு மொழிகளில் இந்த நடிக‌ரின் காமெடி படங்கள் நன்றாக இருக்கும்(அந்த நடிகருக்கு நடனம் வராமல் இருக்கும் என்பது வேறு விசயம்);மற்றொரு நடிக‌ரின் ஆக் ஷன் படங்கள் நன்றாக இருக்கும்; இந்த நடிகரின் நடிப்பு நன்றாக இருக்கும் என்று வேண்டுமானாலும் கூற முடியும்.ஆனால் ஒரே நடிகர் மேலே குறிப்பிட்ட அனைத்து விதமான வேடங்களிலும் தொடர்ந்து பரிணமிப்பதுதான் கமலின் தனித்துவம்.கமல் நடித்த சிறந்த படங்களான "விருமாண்டி,அன்பே சிவம்,ஹேராம்,மகாநதி,தேவர் மகன்,மைக்கேல் மதன காமராஜன்,அபூர்வ சகோதரர்கள்,பேசும் படம்,நாயகன்,மூன்றாம் பிறை,மரோ சரித்ரா,சலங்கை ஒலி,16 வயதினிலே...என்று பல படங்கள் இருக்கையில் சில படங்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர் காப்பி அடித்து பெரும் புகழையும் இடத்தையும் அடைந்து விட்டார் என்பது ஒத்துக்கொள்ள முடியாதது.அப்படி என்ன பெரிய இடத்தை நாம் அவருக்கு கொடுத்துவிட்டோம்;அவரிடம் இருந்து பிடுங்கிக் கொள்வதற்கு.50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவை மூச்சாகக் கொண்டு பல சிறப்பான படங்களில் நடித்திருந்தாலும்,தமிழ்நாட்டில் கமலுக்கு இப்போதும் இரண்டாவது இடம்தான்.(கமல் 50 ஆண்டு விழாவில் ரஜினியே ஆச்சரியப்பட்டு சொன்னது,"வட இந்திய நடிகர்களெல்லாம் இப்போது வரை ஆச்சரியப்படும் விசயம்,கமல் இருக்கையில் நான் எப்படி நம்பர் 1 என்பதுதான்"-அப்படி பொது மேடையில் ரஜினி சொன்னது,அவரின் பெருந்தன்மை என்பது வேறு விசயம்)

கமல் புது இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில்லை என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள். இப்போதிருக்கும் மற்ற முன்னணி நடிகர்களை ஒப்பிடும்போது கமல் அதிகமான இயக்குனர்களுடன் வேலை செய்திருக்கிறார்.ஷங்கர்,கவுதம் மேனன் போன்றோருக்கு கமலின் படங்கள் அவர்களுடைய மூன்றாவது படம்தான்.சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்புக் கொடுத்ததில் இருந்து சரண்,சுந்தர்.c,உன்னைப்போல் ஒருவன் இயக்குனர் என்று பல இன்றைய இயக்குனர்களுடன் பணிபுரிந்திருக்கின்றார். மிஷ்கினோடு கூட படம் செய்வதுதாக இருந்தது வேறு விசயம்.கமலுடன் பணியாற்றிய பல இயக்குனர்களுக்கும் அவர்களின் இயக்கத்தில் சிறந்த படமாக இன்றும் சொல்லப்படுவது கமலுடன் அவர்கள் சேர்ந்து பண்ணிய படங்கள்தான்.

க‌ம‌லின் மீது வைக்க‌ப்ப‌டும் மற்றொரு குற்ற‌ச்சாட்டு அவ‌ரின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையில் இரு முறை ம‌ணமுடித்து விவாகரத்து ஆனது.ஒரு க‌ணவன்,ம‌னைவி இருவ‌ரும் ம‌ன‌முவ‌ந்து ச‌ட்ட‌த்திற்கு உட்ப‌ட்டு விவாக‌ர‌த்து செய்வ‌தில் என்ன‌ பெரிய‌ த‌ப்பு இருக்க முடியும்,அதையும் விட இது அவர்களின் தனிப்பட்ட விசயமும் கூட.ம‌ற்றொன்று அவ‌ருடைய திருமண வாழ்க்கையைத்தான் எல்லோரும் பெரிய‌ குறையாக‌ சொல்கிறார்க‌ளே தவிர, அவரிட‌ம் உள்ள பல ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளான‌ அர‌சிய‌லுக்கு வ‌ர‌மாட்டேன் என்று சொல்லி இப்பொது வ‌ரை த‌ன் பேச்சைக் காப்பாத்துவ‌து,த‌ன்னுடைய‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ளையெல்லாம் முதல் ஆளாக‌ ந‌ற்பணி ம‌ன்ற‌ங்க‌ளாக‌ மாற்றிய‌து,சினிமாவில் ச‌ம்பாதித்த‌ காசை சினிமாவிலேயே முத‌லீடு பண்ணுவ‌து,த‌ன்னுடைய‌ உட‌லையே தான‌மாக‌க் கொடுத்த‌து,காட்சிக்கு தேவைப்ப‌டாத‌வ‌ரை த‌ண்ணி,சிகரெட் அடிப்ப‌து போன்று த‌ன்னுடைய‌ ப‌ட‌ங்க‌ளில் நடிக்காமல் இருப்பது,முடிந்த வரை தூய தமிழிலேயே பேசுவது போன்றவற்றைப் பற்றி வாயே திறப்பதில்லை.

க‌டைசியாக‌,குறைக‌ள் இல்லாத ம‌னித‌ன் யாரும் கிடையாது. ஆனால் ஒருவ‌ரிட‌ம் உள்ள‌ சில‌ குறைக‌ளை ம‌ட்டும் மிகைப்ப‌டுத்தி,அவ‌ர் இத்த‌னை ஆண்டுகளாக‌ ப‌ண்ணிய‌ சாத‌னைக‌ளை மூடி‌ ம‌றைக்க‌ நினைப்ப‌து,ஒரு உண்மையான‌ க‌லைஞனுக்கு நாம் கொடுக்க‌ நினைக்கும் ம‌ரியாதையாக‌ இருக்க‌ முடியாது.

Sunday, September 5, 2010

பலே பாண்டியா-திரை விமர்சனம்

தன்னுடைய கடைசி ஆசையே உடனடியாக சாவதுதான் என்பதாக வைத்திருக்கும் ஹீரோவின் வாழ்வில், ஒரு தாதாவும்,பெண்ணும் குறிக்கிடுகிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் 'பலே பாண்டியா' படத்தின் கதை.

பிறந்ததிலிருந்து தான் நினைத்தது எதுவுமே நடக்காமல்,வாழ்க்கையில் விரக்தி அடையும் பாத்திரத்திற்கு விஷ்ணு பொருத்தமாக இருக்கிறார்.ப‌ட‌த்தில் விஷ்ணுவின் காஸ்ட்யூம்க‌ள் ந‌ன்றாக‌ இருக்கின்றன.குறைந்த பட்ஜெட் படமென்பதால் சென்னையின் பெரிய தாதாவைச் சுற்றி எப்போதும் இரண்டு பேர் மட்டுமே இருக்கிறார்கள் போல்.விஷ்ணுவின் 'பேட் லக்கை' காட்டுவதற்காக வரும் காட்சிகளான 'அவருடைய ஜாதகத்தை எழுதின ஜோஸியக்காரர் சாவது;அவர் வருகையில் குறுக்கே வரும் பூனை பஸ்ஸில் அடிபட்டு சாவது' போன்ற ஆரம்பக்கட்ட காட்சிகள் சுவாரசியமாக இருக்கின்றன.தாதா RKP ஆக வருபவர் நல்ல தேர்வு.பிணம் போனாத்தான் அழணும்;பணம் போனா அழக்கூடாது என்று சொல்லி விஷ்ணுவிற்கு படத்தில் கார்டியன் போல் இருக்கிறார். ஜான் விஜய் வாயைத் திறந்தாலே, நம் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

விஷ்ணு காதல் வயப்பட்டவுடன் அவர் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதும்,காதலித்த பெண் அவருடைய நண்பரை தேர்வு செய்தவுடன் பட்டாம் பூச்சிகள் இடம் மாறுவதும் நன்றாக இருக்கிறது.படத்தின் ஒரு பாடலுக்கு அதைப் பாடிய அனைத்து பாடகர்களும் நடித்திருக்கிறார்கள்(விஜய் யேசுதாஸ் டீக்கடை சேட்டனாக வருகிறார்).ஹீரோவிற்கு வாழ்வில் பிடிப்பு ஏற்பட்டு வாழ வேண்டும் என்று நினைக்கையில்,அவருடைய சாவு தேதி நெருங்கி வருவது பரபரப்பைக் கூட்டினாலும்,அதன் பின் வரும் காட்சிகள்,படம் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லத் தொடங்குகின்றன.

