Wednesday, October 20, 2010

பிருந்தாவனம்-திரை விமர்சனம்(தெலுங்கு)

கார்த்திக்,கௌசல்யா நடிப்பில்,செல்வா இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வந்த 'பூவேலி' படத்தை, அதிகமான மசாலா தூவி இயக்குனர் வம்சி தெலுங்கில் கொடுத்திருக்கும் படம்தான் 'பிருந்தாவனம்'.

சமந்தாவைக் காதலித்துக் கொண்டிருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு,ஒரு சந்தர்ப்பத்தில் காஜலின் காதலனாக நடிக்க நேரிடுகிறது.ஆரம்பத்தில் ஜூனியர் என்.டி.ஆரை வெறுக்கும் காஜல் குடும்பத்தினர் படிப்படியாக ஜூனியர் என்.டி.ஆர் மேல் அன்பு பாராட்ட ஆரம்பிக்கின்றனர்.ஜூனியர் என்.டி.ஆருக்கு காஜல் மேல் காதல் வரும் நேரத்தில்,சமந்தாவும் காஜலின் குடும்பத்திற்குள் நுழைகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் பிருந்தாவனம் படத்தின் கதை.

கார்த்திக் வேடத்தில் ஜூனியர் என்.டி.ஆரை நினைத்துப் பார்ப்பதற்கே கொடுமையாக இருந்தாலும்,சில காட்சிகளில் அவருடைய துள்ளலான நடிப்பும்,டான்ஸும் நன்றாக இருக்கின்றன.படத்தில் கஜோலின் வீடாகக் காட்டப்படும் செட்டிங்ஸும் அந்த கிராமமும் அவ்வளவு அழகாக இருக்கின்றன.இடைவேளைக்குப் பிறகு பிரமானந்தமும்,வேணுவும் அடிக்கும் காமெடிகள் அதகளம்.படத்தில் வரும் 'சில' சென்டிமென்ட் காட்சிகள் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

அழகான பெண்ணின் இரு கன்னங்களில் எந்த கன்னத்தில் முத்தமிடுவது என்று நாம் தடுமாறுவது போல்,காஜலும்,சமந்தாவும் வரும் காட்சிகளில் யாரைப் பார்த்துக் கொண்டிருப்பது என்று தெரியவில்லை.இவர்கள் இருவரும் வரும் காட்சிகளிலெல்லாம் காமராமேனுக்கு லைட்டிங் வைத்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.சமந்தாவை விட காஜலுக்குத்தான் ஸ்கோப் அதிகம்.அவருடைய சோகமான முகமும் அவருடைய வேடத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது.சோட்டா கே.நாயுடுவின் ஒளிப்பதிவுஅட்டகாசம்.தமனின் இசையும் பரவாயில்லை ரகம்.

அழகான காதல் கதையை அதிகமான மசாலா தூவி இந்த அளவிற்கு சிதைத்திருக்க வேண்டாம்.பூவேலியில் ஹீரா,கார்த்திக்கை ஆரம்பத்தில் காதலிக்காமல் இருப்பதால்,கார்த்திக்கிற்கு கௌசல்யா மேல் காதல் வருவது இயல்பாக இருந்தது. சமந்தாவும் ஜூனியர் என்.டி.ஆரும் ஏற்கெனவே காதலித்துக் கொண்டிருக்கையில்,ஜூனியர் என்.டி.ஆருக்கு காரணமேயில்லாமல் காஜல் மேலும் காதல் வருவது கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணிடக்கூடாது என்று அவர் கங்கனம் கட்டிக் கொண்டிருந்தது போல்தான் தெரிகிறது.

பிருந்தாவனம்-'கொஞ்சம்' ரணம்.

