Tuesday, June 29, 2010

மழையின் வலி


மழைக் காலங்களில்
மரத்தின் இலையிலிருந்து
நீர் சொட்ட சொட்ட ஒழுகுவது போல்
உன் மீதான காதல்
என் இதழ்களிலிருந்து
சொற்களாய் பிரவாகம் கொண்டு
உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
பாலையினால் செய்த
மனத்தினுள்ளே
மழையோ,கண்ணீரோ
எதையும் கரைக்க முடிவதேயில்லை.
மழையில்லாத
கொடும் வெம்மை காலத்தில்
உனக்குப் புரிய நேரிடலாம்
பாலையில் பெய்யும்
மழையின் வலி!

Wednesday, June 23, 2010

வேதம்-திரை விமர்சனம்(தெலுங்கு)


1)மிலிட்டரி ஆஃபிஸராக்கிப் பார்க்க நினைக்கும் தன் அம்மாவின் ஆசைக்கு எதிராக மியூசிக் பேண்ட் வைத்து பெரிய ஆளாகி விடலாம் என்று நினைத்து போட்டியில் கலந்து கொள்வதற்காக பெங்களூரிலிருந்து ஹைதரபாத்திற்கு பயணிக்கிறார் மனோஜ்.

2)ஏழையான அல்லு அர்ஜுன்,தான் பெரிய பணக்காரன் என்று பொய் சொல்லி ஒரு பணக்கார பெண்ணைக் காதலிக்கிறார். அந்த பெண்ணிற்கு ஒரு பெரிய பார்ட்டி கொடுப்பதற்காக 40,000 ரூபாய் பணத்திற்காக யாரிடமிருந்தாவது நகையை திருடுவதற்காக ஹைதரபாத் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறார்.

3)வறுமையில் வாடும் சரண்யா கந்து வட்டிக் கொடுமையால்,பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த தன் பையனைப் பண முதலைகளிடம் கொத்து அடிமை போல் இழக்க நேரிடுகிறது. தன்னுடைய கிட்னியை விற்றுப் பையனை மீட்டு விடலாம் என்று கிராமத்திலிருந்து ஹைதரபாத்திற்கு பயணிக்கிறார்.

4)சார்ஜாவிற்கு மறுநாள் பயணப்பட இருக்கும் நிலையில்,போலிஸால்
முஸ்லிம் தீவிரவாதி என்று தப்பான முத்திரை குத்தப்பட்டு ஜெயிலில் இருக்கிறார் மனோஜ் பாஜ்பாய்.

5)உள்ளூர் விபச்சார தொழிலில் பெரும் பணத்தை அந்த விடுதி முதலாளியே அபகரித்து விடுவதால்,தனியாக சென்று தொழில் செய்ய ஹைதரபாத்திற்கு செல்கிறார் அனுஷ்கா.

இவ்வாறு ஐந்து கிளைக் கதைகளும் ஒவ்வொரு புள்ளியில் பயணப்பட்டு, கடைசியில் அரசாங்க ஆஸ்பத்திரியில் சந்திக்க நேரிடுகிறது.அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் 'வேதம்' படத்தின் கதை.

இந்த‌ மாதிரி ஒரு சிக்க‌லான‌ திரைக்க‌தையை வைத்துக் கொண்டு ப‌ட‌த்தை ந‌க‌ர்த்தியிருக்கும் இய‌க்குன‌ருக்கும்,மாஸ் ஹீரோ இமேஜை தூக்கி எறிந்து விட்டு இது போல் ஒரு க‌தையில் ந‌டித்திருக்கும் அல்லு அர்ஜீனும் பார‌ட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌வர்க‌ளாகிறார்க‌ள்.சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் 'தாஜ் ஹோட்ட‌லில்' ந‌டந்த‌ தீவிர‌வாத‌ தாக்குதலைப் பட‌த்தின் க‌ளனாக‌க் கொண்டு வ‌ந்திருப்ப‌தில் டைர‌க்ட‌ரின் புத்திசாலித்த‌னம் பளிச்சிடுகிறது.