முதல்பாதியில் கொஞ்சம் சுவாரசியமாக செல்லும் படம், இரண்டாம் பாதியில் நம் பொறுமையை சோதிக்கிறது.குறிப்பாக விவேக் வரும் காட்சிகளிலெல்லாம் தியேட்டரில் மயான அமைதி.ஹீரோ தன்னைக் கொலை செய்யச் சொல்லி தாதாவிடம் கேட்பது(சிந்தனை செய்),அவர் ஸ்கூட்டரில் செல்லும் போது,நடப்பவர்கள் முதற் கொண்டு அவரை முந்திச் செல்வது(ஓரம் போ) என்று சில படத்தின் காட்சிகளை இயக்குனர் அப்படியே உருவியிருக்கிறார்.

சின்ன சின்ன ஐடியாக்கள் ஒரு விளம்பர படத்திற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாமே தவிர, ஒரு முழு படத்தையும் காப்பாற்ற‌ உதவாது என்பது விளம்பரபட இயக்குனராக இருந்து,தன் முதல் படத்தை இயக்கியிருக்கும் சித்தார்த் சந்திரசேகருக்கு இப்போது தெரிந்திருக்கும்.

பலே பாண்டியா-முதல் பாதி 'ஹையோ' பாண்டியா;இரண்டாம் பாதி 'ஐயோ' பாண்டியா.

Saturday, August 21, 2010

நான் மகான் அல்ல-திரை விமர்சனம்


வெண்ணிலா கபடி குழு' பட இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் கஜல் அகர்வால் ந‌டித்து வெளி வந்திருக்கும் படம் 'நான் மகான் அல்ல'.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வேலைக்காக காத்திருக்கும் கார்த்தி,கஜல் அகர்வாலைக் காதலிக்கிறார்.காலேஜில் படித்துகொண்டே பெண்களைக் கடத்திக் கொலை செய்து கொண்டிருக்கும் ஒரு ரவுடி கும்பல் செய்த கொலைக்கு,கார்த்தியின் அப்பா சாட்சியாகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

சாதாரண ஒரு கதையை வைத்துக்கொண்டு திரைக்க‌தையின் மூல‌ம் ப‌ட‌த்தை சுவார‌சிய‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள்.ம‌ன‌தில் உள்ள‌தை அப்ப‌டியே வெளிக்காட்டிக் கொள்ளும் கேர‌க்ட‌ர் கார்த்திக்கு ந‌ன்றாக‌ப் பொருந்தியிருக்கிற‌து.கார்த்தி மற்றும் க‌ஜ‌ல் அக‌ர்வால் சம்ப‌ந்தப்ப‌ட்ட‌ காத‌ல் காட்சிகள் ந‌ன்றாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன.கார்த்தியின் சாயலை ஓரளவிற்கு கொண்டிருக்கும் ஜெய்ப்பிர‌காஷ்,அப்பா வேடத்திற்கு ந‌ல்ல‌ தேர்வு.ப‌ட‌ம் முழுவதும் ஆங்காங்கே வ‌ரும் குழந்தைக‌ள் ம‌ன‌தைக் கொள்ளை கொள்கிறார்க‌ள்.மானேஜ‌ரின் பைக்கை யாருக்கும் தெரியாம‌ல் தூக்கிவிட்டு,கார்த்தி ம‌றுப‌டியும் வேலையில் சேருவ‌து சுவார‌சியம். படம் ஆர‌ம்பித்த இடத்திலேயே க்ளைமாக்ஸும் வ‌ருவ‌து ந‌ன்றாக இருக்கிற‌து.வில்லன்களாக வரும் கல்லூரி மாணவர்கள் மிரட்டியிருக்கிறார்கள்.பாஸ்கர் சக்தியின் இயல்பான வசனங்களும்,யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்திற்கு பெரிய‌ பலம்.(நல்ல மெலடியான 'ஒரு மாலை நேரம்' பாடலை படத்தில் வைத்திருந்திருக்கலாம்).

காலேஜ் மாணவ‌ர்கள் பெண்க‌ளைக் கட‌த்தும் காட்சிக‌ள் 'வேட்டையாடு விளையாடு' ப‌ட‌த்தையும் ம‌ற்ற‌ சில காட்சிக‌ள் ஷாம் நடித்த‌ 'பாலா' ப‌ட‌த்தையும் ஞாப‌க‌ப்ப‌டுத்துகின்றன.மிக‌ப் பெரிய‌ தாதாவாக காட்டப்படுபவர் காலேஜ் மாணவர்களிடம் மாட்டிக்கொண்டு சாகும் காட்சி ந‌ம்பும்படியாக‌ இல்லை.இத்த‌னைக்கும் அந்த நேரத்தில் தாதாவின் கையில் செல்ஃபோன் வேறு இருக்கிற‌து.படத்தின் வில்லன்களாக லோக்கல் தாதா,கொலை மற்றும் கொள்ளை அடிப்பவர்களிடமிருந்து தமிழ் சினிமா,கல்லூரி மாணவர்களிடம் வந்திருப்பது உறுத்தலாக‌ இருக்கிற‌து.

ஆனாலும் கார்த்தி மாதிரி ஒரு ந‌டிக‌ரை வைத்துக்கொண்டு பெரிய பட்ஜெட்டில் இல்லாமல்,மிகவும் குறைந்த‌ ப‌ட்ஜெட்டில்,அதிக‌மான‌ ச‌ண்டைக் காட்சிகளோ,பாடல் காட்சிகளோ இல்லாமல் விறு விறுப்பான‌ ஒரு ப‌ட‌த்தைக் கொடுத்த‌‌தில் வெற்றி பெற்றிருக்கிறார் இய‌க்குன‌ர் சுசீந்த‌ர‌ன்.

நான் மகான் அல்ல‌-கார்த்தி காட்டில் ம‌ழை.

Wednesday, August 18, 2010

பதிவுலகில் நான்-தொடர்பதிவு

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மோக‌ன்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என்னுடைய‌ முழு பெய‌ர் மோகன் ராம்குமார். ஆனால் எல்லோரும் என்னை மோக‌ன் என்றே கூப்பிடுவ‌தால் நானும் மோக‌ன் என்றே வைத்துக்கொண்டேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

ரொம்ப‌ நாட்களாக‌வே ப‌ல‌ருடைய ப‌திவை ம‌ட்டுமே ப‌டித்துக் கொண்டிருந்தேன்.ஒரு நாள் க‌ன‌வில் நான் ஒரு ப்ளாக் ஆர‌ம்பித்து ஒரு ப‌திவு போடுவ‌து போல‌வும்,அத‌ற்கு நான்கு பேர் வ‌ந்து க‌மெண்ட் போடுவ‌து போல‌வும் ஒரு க‌ன‌வு வ‌ந்தது.ம‌றுநாளே மிக‌வும் குஷியாகிப்போய் இந்த‌ப் ப‌திவுலகில் என் கால‌டி(கை) எடுத்து வைத்தேன்.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

என்னுடைய ந‌ண்ப‌ர்க‌ளை க‌மெண்ட் மட்டுமே போட‌ சொன்னால் ஒரு ப‌திவிற்கோ அல்ல‌து இர‌ண்டு ப‌திவிற்கோதான் போடுவார்கள் என்று நினைத்து ந‌ண்ப‌ர்க‌ள் சில‌ரை ப்ளாக் ஆர‌ம்பிக்க‌ தூண்டினேன்(குறைந்த‌ ப‌ட்ச‌ம் அவ‌ர்க‌ளுக்கு நான் க‌மென்ட் போட‌ வேண்டுமே என்ப‌தற்காக‌ எனக்கு வந்து க‌மெண்ட் போடுவார்க‌ள் என்று நினைத்து).பெரும்பாலானோர் ப‌திவு போடுவ‌தற்காக‌ நிறைய‌ விச‌ய‌ங்க‌ள் வைத்து இருந்தாலும் நான் எழுதுகின்ற க‌விதைக்கெல்லாம்(?) க‌மெண்ட் போட‌ வேண்டுமே என்பதற்காக பயந்து த‌ங்க‌ளுடைய‌ ப்ளாக்கையே அப்டேட் பண்ணுவதில்லை. தமிழிஷ்,த‌மிழ்ம‌ணத்தில் இணைப்பதன் வாயிலாக‌ என் ப்ளாக்கை மற்றவர்களிடம் எடுத்து செல்ல முடிகிறது..