Saturday, October 2, 2010

எந்திரன் ஸ்பெஷல்(5) - ‍எந்திரன் திரை விமர்சனம்

இரும்பிலே செய்யப்பட்ட 'ரோபோ'விற்கு மனிதனுக்கு இருப்பது போன்று உணர்ச்சிகளைப் புகுத்துகையில்,மற்ற எல்லா உணர்ச்சிகளையும் எளிதில் சமாளித்துவிடும் ரோபோ,மனிதர்களைப் போலவே காதலை சமாளிக்க முடியாமல் எவ்வாறு தடம் பிறழ்கிறது என்பதுதான் ரஜினி,ஐஸ்வர்யாராய் நடிப்பில்,ரகுமான் இசையமைப்பில்,ஷங்கர் இயக்கி வெளிவந்திருக்கும் 'எந்திரன்' படத்தின் கதை.

விஞ்ஞானத்தின் மூலமாக நல்ல விசயங்களைப் பண்ண முடியும் என்பதைப் படத்தின் முதல் பாதியிலும்,கெட்ட விசயங்களையும் செய்ய முடியும் என்பதைப் படத்தின் இரண்டாம் பாதியிலும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.ரஜினி படங்களில் பொதுவாக வரும் நம்ப முடியாத சண்டைக் காட்சிகளை,இதில் ரோபாவாய் இருக்கும் ரஜினி பண்ணுவ‌தாகக் காட்டியிருப்பதில் ஷங்கரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.பொதுவாக ஷங்கரின் படங்களில் அவரின் கதாநாயகர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் வருவது போல்,இதிலும் ரஜினி மூன்று வேடங்களில்(விஞ்ஞானி,நல்ல ரோபோ,கெட்ட ரோபோ) வந்து கலக்குகிறார்.ரஜினியின் உழைப்பைப் பார்க்கும்போது அவருக்கு 61 வயதாகிறது என்பதை நம்புவதற்கு மிகவும் கடினமாக உள்ளது.குறிப்பாக ரோபாவாக வரும் ரஜினியின் உடலசைவுகள் க‌லக்கல்.

படத்தின் இரண்டாம் பாதியில் கெட்ட ரோபோ செய்யும் அட்டகாசகங்கள் சில இடங்களில்'ஆளவந்தானை' ஞாபகப்படுத்தினாலும்,இந்திய சினிமாவிலும் பணம் செலவழித்து ஹாலிவுட் தரத்தைக் கொண்டு வர முடியும் என நிரூபித்திருக்கிறார்கள்.அதேபோல் ரோபோ அட்டூழியம் செய்வதாக வரும் காட்சிகளில்,டைரக்டரின் கிரியேட்டிவிட்டிக்கும்,டெக்னிக்கல் டீமிற்கும் ஒரு சபாஷ்.கெட்ட ரோபாவாக வரும் ரஜினி,மூன்று முகம் அலெக்ஸ்பாண்டியனைக் ஞாபகப்படுத்தினாலும்,முப்பது வயதில் தான் பண்ணியதை,தன்னுடைய அறுபது வயதிலும் பண்ண முடியும் என்பதை ரஜினி நிரூபித்திருக்கிறார்.விஞ்ஞானியாக வரும் ரஜினியைப் பார்க்கும்போது மட்டும் பாவமாக இருக்கிறது.

ஷங்கரின் இயக்கம் பல இடங்களில் பளிச்.ஆயுத பூஜையில் மற்ற ஆயுதங்களோடு ரோபோ ரஜினியையும் உட்கார வைப்பது,நல்ல ரோபோ மனித உணர்ச்சி வந்தவுடன்,தன்னால் இறந்து போன பெண்ணின் சமாதியில் சென்று மலர் வைப்பது,ரோபோ ரஜினி பிரசவம் செய்யும் காட்சி என்று படம் முழுவதும் தன் ஆளுமையைக் காட்டியிருக்கிறார்."கணிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப் பொறி நீ","கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்கள் மெஷினையும்,நான் தனிமையையும் கட்டிக்கிட்டு அழனுமா?"அட்ரஸ் கேட்கும் நபரிடம் ரஜினி தன் ஐ.பி அட்ரஸ் சொல்வது,கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு ரோபோ கொடுக்கும் பதில் என்று பல இடங்களில் படத்தின் வசனங்களில் மறைந்த 'சுஜாதா' பளிச்சிடுகிறார்.ரத்ன வேலுவின் கேமராவும்,சாபு சிரிலின்(ப‌ட‌த்தின் ஒரு காட்சியில் வ‌ருகிறார்) செட்டிங்ஸும் ந‌ன்றாக‌ இருக்கின்றன.