ஒவ்வொரு கிளைக்க‌தையும் ஒவ்வொரு வித‌மான‌ பின்ன‌ணியைக் கொண்டிருப்ப‌து ந‌ன்றாக‌ இருக்கிறது. படத்தின் வசனங்கள் பல இடங்களில் நன்றாக இருக்கிறது.அனுஷ்கா பேசும் "ம‌த்த வேலையில் அனுப‌வ‌ம் அதிகமாக‌ இருந்தாத்தான் காசு அதிக‌மாக‌க் கிடைக்கும்.ந‌ம்ம‌ வேலையில அனுப‌வ‌ம் குறைய‌ குறைய‌த்தான் காசு அதிக‌மாக‌ கிடைக்கும்.அனுப‌வ‌மே இல்லைனா இன்னும் அதிக‌மாக‌ காசு கொடுப்பாங்க‌" என்ப‌தாக‌ட்டும்;மனோஜ் சொல்லும் "ஆங்கிலத்தில் 'வாட்டர்',தெலுங்கில் 'நீலு',இந்தியில் 'பானி' என்பது மாதிரி ஒருத்தருக்கு 'அல்லா',மற்றொருவருக்கு 'இயேசு',இன்னொருவருக்கு 'ராமன்'.எந்த கடவுளைக் கும்பிட்டாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான்" என்பதில் வசனம் பளிச்சிடுகிறது.‌தன்னிட‌ம் லஞ்ச‌ம் கேட்கும் போலிஸ் அதிகாரியிட‌ம் அனுஷ்கா சொல்லும் "என்னிடம் ப‌டிப்பு,உத்தியோக‌ம் இல்லாததினால் நான் விபச்சார‌த் தொழில் பண்றேன்,உங்க‌ளுக்குத்தான் ப‌டிப்பு,ந‌ல்ல‌ உத்தியோக‌ம் இருக்குதே,அப்புறமும் ஏன் லஞ்ச‌ம் வாங்குறீங்க‌" என்ப‌து சாட்டைய‌டி.

ப‌ட‌த்தில் ந‌டித்திருக்கும் அத்த‌னை பேரும் அவ‌ர்க‌ளுடைய‌ பாத்திர‌த்தை உணர்ந்து ந‌டித்திருக்கிறார்க‌ள். தீவிர‌வாத தாக்குத‌லுக்கு உள்ளாகி உயிர் ம‌டியும் தறுவாயில் அல்லு அர்ஜூன் ம‌னோஜிட‌ம் அவ‌ர் பெய‌ரைக் கேட்ப‌து ட‌ச்சிங். அதே போல் தான் மிலிட்ட‌ரி ஆஃபிஸராக்க‌ நினைத்த‌ த‌ன் பைய‌ன் ச‌ட‌ல‌த்தைப் பார்த்த‌ அவ‌ன் தாய் உருகுவ‌தாக‌ட்டும்;தன்னால் முஸ்லீம் தீவிர‌வாதியாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னோஜ் பாஜ்பாயால் உயிர் பிழைத்த‌ போலிஸ் அவ‌ருக்கு ந‌ன்றி சொல்லும் காட்சிக‌ளும் ந‌ன்றாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
ப‌ட‌த்தின் க‌டைசி அரை ம‌ணி நேர‌ம் த‌விர்த்து ம‌ற்ற‌ காட்சிக‌ள் மிக மெதுவாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருப்பதைத் தவிர்த்திருக்க‌லாம்.அதே போல் ச‌ர‌ண்யா,மனோஜ் பாஜ்பாய் ச‌ம்பத்த‌ப‌ட்ட‌ காட்சிக‌ளும் அதிகமான சென்டிமட்டுடன் நாட‌க‌த்த‌ன‌மாய் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன.
பத்து வெவ்வேறு கதைகளை ஒரே புள்ளியில் இணைக்கும் கேரளா கஃபே(மலையாளம்) போன்று இல்லாவிடினும்,க‌டைசி அரை ம‌ணி நேர‌ காட்சிக‌ளிலும்,இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்துவ‌திலும் இய‌க்குன‌ர் வெற்றி பெற்றிருக்கின்றார்.