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என‌க்கு சொந்தமாக‌ எதுவுமே இல்லாமல் போய்விட்டதால், இப்ப‌ வ‌ரைக்கும் சொந்த‌ விச‌ய‌ம் எதுவுமே என் ப‌திவில் எழுதிய‌தில்லை.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ப‌திவுகள் மூல‌ம் ச‌ம்பாதிப்பதற்காக‌-ந‌ண்ப‌ர்க‌ளை ம‌ட்டும்.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

தாய் மொழி தமிழிலேயே பெரிதாக எதுவுமே எழுத‌ முடிய‌வில்லை என்ப‌தால் நீங்கள் படித்து கொண்டிருக்கின்ற இந்த‌ ஒரு ப்ளாக் ம‌ட்டும்தான்.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

தின‌மும் ஒரு ப‌திவு போட‌வேண்டுமென்ப‌த‌ற்காக‌ சுவாரசியமில்லாத ஒன்றை ப‌திவாய் போடும் ப‌திவ‌ர்க‌ள் மேல் கோப‌ம். பொறாமைப் ப‌ட‌ வைத்த பதிவ‌ர்க‌ள் என்றால் நான் நெடு நாட்க‌ளாய் ப‌டித்து வ‌ரும் அய்ய‌னார்,ஜ்யோவ்ராம் சுந்த‌ர்,மோக‌ன் தாஸ்,ராஜா சந்திரசேகர் ம‌ற்றும் ப‌ல‌ர்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

என் முதல் ப‌திவை ப‌டித்து பாராட்டிய‌து ப‌ழனிய‌ப்ப‌ன்(க‌மென்ட் போட‌ சொல்லி அவனை ரொம்ப‌வே டார்ச்ச‌ர் ப‌ண்ணினேன் என்ப‌து வேறு விச‌ய‌ம்)

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக அனுப‌விப்ப‌தற்கு ப‌திவுல‌க‌ம் மிக‌வும் உறுதுணையாக இருக்கிற‌து.ப‌திவுல‌கின் மூல‌மாக‌ என்னுடைய‌ வேலை விச‌ய‌மாக‌வும் அதிக‌மாக க‌ற்றுக் கொண்டிருக்கிறேன்.பதிவுலகம் கூட பெண் போன்றுதான்,நம்மை ஆக்கவும் செய்யும்;அழிக்கவும் செய்யும்.

தொடர் பதிவிற்கு அழைத்த நண்பர் மனோவிற்கு மிக்க நன்றி!

Sunday, August 8, 2010

பாணா காத்தாடி-திரை விமர்சனம்


அறிமுக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், புதுமுகங்கள் அதர்வா,சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் பட்ம் 'பாணா காத்தாடி'.

வட சென்னையில் வசிக்கும் அதர்வாவுக்கும், ஃபேசன் டெக்னாலஜி படிக்கும் சமந்தாவிற்கும் நடுவில் காதல் அரும்புகிறது.இவர்களின் காதலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவே, அதர்வா ஒரு கொலையை நேரில் பார்க்க நேரிடுகிறது.இதிலிருந்து அதர்வா எப்படி 'விடுபடுகிறார்(?)' என்பதுதான் 'பாணா காத்தாடி' படத்தின் கதை.

அதர்வாவும்,சமந்தாவும் அவர்களின் அறிமுகப் படங்கள் என்ற நினைப்பே நமக்கு தோன்றாத‌வாறு நன்றாக நடித்திருக்கிறார்கள். பாடகி-‍நடிகை வசுந்தரா தாஸ் மற்றும் காமிலினி முகர்ஜி இருவரையும் ஒன்றாக வைத்து குழைத்தது போல் அழகாக இருக்கிறார் சமந்தா.இதே போன்று நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ்,தெலுங்கு இரண்டிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று தோன்றுகிறது.பிரசான்னா தாதாவாக ஆர்ப்பாட்டமான அமைதியான நடிப்பில் வந்து மனதைக் கொள்ளை கொள்கிறார்.

அதர்வாவுடன் சண்டையிட்டபின் அவரை சமாதானப்படுத்துவதற்காக அவரை தியேட்டருக்கு வரவழைத்து,சமந்தா காட்டும் 'குறும் படம்' நன்றாக இருக்கிறது.படத்தில் நம்மை பெரிதும் கவர்பவர் படத்தின் வசனகர்த்தா. 'சில சமயம்,நமக்கு தேவைப்படுறது நமக்கு கிடைக்காது;ஆனால் நமக்கு கிடைச்சது நமக்கு தேவைப்பட்டதை விட நல்லாவே இருக்கும்' என்பதாகட்டும், மௌனிகா அதர்வாவிடம் சொல்லும் 'என்னமோ அண்ணா சிலை மாதிரி எப்பவும் கையில புக்கை வைச்சிருக்க' மற்றும் 'கிட்ட வா நாயேன்னா, மூஞ்சியை நக்குற' என்று கிடைத்த‌ இடங்களிலெல்லாம் சிக்ஸ்ர் அடித்திருக்கிறார். ஜெயிலிலிருந்து வரும் அதர்வாவிடம்,மௌனிகா சொல்லும் 'என்னைப் பெத்தவங்களும் சரி,என்னைக் கட்டினவரும் சரி, என் பையன் அளவுக்கு என்னை சந்தோஷப்ப்டுத்தினதில்லை' என்பது உருக்கம்.

வட சென்னையைக் களமாகக் கொண்டு வரும் படங்களுக்கெல்லாம் மொத்த குத்தகை எடுத்தது போல் இந்தப் படத்திலும் காமெடி கருணாஸ்.அவரின் காமெடியும் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.படத்தில் வரும் எல்லா பாடல்களும்(கடைசி குத்துப்பாட்டு தவிர்த்து),படமாக்கப்பட்ட விதமும் நன்றாக இருக்கின்றன.அதர்வாவை ஒரு தலையாகக் காதலிக்கும் அந்த ஸ்கூல் பெண் கேரக்டர் நன்றாக இருக்கிறது.

பல முடிச்சுகளைப் போட்டு விட்டு அதனூடே அழகாக பயணிக்கவும் செய்து விட்டு, அதிலிருந்து வெளிவரத் தெரியாமல் 'அபிமன்யு' மாதிரி இரண்டாம் பாதியில் இயக்குனர் மாட்டிக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. பரபரவென நகர வேண்டிய இரண்டாம் பாதி காட்சிகள் சமந்தா அதர்வாவிடம் மன்னிப்பு கேட்பதும்,அவர் அதை நிராகரிப்பதுமாக நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. இயக்குனர் இரண்டாம் பாதியைக் கொஞ்சம் இழுத்துப் பிடித்திருந்தால் 'பாணா காத்தாடி' இன்னும் கொஞ்சம் உயரப் பறந்திருக்கும்.

Sunday, August 1, 2010

Top 10 Songs-July

1) அரிமா அரிமா-எந்திரன்-‍இசை:A.R ரகுமான்

2) ஓ ஷலா-காதல் சொல்ல வந்தேன்-‍இசை:யுவன் சங்கர் ராஜா

3) முழு மதி-‍‍கனி மொழி-இசை:சதீஷ் சக்ரவர்த்தி

4) ஒரு மாலை நேரம்-‍நான் மகான் அல்ல‌-இசை:யுவன் சங்கர் ராஜா

5) பச்சைக்கிளி போலே-அய்யனார்-‍இசை:தமன்

6) தாக்குதே கண் தாக்குதே-பாணா காத்தாடி-‍இசை:யுவன் சங்கர் ராஜா

7) Missing Something-அரிது அரிது-இசை:தமன்

8) இதுதான் காதல்-‍நந்தி-‍இசை:பரத்வாஜ்

9) சஞ்சீவனா-‍வந்தே மாதரம்-இசை:D.இமான்

10) கண்டேனே காதல்‍-மாசி-‍இசை:தினா

Wednesday, July 28, 2010

ஊசி இதழ் காதல்

தொடர்ந்து இருமிக் கொண்டிருந்த என்னை கவலையோடு பார்த்தார்கள் அம்மா. "ஆஸ்பத்திரிக்குப் போகலாமா?" என்று அம்மா கேட்டவுடன் உடனே சந்தோஷமாகத் தலையசைத்தேன்."வா! கணபதி டாக்டரிடம் செல்லலாம்,அவர் ஊசி போட்டால் உடனே சரியாகிவிடும்" என்று சொன்ன அம்மாவை முறைத்துப் பார்த்து விட்டு அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்,நாம் புருஷோத்தமிடமே செல்லலாம். அவர் ஊசி போட்டால்தான் எனக்கு 'உடனே' சரியாகி விடுகிறது என்றவனை பரிதாபமாகப் பார்த்தார்கள் அம்மா.

எங்கள் ஊரில் டாக்டர் புருஷோத்தமைப் பார்த்தாலே அனைத்து குழந்தைகளும் பயந்து அழுவார்கள்.சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க எங்கள் ஊரில் உள்ள எல்லா அம்மாக்களும் பயன்படுத்தும் ஆயுதம் அவர் ஒருவர்தான்.அதற்கு காரணம் அவர் பயன்படுத்தும் ஊசி. மற்ற மருத்துவர்கள் எல்லாம் 5 சென்டிமீட்டரில் ஊசி வைத்திருந்தால் அவர் பயன்படுத்தும் ஊசி மட்டும் முழு அடி ஸ்கேல் அளவிற்கு இருக்கும். வெட்டினரி டாக்டர்களிடம் இருக்கும் இரக்கம் கூட ஊசி போடும்போது அவரிடம் கொஞ்ச‌ம் கூட‌ இருக்காது.அந்த ஊரிலே அவரிடம் ஊசி போட சந்தோஷமாக செல்லும் ஒரே ஆள் நான்தான்.

நான் அப்போது ஆறாவது 'பி பிரிவு படித்துக் கொண்டிருந்தேன்.என்னுடன் ஆறாவது 'ஏ' பிரிவு படித்துக் கொண்டிருந்த பிரியாதான் என் வாழ்க்கையை அப்போது மிகவும் சுவாரசியப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் வேறு பிரிவில் படித்துக் கொண்டிருந்தாலும், அவளை தினமும் பார்க்கும் பாக்கியம் மட்டுமே,பள்ளிக்கு செல்லும் என் வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருந்தது. அவளுடன் ஒரு முறை கூட பேசியதில்லையென்றாலும், என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவள் ஒரு புறம் உதட்டசைத்து சிரிக்கும் சிரிப்பு,எனக்காகவே அவள் பிரத்யோகமாகக் கண்டுபிடித்தது போலிருக்கும்.அவளுடைய அப்பாதான் டாக்டர் புருஷோத்தம்.

அவரின் கிளினிக் அவருடைய வீட்டின் ஒரு ப‌குதியிலேயே இருப்ப‌தால்,அவரின் ஆஸ்ப‌த்திரிக்கு எப்போது சென்றாலும் அவ‌ளையும்,எனக்கான அவ‌ளின் பிரத்யோக சிரிப்பையும் தரிசித்து விட‌லாம்.அவ‌ரின் கிளினிக்கிற்கு நானும் அம்மாவும் சென்ற‌போழுது அவ‌ள் நோட்டில் ஏதோ வரைந்து கொண்டிருந்தாள்.பள்ளிக்கூடத்தில் ஸ்கூல் யூனிபாஃர்மில் பார்ப்பதையும் விட அவள் வீட்டில் அணிந்திருந்த கலர் பாவாடை சட்டையில் வண்ணத்துப் பூச்சி போல் இருந்தாள்.காற்றில் இரு புறமும் அசையும் முடி வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை நினைவூட்டியது.என்னைப் பார்த்து விட்டு அவள் சிந்திய‌ எனக்கான பிர‌த்யோக சிரிப்பிலேயே காய்ச்ச‌ல் பாதியாய் குறைந்த‌து போலிருந்தது. ஒரு அடி ஸ்கேல் ஊசியை எடுத்துக் கொண்டே டாக்ட‌ர் அவருக்கே கூட புரியாத ஒரு ஜோக்கைக் கூறியவாறு எனக்கு ஊசி போட்டார்.ஊசியினால் ஏற்பட்ட வ‌லி என்னிட‌மிருந்து அம்மாவின் க‌ண்களுக்கு மாறியிருந்தது.

ப‌த்தாவ‌து வ‌ரை நாங்க‌ள் இருவ‌ரும் ஒன்றாக‌வே ப‌டித்து வ‌ந்திருந்தாலும் பிரியாவிட‌ம் ஏனோ பேச‌வே தோன்றிய‌தில்லை;பேசுவ‌தற்கான வாய்ப்பும் கிடைக்க‌வே இல்லை.அத‌ன் பிறகு வெளியூருக்குப் படிக்க செல்லும் சூழ்நிலை வந்த‌போது அவளை விட்டுப் பிரிவதுதான் அப்போது மிகவும் கஷ்டமாக இருந்தது.அம்மாதான் அது பற்றி ஏதும் அறியாமல் அடிக்கடி வந்து ஹாஸ்டலில் என்னைப் பார்ப்பதாக ஆறுதலளித்துக் கொண்டிருந்தாள்.அடிக்க‌டி ஹாஸ்ட‌லிலிருந்து ஊருக்கு ஓடி வ‌ரும் என்னைப் பார்த்து விட்டு, ஹாஸ்ட‌லில் ச‌மைக்கும் ச‌மைய‌ல்கார‌ர்களையும் திட்டிக் கொண்டிருந்தார்க‌ள்.

பிரியாவும்,நானும் வெவ்வேறு ஊர்க‌ளுக்குப் ப‌டிக்க‌ சென்றதால் இத்துட‌ன் அவளைப் பார்த்து ஏழு வ‌ருட‌ங்க‌ளாகி விட்ட‌து.அவ‌ளைத் தாவ‌ணியில் தரிசிக்கும் பாக்கிய‌ம் கிடைக்காத‌தை நினைத்து மிக‌வும் வ‌ருத்த‌மாக‌வும் இருந்த‌து.ஆறு மாதங்க‌ளுக்குப் பிறகு ஊருக்குள் வ‌ந்த எனக்கு ப‌ய‌ணக் க‌ளைப்பினாலோ அல்ல‌து ஊரில் தொட‌ர்ந்து பெய்து கொண்டிருந்திருந்த ம‌ழையினாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ காய்ச்ச‌லும் வ‌ந்திருந்தது.