வேத‌ம்-ஆந்திர‌ ர‌ங் தே ப‌ச‌ந்தி

Monday, June 21, 2010

ராவ‌ணன்- திரை விமர்சனம்


கமல் 'விருமாண்டியில்' முயற்சித்த உக்தியையே கொஞ்சம் மாற்றி,மலையூர் மம்பட்டியான் காலத்திய கதையை இராமயண முலாம் பூசி மணிரத்னம் கொடுத்திருக்கும் படம்தான் 'ராவணன்'.

தன்னுடைய‌ த‌ங்கையின் வாழ்க்கையை சீர‌ழித்த போலிஸ்கார‌ர்க‌ளைப் ப‌ழி வாங்குவ‌தற்காக, SP பிருத்விராஜின் ம‌னைவி ஐஸ்வ‌ர்யாராயைக் காட்டுக்குள் தூக்கிக் கொண்டு வ‌ந்து விடுகிறார் விக்ர‌ம். பிருத்விராஜ் காட்டுக்குள் சென்று எப்ப‌டி த‌ன்னுடைய‌ ம‌னைவியை மீட்கிறார் என்ப‌துதான் கதை.

ப‌ட‌த்தில் பாட‌ல்க‌ள்,ஆக்ஷன் காட்சிகள் முதற்கொண்டு எந்த‌க் காட்சியுமே ம‌னதில் நிற்ப‌து போல் இல்லை. ஃப்ளாஸ்பேக் கூட‌ ந‌ம் ம‌ன‌தைத் தைப்ப‌த‌ற்கு முன்பே முடிந்து விடுகிற‌து.விக்ர‌மிற்கு ஐஸ்வ‌ர்யாராயின் மேல் காதல் வ‌ருவ‌தற்கு அழுத்த‌மான‌ காட்சிக‌ள் எதுவுமே இல்லாம‌ல் இருக்கிறது."சிவ‌ப்பாக‌ இருக்கிற‌வ‌னெல்லாம் கட‌வுளும் கிடையாது. க‌ருப்பாக‌ இருக்கிற‌வ‌னெல்லாம் க‌ய‌வ‌னும் கிடையாது" என்ப‌துதான் மணிரத்னம் சொல்ல வந்த விசயமாக இருந்தாலும் கூட,படத்தில் விக்ரம்,ஐஸ்,பிருத்விராஜ் போன்றவர்களின் பாத்திரப்படைப்பில் குழப்பமே மேலோங்கி இருக்கிறது.

ஐஸ்வ‌ர்யாவின் சுடிதாரைக் கூட‌ விர‌லால் தொடாம‌ல் விக்ர‌ம் த‌விர்ப்ப‌து,உங்க‌ளுக்கு க‌ல்யாணம் ஆகாம‌ இருந்திருந்தா எங்கூட‌ இருப்பீங்க‌ளா? என்று விக்ர‌ம் ஐஸிட‌ம் கேட்ப‌து என்று சில‌ இட‌ங்க‌ளில்தான் விக்ர‌ம் ஐஸ்வ‌ர்யா ராயின் மீதான த‌ன் காத‌லை வெளிப்படுத்துகிறார்.