ரொம்ப வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு டாக்ட‌ர் புருஷோத்த‌மைப் பார்ப்ப‌த‌ற்காக ச‌ந்தோஷமாக கிளம்பிக் கொண்டிருந்தேன்.ஆடி மாதத்து சாரல் மழை வேறு குழந்தையின் வாயிலிருந்து ஒழுகும் நீர் போன்று விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.நான் கிளம்பியதைப் பார்ப்பவர்கள் எவரும் எனக்கு காய்ச்சல் இருப்பதாகவே ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.அவ‌ளுடைய அழகான இதழ்கள் வேறு எனக்கு அடிக்கடி ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தது.அவளுடைய இதழ்கள் அவ்வளவு மென்மையாக,மிருதுவாக சற்று முன் பெய்த மழைத் துளிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ரோஜாப் பூவைப் போன்று எப்போதும் ஈரப் பதத்துடன் இருக்கும்.அவள் இதழ்களைப் பார்த்துவிட்டு ரோஜாப் பூவைப் பார்த்தால்,ரோஜாப் பூ ஒன்றும் அவ்வளவு அழகாகத் தெரியாது.அவளும் அவளின் இதழ்களும் இப்போது எப்ப‌டியிருக்கும் என்ற‌ நினைப்பே பேஷண்டைப் பார்த்த புருஷோத்தம் போன்று ச‌ந்தோஷம‌ளித்துக் கொண்டிருந்த‌து. இன்று பார்க்கையில் க‌ண்டிப்பாகப் பேசிவிட‌வேண்டும் என்றும் முடிவெடுத்திருந்தேன்.

அவள் வீடு எந்த வித மாற்றமுமில்லாமல் அப்படியே இருந்தது.அவ‌ள் வீட்டு வாச‌லை அடைந்த‌துமே எங்கேயோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்து சிரித்தாள். வாழ்க்கையில் முதல் முறையாக அன்று என்னுட‌ன் பேசினாள்.இப்போது நான் என்ன படித்துக் கொண்டிருக்கிறேன் என்று கேட்டு விட்டு பின்னால் வ‌ந்து கொண்டிருந்த த‌ன் க‌ணவ‌னை அறிமுக‌ப்படுத்தினாள்.அதன் பின் காய்ச்சலினாலே என்னவோ அவர்கள் இருவரிடமும் என்னால் சரியாகப் பேச முடியவில்லை.அன்று டாக்ட‌ர் புருஷோத்தம் போட்ட ஊசி வாழ்க்கையில் முதல் முறையாக என‌க்கு வ‌லித்தது.சார‌ல் மழையும் வானத்திலிருந்து என் க‌ண்களை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் இட‌ம் பெயர்ந்து வந்து கொண்டிருந்த‌து.

Monday, July 12, 2010

ம‌த‌ராச‌ப‌ட்டின‌ம்-திரை விமர்சனம்


இதற்கு முன் இரு படங்களை(கிரீடம்,பொய் சொல்லப் போறோம்) 'ரீமேக்' கிவிட்டு முதன் முறையாக தன்னுடைய சொந்தக் கதையில் இயக்குனர் விஜய் விஸ்வரூபமெடுத்திருக்கும் படம் 'மதராசபட்டின‌ம்'.

கதை என்னவே ஏழைப் பையன்,பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும் பழைய கதையாக இருந்தாலும்,படம் நடக்கும் காலமும்,படத்தை சுவாரசியமாக எடுத்திருக்கும் விதமும் நம்மை 'ஆஹா' என சொல்ல வைக்கின்றன.பொக்கிஷம் படத்தில் சேரன் விட்ட கோட்டையை விஜய் இந்தப் படத்தில் கட்டியிருக்கிறார்.

சலவைத் தொழில் செய்யும் ஆர்யாவிற்கும்,மதராஸ் கவர்னர் பெண் ஏமி ஜாக்சனுக்கும் ஏற்படும் காதல் இயல்பாக இருக்கின்றது.ஏமிக்காக‌ அ,ஆ போன்றே ஆர்யா ஏ,பி,சி,டி க‌த்துக் கொள்வ‌தும், ஏமியிட‌ம் சிர‌ம‌ப்ப‌ட்டு இவ‌ர் ஆங்கில‌த்தில் பேச‌ப் போக,அவர் இவ‌ரிட‌ம் கொஞ்சும் த‌மிழில் பேசுவ‌தும் சுவார‌சிய‌ம்.ஏமி ஆர்யாவிற்கு ஒரு ப‌ரிசு அளிப்ப‌தும்,என்னிட‌ம் கொடுக்க‌ என்ன‌ இருக்கிற‌து என்று ஆர்யா சொல்லுகையில் ஏமி அவ‌ரிட‌ம் 'தாலி'யைப் ப‌ரிசாக‌க் கேட்ப‌தும்,ரொம்ப‌ நாட்க‌ளுக்கு அப்புறம் தாலி சென்டிமென்ட் கூட‌ ந‌ன்றாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருக்கிறது.துணி காயப் போடும் இடத்தை சுட்டிக் காட்டி முன்னாடியெல்லாம் இங்கே துணி காயும்;இப்ப எங்க வயிறு காயுது என்கையில் வசனகர்த்தா பளிச்சிடுகிறார்.ப‌ட‌த்தின் முத‌ல் பாதி கொஞ்சம் பெரிதாக இருந்தாலும், முதல் பாதி முழுவ‌தும் இழையோடும் ந‌கைச்சுவை ந‌ம்மைக் க‌ட்டிப்போட்டு விடுகின்ற‌து.

த‌மிழ் ந‌டிகைக‌ளின் லிப் மூவ்மென்ட்டே பாட‌ல்க‌ளில் ஒழுங்காக‌ இல்லாமல் இருக்கும் இக்கால கட்டத்தில்,ஆருயிரே பாட‌லில் ஏமியின் லிப் மூவ்மென்ட் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்துகிற‌து.இந்தியாவிற்கு விடுத‌லை கிடைக்க‌ இருக்கும் க‌டைசி நாளில், காத‌ல் ஜோடிக‌ளும் சுத‌ந்திர‌ப் ப‌றவைகளாக‌ ப‌றக்க,தப்பி ஓடும் காட்சிக‌ள் நெகிழ்வாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.க‌டைசிக் காட்சியில் ஆர்யாவின் கை ப‌ல‌மாகப் ப‌ட‌கைப் பிடித்திருப்ப‌தும்,ஏமி அவ‌ரின் கையை விடுவிப்ப‌த‌ற்காக ப‌ல‌ம் கொண்ட‌ ம‌ட்டும் அவ‌ர் கையைக் காய‌ப்ப‌டுத்துவ‌தும் உருக்க‌ம்.

ந‌ல்ல‌ ப‌ட‌த்தில் எல்லாமே ந‌ன்றாக‌ அமைந்து விடுவ‌து போல்,இப்ப‌ட‌த்திலும் கேம‌ரா,இசை,ந‌டிக‌ர்க‌ள் தேர்வு ம‌ற்றும் ப‌ட‌த்தில் ப‌ணிபுரிந்த‌ அனைவ‌ரின் உழைப்பும் நம்மை பிர‌மிக்க‌ வைக்கிறது.

ம‌த‌ராச‌ப‌ட்டின‌ம்-MADARASAPATINAM

Saturday, July 10, 2010

ஆனந்தபுரத்து வீடு-திரை விமர்சனம்


தன்னுடைய மகன் கஷ்டத்தில் இருக்கும்போது அவனுடைய விபத்தில் இறந்துபோன பெற்றோர் எப்படி ஆவியாக மாறி அவனுக்கு உதவுகிறார்கள் என்பதுதான் 'ஆனந்தபுரத்து வீடு' படத்தின் கதை.

நந்தா தன் மனைவி சாயா சிங் மற்றும் குழந்தையுடன் சென்னையிலிருந்து தன்னுடைய பரம்பரை வீடு இருக்கும் ஆனந்தபுரத்திற்கு வரும் ஆரம்பக் காட்சிகளும்,அந்த சூழலும் நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.அதன் பின்னர் நம் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து படம் முடியும்போது முற்றிலும் இல்லாமல் போய் விடுகின்றது.

ப‌ட‌த்தில் ந‌டித்திருக்கும் வாய் பேச‌ முடியாமல் வரும்‌ குட்டிக் குழந்தையும் அத‌ன் ந‌டிப்பும் கொள்ளை அழகு.அதுவும் பேய் செய்யும் வித்தைக‌ளுக்கெல்லாம் அந்தக் குழந்தை ப‌ழி ஏற்க‌ நேர்வ‌தும்,அத‌ன் முக‌ பாவ‌ங்க‌ளும் அருமை.இரண்டாம் பாதியில் படு பயங்கரமான த்ரில்லிங் காட்சிகள் வருமென்று எதிர்பார்த்தால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.வீட்டை வாங்க‌ வ‌ருப‌வ‌ரிட‌ம் பேய் செய்யும் மாயாஜால‌க் காட்சிகளாகட்டும்;நந்தாவின் ந‌ண்ப‌னுடைய காத‌லியும் ஆன‌ந்த‌புர‌த்து வீட்டிற்கு வ‌ந்த‌வுட‌ன், வில்லன் சொல்லும் 'நாலும்,ஒண்ணும் அஞ்சு;யாரும் வீட்டை விட்டுப் போக‌க்கூடாது' என்ப‌தும் 'ப‌தினெட்டு ரூபாய்க்கு இந்த மேஜிக் ஒர்த்' என்ப‌தும்‌ பேசாம‌ல் இந்தப் பட‌த்தை முழு காமெடி பட‌மாக‌வே எடுத்திருக்க‌லாமென்று தோன்றுகிற‌து.

சின்னத் திரையில் மர்ம சீரியல்கள் எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் 'நாகா', பெரிய திரையிலும் இரண்டே கால் மணி நேரத்திற்கு ஒரு சீரியலை விளம்பர இடைவேளை மட்டும் இல்லாமல் எடுத்திருக்கின்றார்.இப்ப‌ வருகின்ற‌ த‌மிழ் பட‌ங்களெல்லாம் ந‌ன்றாக இருக்குமா என்று ப‌ய‌த்துட‌ன் பார்க்க‌ வேண்டியதாயிருக்கிற‌து.ஆனால்,இந்த‌ப் ப‌ட‌த்தை ஒரு பயமுமில்லாம‌ல் பார்க்கலாம் என்ப‌துதான் ப‌ட‌த்தின் ப‌ல‌வீன‌ம்.இருந்தாலும்,இந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்துவிட்டு ப‌ட‌த்தின் த‌யாரிப்பாளரான‌ இய‌க்குன‌ர் 'ஷங்க‌ருக்கு' க‌ண்டிப்பாக 'கிலி' ஏற்ப‌ட்டிருக்கும்.

ஆன‌ந்த‌புர‌த்து வீடு-பாழடைந்த‌ வீடு.

Wednesday, July 7, 2010

Top 10 Songs-June

1) பனியே பனியே-அய்யனார்-‍இசை:தமன்

2) உசுரே போகுதே-ராவணன்-‍இசை:A.R ரகுமான்

3) முதல் முதலாய்-ஆர்வம்-இசை:ரோணி ராஃபேல்

4) அன்புள்ள சந்தியா-காதல் சொல்ல வந்தேன்-‍இசை:யுவன் சங்கர் ராஜா

5) மருதாணி பூவுமேலே-‍வம்சம்-இசை:தாஜ் நூர்

6) பைத்தியம் பிடிக்குது-பாணா காத்தாடி-‍இசை:யுவன் சங்கர் ராஜா

7) சித்திர வானம்-ஆனந்தப்புரத்து வீடு-இசை:ரமேஷ் கிருஷ்ணா

8) சொல்பேச்சு-தில்லாலங்கடி-‍இசை:யுவன் சங்கர் ராஜா

9) அடங்காத வேகம்-பட்டாபட்டி 50/50-இசை:அருள் தேவ்

10) ஆசை அரக்கி-விருந்தாளி-‍இசை:S.S.குமரன்

Tuesday, June 29, 2010

மழையின் வலி


மழைக் காலங்களில்
மரத்தின் இலையிலிருந்து
நீர் சொட்ட சொட்ட ஒழுகுவது போல்
உன் மீதான காதல்
என் இதழ்களிலிருந்து
சொற்களாய் பிரவாகம் கொண்டு
உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
பாலையினால் செய்த
மனத்தினுள்ளே
மழையோ,கண்ணீரோ
எதையும் கரைக்க முடிவதேயில்லை.
மழையில்லாத
கொடும் வெம்மை காலத்தில்
உனக்குப் புரிய நேரிடலாம்
பாலையில் பெய்யும்
மழையின் வலி!

Wednesday, June 23, 2010

வேதம்-திரை விமர்சனம்(தெலுங்கு)


1)மிலிட்டரி ஆஃபிஸராக்கிப் பார்க்க நினைக்கும் தன் அம்மாவின் ஆசைக்கு எதிராக மியூசிக் பேண்ட் வைத்து பெரிய ஆளாகி விடலாம் என்று நினைத்து போட்டியில் கலந்து கொள்வதற்காக பெங்களூரிலிருந்து ஹைதரபாத்திற்கு பயணிக்கிறார் மனோஜ்.

2)ஏழையான அல்லு அர்ஜுன்,தான் பெரிய பணக்காரன் என்று பொய் சொல்லி ஒரு பணக்கார பெண்ணைக் காதலிக்கிறார். அந்த பெண்ணிற்கு ஒரு பெரிய பார்ட்டி கொடுப்பதற்காக 40,000 ரூபாய் பணத்திற்காக யாரிடமிருந்தாவது நகையை திருடுவதற்காக ஹைதரபாத் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறார்.

3)வறுமையில் வாடும் சரண்யா கந்து வட்டிக் கொடுமையால்,பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த தன் பையனைப் பண முதலைகளிடம் கொத்து அடிமை போல் இழக்க நேரிடுகிறது. தன்னுடைய கிட்னியை விற்றுப் பையனை மீட்டு விடலாம் என்று கிராமத்திலிருந்து ஹைதரபாத்திற்கு பயணிக்கிறார்.

4)சார்ஜாவிற்கு மறுநாள் பயணப்பட இருக்கும் நிலையில்,போலிஸால்
முஸ்லிம் தீவிரவாதி என்று தப்பான முத்திரை குத்தப்பட்டு ஜெயிலில் இருக்கிறார் மனோஜ் பாஜ்பாய்.

5)உள்ளூர் விபச்சார தொழிலில் பெரும் பணத்தை அந்த விடுதி முதலாளியே அபகரித்து விடுவதால்,தனியாக சென்று தொழில் செய்ய ஹைதரபாத்திற்கு செல்கிறார் அனுஷ்கா.

இவ்வாறு ஐந்து கிளைக் கதைகளும் ஒவ்வொரு புள்ளியில் பயணப்பட்டு, கடைசியில் அரசாங்க ஆஸ்பத்திரியில் சந்திக்க நேரிடுகிறது.அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் 'வேதம்' படத்தின் கதை.

இந்த‌ மாதிரி ஒரு சிக்க‌லான‌ திரைக்க‌தையை வைத்துக் கொண்டு ப‌ட‌த்தை ந‌க‌ர்த்தியிருக்கும் இய‌க்குன‌ருக்கும்,மாஸ் ஹீரோ இமேஜை தூக்கி எறிந்து விட்டு இது போல் ஒரு க‌தையில் ந‌டித்திருக்கும் அல்லு அர்ஜீனும் பார‌ட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌வர்க‌ளாகிறார்க‌ள்.சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் 'தாஜ் ஹோட்ட‌லில்' ந‌டந்த‌ தீவிர‌வாத‌ தாக்குதலைப் பட‌த்தின் க‌ளனாக‌க் கொண்டு வ‌ந்திருப்ப‌தில் டைர‌க்ட‌ரின் புத்திசாலித்த‌னம் பளிச்சிடுகிறது.