"பொம்பளைங்க கெட்ட வார்த்தை பேசுனாக் கூட தாங்கிக்கிடலாம்;ஆனால் அழுதாத்தான் தாங்கிக்க முடியாது.என் புருஷன் ஒத்த கையில பைக் ஓட்டினா சர்க்கஸ்ல ஓட்டுற மாதிரி இருக்கும்" என்று படத்தின் மிக சில இடங்களில்தான் சுகாசினியின் வசனம் நன்றாக இருக்கிறது.படம் முடியும்போது வரும் 'நான் வருவேனே,மீண்டும் வருவேனே' என்று ரகுமான் பாடும் பாடல் நன்றாக இருக்கிறது.அபிஷேக் பச்சன் நடிப்பு போன்று செயற்கையாக இல்லாமல் விக்ரமின் நடிப்பு படத்தில் இயல்பாக இருக்கிறது. இந்தியாவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக இருக்கின்றன என்பது படத்தை பார்க்கும்போது தெரிகிறது.

ஆர‌ம்ப‌த்தில் வில்லனாக‌த் தெரியும் விக்ர‌ம் க‌டைசியில் ந‌ல்ல‌வ‌னாக‌த் தெரிகிறார்.ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்ல‌வ‌னாக‌த் தெரியும் பிருத்விராஜ் க‌டைசியில் கெட்ட‌வ‌னாக‌த் தெரிகிறார்.ஆர‌ம்பத்தில் போர‌டிக்கும் ப‌ட‌ம் க‌டைசியில்(ம‌ட்டும்) ந‌ன்றாக‌ இருக்கிறது.

ம‌ணிர‌த்ன‌ம் சார்,நீங்க‌ள் த‌மிழுக்காக‌ ம‌ட்டும் எடுக்கும் ப‌ட‌ங்க‌ளும் ந‌ன்றாக‌ இருக்கின்றன‌.இந்திக்காக‌ ம‌ட்டும் எடுத்த‌ தில்சே,குரு போன்ற ப‌ட‌ங்க‌ளும் ந‌ன்றாக‌வே இருந்தன‌.இர‌ண்டு மொழிக்கும் சேர்த்து எடுக்கும் ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே(இத‌ற்கு முன்பு யுவா-ஆயுத‌ எழுத்து) ச‌ரியாக‌ வ‌ருவ‌தில்லை.இனிமேலாவ‌து ஏதாவது ஒரு மொழியை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு படம் எடுங்களேன்.

இந்த‌ப் ப‌ட‌த்தின் த‌மிழ் ப‌திப்பில் விக்ர‌ம் ராவ‌ணனாக‌வும்,இந்தி ப‌திப்பில் ராம‌னாக‌வும் ந‌டித்துள்ளார்.ம்...நாம் ராம‌னாக‌ இருப்ப‌தும்,ராவ‌ணனாக‌ இருப்ப‌தும் ந‌ம்மை 'இய‌க்குப‌வர்' கையில்தான் இருக்கிற‌து போல்.

ராவ‌ணன்‍‍-க‌தாக‌லாட்சேப‌ம்

Wednesday, June 9, 2010

Top 10 Songs-May

1) காட்டுச் சிறுக்கி-ராவணன்-‍‍இசை:A.R ரகுமான்

2) தொடாதே கண்ணால் நீ என்னை-எதிர்மறை-‍‍இசை:முருகன் மோகன்

3) Stole My Heart-சிங்கம்-‍‍இசை:தேவி ஸ்ரீ பிர‌சாத்

4) என் நெஞ்சில்-பாணா காத்தாடி-‍‍இசை:யுவன் சங்கர் ராஜா

5) ஒரு முறை இரு முறை-களவாணி-‍‍இசை:S.S.குமரன்

6) இதுவரை இதுவரை-பட்டாபட்டி 50/50-‍‍இசை:அருள் தேவ்

7) ஆருயிரே-மதராஸ் பட்டினம்-‍‍இசை:G.V.பிரகாஷ்குமார்

8) எப்போது உன் ஜன்னல்-விருந்தாளி-‍‍இசை:S.S.குமரன்

9) நீ இல்லை நான் இல்லை-பயம் அறியான்‍‍-‍‍இசை:PC சிவன்

10) விழியே விழியே-அறியான்-‍‍இசை:விக்ரம் வர்மன்