ஒவ்வொரு கிளைக்க‌தையும் ஒவ்வொரு வித‌மான‌ பின்ன‌ணியைக் கொண்டிருப்ப‌து ந‌ன்றாக‌ இருக்கிறது. படத்தின் வசனங்கள் பல இடங்களில் நன்றாக இருக்கிறது.அனுஷ்கா பேசும் "ம‌த்த வேலையில் அனுப‌வ‌ம் அதிகமாக‌ இருந்தாத்தான் காசு அதிக‌மாக‌க் கிடைக்கும்.ந‌ம்ம‌ வேலையில அனுப‌வ‌ம் குறைய‌ குறைய‌த்தான் காசு அதிக‌மாக‌ கிடைக்கும்.அனுப‌வ‌மே இல்லைனா இன்னும் அதிக‌மாக‌ காசு கொடுப்பாங்க‌" என்ப‌தாக‌ட்டும்;மனோஜ் சொல்லும் "ஆங்கிலத்தில் 'வாட்டர்',தெலுங்கில் 'நீலு',இந்தியில் 'பானி' என்பது மாதிரி ஒருத்தருக்கு 'அல்லா',மற்றொருவருக்கு 'இயேசு',இன்னொருவருக்கு 'ராமன்'.எந்த கடவுளைக் கும்பிட்டாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான்" என்பதில் வசனம் பளிச்சிடுகிறது.‌தன்னிட‌ம் லஞ்ச‌ம் கேட்கும் போலிஸ் அதிகாரியிட‌ம் அனுஷ்கா சொல்லும் "என்னிடம் ப‌டிப்பு,உத்தியோக‌ம் இல்லாததினால் நான் விபச்சார‌த் தொழில் பண்றேன்,உங்க‌ளுக்குத்தான் ப‌டிப்பு,ந‌ல்ல‌ உத்தியோக‌ம் இருக்குதே,அப்புறமும் ஏன் லஞ்ச‌ம் வாங்குறீங்க‌" என்ப‌து சாட்டைய‌டி.

ப‌ட‌த்தில் ந‌டித்திருக்கும் அத்த‌னை பேரும் அவ‌ர்க‌ளுடைய‌ பாத்திர‌த்தை உணர்ந்து ந‌டித்திருக்கிறார்க‌ள். தீவிர‌வாத தாக்குத‌லுக்கு உள்ளாகி உயிர் ம‌டியும் தறுவாயில் அல்லு அர்ஜூன் ம‌னோஜிட‌ம் அவ‌ர் பெய‌ரைக் கேட்ப‌து ட‌ச்சிங். அதே போல் தான் மிலிட்ட‌ரி ஆஃபிஸராக்க‌ நினைத்த‌ த‌ன் பைய‌ன் ச‌ட‌ல‌த்தைப் பார்த்த‌ அவ‌ன் தாய் உருகுவ‌தாக‌ட்டும்;தன்னால் முஸ்லீம் தீவிர‌வாதியாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னோஜ் பாஜ்பாயால் உயிர் பிழைத்த‌ போலிஸ் அவ‌ருக்கு ந‌ன்றி சொல்லும் காட்சிக‌ளும் ந‌ன்றாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
ப‌ட‌த்தின் க‌டைசி அரை ம‌ணி நேர‌ம் த‌விர்த்து ம‌ற்ற‌ காட்சிக‌ள் மிக மெதுவாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருப்பதைத் தவிர்த்திருக்க‌லாம்.அதே போல் ச‌ர‌ண்யா,மனோஜ் பாஜ்பாய் ச‌ம்பத்த‌ப‌ட்ட‌ காட்சிக‌ளும் அதிகமான சென்டிமட்டுடன் நாட‌க‌த்த‌ன‌மாய் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன.
பத்து வெவ்வேறு கதைகளை ஒரே புள்ளியில் இணைக்கும் கேரளா கஃபே(மலையாளம்) போன்று இல்லாவிடினும்,க‌டைசி அரை ம‌ணி நேர‌ காட்சிக‌ளிலும்,இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்துவ‌திலும் இய‌க்குன‌ர் வெற்றி பெற்றிருக்கின்றார்.

வேத‌ம்-ஆந்திர‌ ர‌ங் தே ப‌ச‌ந்தி

Monday, June 21, 2010

ராவ‌ணன்- திரை விமர்சனம்


கமல் 'விருமாண்டியில்' முயற்சித்த உக்தியையே கொஞ்சம் மாற்றி,மலையூர் மம்பட்டியான் காலத்திய கதையை இராமயண முலாம் பூசி மணிரத்னம் கொடுத்திருக்கும் படம்தான் 'ராவணன்'.

தன்னுடைய‌ த‌ங்கையின் வாழ்க்கையை சீர‌ழித்த போலிஸ்கார‌ர்க‌ளைப் ப‌ழி வாங்குவ‌தற்காக, SP பிருத்விராஜின் ம‌னைவி ஐஸ்வ‌ர்யாராயைக் காட்டுக்குள் தூக்கிக் கொண்டு வ‌ந்து விடுகிறார் விக்ர‌ம். பிருத்விராஜ் காட்டுக்குள் சென்று எப்ப‌டி த‌ன்னுடைய‌ ம‌னைவியை மீட்கிறார் என்ப‌துதான் கதை.

ப‌ட‌த்தில் பாட‌ல்க‌ள்,ஆக்ஷன் காட்சிகள் முதற்கொண்டு எந்த‌க் காட்சியுமே ம‌னதில் நிற்ப‌து போல் இல்லை. ஃப்ளாஸ்பேக் கூட‌ ந‌ம் ம‌ன‌தைத் தைப்ப‌த‌ற்கு முன்பே முடிந்து விடுகிற‌து.விக்ர‌மிற்கு ஐஸ்வ‌ர்யாராயின் மேல் காதல் வ‌ருவ‌தற்கு அழுத்த‌மான‌ காட்சிக‌ள் எதுவுமே இல்லாம‌ல் இருக்கிறது."சிவ‌ப்பாக‌ இருக்கிற‌வ‌னெல்லாம் கட‌வுளும் கிடையாது. க‌ருப்பாக‌ இருக்கிற‌வ‌னெல்லாம் க‌ய‌வ‌னும் கிடையாது" என்ப‌துதான் மணிரத்னம் சொல்ல வந்த விசயமாக இருந்தாலும் கூட,படத்தில் விக்ரம்,ஐஸ்,பிருத்விராஜ் போன்றவர்களின் பாத்திரப்படைப்பில் குழப்பமே மேலோங்கி இருக்கிறது.

ஐஸ்வ‌ர்யாவின் சுடிதாரைக் கூட‌ விர‌லால் தொடாம‌ல் விக்ர‌ம் த‌விர்ப்ப‌து,உங்க‌ளுக்கு க‌ல்யாணம் ஆகாம‌ இருந்திருந்தா எங்கூட‌ இருப்பீங்க‌ளா? என்று விக்ர‌ம் ஐஸிட‌ம் கேட்ப‌து என்று சில‌ இட‌ங்க‌ளில்தான் விக்ர‌ம் ஐஸ்வ‌ர்யா ராயின் மீதான த‌ன் காத‌லை வெளிப்படுத்துகிறார்.

"பொம்பளைங்க கெட்ட வார்த்தை பேசுனாக் கூட தாங்கிக்கிடலாம்;ஆனால் அழுதாத்தான் தாங்கிக்க முடியாது.என் புருஷன் ஒத்த கையில பைக் ஓட்டினா சர்க்கஸ்ல ஓட்டுற மாதிரி இருக்கும்" என்று படத்தின் மிக சில இடங்களில்தான் சுகாசினியின் வசனம் நன்றாக இருக்கிறது.படம் முடியும்போது வரும் 'நான் வருவேனே,மீண்டும் வருவேனே' என்று ரகுமான் பாடும் பாடல் நன்றாக இருக்கிறது.அபிஷேக் பச்சன் நடிப்பு போன்று செயற்கையாக இல்லாமல் விக்ரமின் நடிப்பு படத்தில் இயல்பாக இருக்கிறது. இந்தியாவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக இருக்கின்றன என்பது படத்தை பார்க்கும்போது தெரிகிறது.

ஆர‌ம்ப‌த்தில் வில்லனாக‌த் தெரியும் விக்ர‌ம் க‌டைசியில் ந‌ல்ல‌வ‌னாக‌த் தெரிகிறார்.ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்ல‌வ‌னாக‌த் தெரியும் பிருத்விராஜ் க‌டைசியில் கெட்ட‌வ‌னாக‌த் தெரிகிறார்.ஆர‌ம்பத்தில் போர‌டிக்கும் ப‌ட‌ம் க‌டைசியில்(ம‌ட்டும்) ந‌ன்றாக‌ இருக்கிறது.

ம‌ணிர‌த்ன‌ம் சார்,நீங்க‌ள் த‌மிழுக்காக‌ ம‌ட்டும் எடுக்கும் ப‌ட‌ங்க‌ளும் ந‌ன்றாக‌ இருக்கின்றன‌.இந்திக்காக‌ ம‌ட்டும் எடுத்த‌ தில்சே,குரு போன்ற ப‌ட‌ங்க‌ளும் ந‌ன்றாக‌வே இருந்தன‌.இர‌ண்டு மொழிக்கும் சேர்த்து எடுக்கும் ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே(இத‌ற்கு முன்பு யுவா-ஆயுத‌ எழுத்து) ச‌ரியாக‌ வ‌ருவ‌தில்லை.இனிமேலாவ‌து ஏதாவது ஒரு மொழியை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு படம் எடுங்களேன்.

இந்த‌ப் ப‌ட‌த்தின் த‌மிழ் ப‌திப்பில் விக்ர‌ம் ராவ‌ணனாக‌வும்,இந்தி ப‌திப்பில் ராம‌னாக‌வும் ந‌டித்துள்ளார்.ம்...நாம் ராம‌னாக‌ இருப்ப‌தும்,ராவ‌ணனாக‌ இருப்ப‌தும் ந‌ம்மை 'இய‌க்குப‌வர்' கையில்தான் இருக்கிற‌து போல்.

ராவ‌ணன்‍‍-க‌தாக‌லாட்சேப‌ம்

Wednesday, June 9, 2010

Top 10 Songs-May

1) காட்டுச் சிறுக்கி-ராவணன்-‍‍இசை:A.R ரகுமான்

2) தொடாதே கண்ணால் நீ என்னை-எதிர்மறை-‍‍இசை:முருகன் மோகன்

3) Stole My Heart-சிங்கம்-‍‍இசை:தேவி ஸ்ரீ பிர‌சாத்

4) என் நெஞ்சில்-பாணா காத்தாடி-‍‍இசை:யுவன் சங்கர் ராஜா

5) ஒரு முறை இரு முறை-களவாணி-‍‍இசை:S.S.குமரன்

6) இதுவரை இதுவரை-பட்டாபட்டி 50/50-‍‍இசை:அருள் தேவ்

7) ஆருயிரே-மதராஸ் பட்டினம்-‍‍இசை:G.V.பிரகாஷ்குமார்

8) எப்போது உன் ஜன்னல்-விருந்தாளி-‍‍இசை:S.S.குமரன்

9) நீ இல்லை நான் இல்லை-பயம் அறியான்‍‍-‍‍இசை:PC சிவன்

10) விழியே விழியே-அறியான்-‍‍இசை:விக்ரம் வர்மன்

Monday, May 31, 2010

சிங்க‌ம்‍- திரை விமர்சனம்


சென்னையில் தாதா தொழில் செய்யும் பிரகாஷ்ராஜும்,தூத்துக்குடி பக்கம் ஒரு குக்கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்யும் சூர்யாவும் எப்படி சந்திக்க நேருகிறது? அதன் பின் சூர்யா எப்படி சென்னை சென்று பிரகாஷ்ராஜின் சாம்ராஜ்யத்தை அழிக்கிறார் என்பதுதான் 'சிங்கம்' படத்தின் கதை.

பெரும்பாலான‌ போலீஷ் ப‌ட‌ங்க‌ளில் ஹீரோ எப்ப‌டி அறிமுக‌மாவாரோ அதேபோல் இந்த‌ப் ப‌ட‌த்திலும் சூர்யா அறிமுக‌மாகிறார்.சூர்யாவிற்கு அனுஷ்கா ச‌ரியான‌ பொருத்தமாக‌ இல்லாவிட்டாலும்,அனுஷ்கா வ‌ரும் காட்சிக‌ளிலெல்லாம் அவ‌ரை ம‌ட்டுமே பார்த்துக் கொண்டிருப்ப‌தால் அது ஒரு பொருட்டாக‌த் தெரிய‌வில்லை.காவ‌ல் துறையை மைய‌ப்ப‌டுத்தி வ‌ரும் ப‌ட‌ங்க‌ளில் வில்ல‌ன் ம‌ட்டும் ச‌ரியாக‌ அமைந்து விட்டாலே ப‌ட‌த்தின் பாதி வேலை முடிந்த‌ மாதிரிதான்.இந்த‌ப் ப‌ட‌த்திலும் பிர‌காஷ்ராஜ் மூல‌மாய் அது க‌ச்சித‌மாய் அமைந்திருக்கிற‌து.

இந்த‌ மாதிரி ப‌ட‌ங்க‌ளில் நாம் என்ன‌வெல்லாம் எதிர்பார்ப்போமோ அதில் எந்த‌ வித‌ மாற்ற‌முமில்லாம‌ல் அப்ப‌டியே கொடுத்திருக்கிறார் டைர‌க்ட‌ர் ஹ‌ரி.'வேலை இருக்கும்போது செத்த‌தை சாப்பிட்டா மூளை செத்துடும்' என்பது முதற்கொண்டு ப‌ட‌ம் முழுவ‌தும் ச‌ளைக்காம‌ல் வ‌ச‌ன‌ம் எழுதித் தள்ளியிருக்கிறார்க‌ள்.அதுவும் சூர்யா பேசிப் பேசியே AC நிழல்க‌ள் ர‌வியை ஸ்டேச‌னுக்கு உள்ளிருந்து ரோட்டிற்கு கொண்டு வ‌ருவ‌து கொஞ்ச‌ம் ஓவ‌ர்.அனுஷ்காவின் பிளாட்டின‌ ந‌கையை பார்த்து‌ ம‌னோர‌மா சொல்லும் நாலு ஏக்க‌ர் தென்னந்தோப்பை கழுத்தில போட்டிருக்கிறாய்..பத்திரம் என்ப‌‌து சுவார‌சிய‌ம்.ஒரு பையன்,பொண்ணு பின்னாடி சுத்தின‌ பிர‌ச்ச‌னையை சூர்யா காவ‌ல் நிலைய‌த்தில் வைத்து தீர்த்துக் கொண்டிருக்கும்போது,அனுஷ்கா சூர்யாவை சுற்றி வ‌ருவ‌து ந‌ன்றாக‌ இருக்கிற‌து.இந்த மாதிரி ப‌ட‌ங்க‌ளிலும் அவ்வப்போது ந‌டிப்ப‌துதான் தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு நல்ல‌து என்ப‌தை புரிந்து கொண்டு சூர்யா அனாய‌ச‌மாக‌ ந‌டித்திருக்கிறார்.

ப‌ட‌த்தோட‌ பின்னணி இசைக்கு இசைய‌மைப்ப‌ளர் தேவி ஸ்ரீ பிர‌சாத் அலுங்காம‌ல் அவ‌ரே 'ச‌ந்தோஷ் சுப்ர‌ம‌ணிய‌ம்' ப‌ட‌த்திற்கு போட்ட இசையையே இத‌ற்கும் ப‌ய‌ன்ப‌டுத்தியிருக்கிறார்.ச‌ண்டைக் காட்சிக‌ளிலேல்லாம் ஸ்ட‌ன்ட் ந‌டிக‌ர்க‌ளின் உழைப்பு பிர‌மிக்க‌ வைக்கிற‌து.

சிங்க‌ம் ப‌டம் ந‌ன்றாகயிருப்ப‌தாக‌ தெரிவ‌தற்குக் காரணம் படத்தின் இயக்குனர் ஹரியோ அல்லது சூர்யாவோ அல்ல,மிக 'ச‌மீப‌த்தில்' வ‌ந்த‌ ம‌ற்ற தமிழ் ப‌ட‌ங்க‌ள்தான்.

சிங்க‌ம்‍-சூர்யா