ரோபாவாக வரும் ரஜினி எப்படி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதை,ஐஸ்வர்யாராய் தன்னிடம்தான் சொல்கிறார் என்று தப்பாக நினைத்துவிட்டார் போல்.ரஜினியைத் தவிர படத்தில் வரும் வேறு நடிகர்கள் யாவரும் மனதில் நிற்கவில்லை.ரகுமானின் பின்னணி இசை பல இடங்களில் நன்றாகவும்,சில இடங்களில் ஓவர் டோஸாகவும் தெரிகிறது.கலாபவன் மணி வரும் காட்சிக்கு கத்திரி போட்டிருக்கலாம்.இரண்டாம் பாதியில் வரும் சில கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருந்திருக்கலாம்.

'அவதார்' திரைப்படம் டெக்னாலஜியில் உலக சினிமாவின் உச்சம் என்று சொன்னால்,எந்திரனை இந்திய சினிமாவின் உச்சம் என்று தாராளமாக சொல்லலாம்.

எந்திர‌ன்-மன‌தை ம‌ய‌க்கும் ம‌ந்திர‌ன்.

Friday, October 1, 2010

எந்திரன் ஸ்பெஷல்(4)-ர‌ஜினிகாந்த்

தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டாரய் கோலோச்சிக் கொண்டு இருக்கும் ரஜினி,தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராய் மாறி,இப்போது இந்தியிலும் பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய 'எந்திரன்' படம் மூலமாக நுழைகிறார்.

எனக்கு சின்ன வயதில் மிகவும் பிடித்த நடிகரென்றால் அது ரஜினிதான்(இப்போது கமல்).அப்போதெல்லாம் ரஜினி படங்கள் பார்த்தால் வீட்டிற்கு நடந்து கூட வரத் தோன்றாது.தியேட்டரிலிருந்து வீட்டிற்கு ஓடித்தான் வரத் தோன்றும்.ரஜினியின் ஆக் ஷன் படங்கள் பார்த்துவிட்டு எனக்குள் ரத்த ஓட்டம் அதிகமாகி,புதுவித உற்சாகமும் உத்வேகமும் கிடைக்கும்.சின்ன வயதில் பார்த்த படங்களில் நான் போட்ட சவால்,கழுகு,மாவீரன்,நல்லவனுக்கு நல்லவன்,படிக்காதவன் போன்ற படங்களெல்லாம் மிகவும் பிடித்திருந்தன.அதன்பின்னர் வந்த குரு சிஷ்யன்,தர்மதுரை,மன்னன்,தளபதி படங்கள் வரை ரஜினி படங்களைப் பார்ப்பது போன்ற மனதுக்கு நிறைவான ஒரு விசயம் அந்த காலகட்டத்தில் வேறு எதுவும் இல்லை.

நான் பார்த்த ரஜினியின் படங்கள் 'கம்பம்' சக்திபாலா,'தேனி' கிருஷ்ணா,'மதுரை' குரு,'சென்னை' ஆல்பர்ட் முதற்கொண்டு எங்கு பார்த்தாலும் ரசிகர்களின் உற்சாகம் ஒரே மாதிரிதான் இருந்திருக்கின்ற‌து.ரஜினியின் ரசிகர்களுக்கு அவருடைய படங்களைப் பார்பதை விட சந்தோஷத்தைத் தரக் கூடிய வேறு விசயங்கள் மிகவும் குறைவுதான்.நான் இப்போது வரை ரஜினியிடம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே விசயம் அவரால் எப்படி மக்களின் மனதை எளிதாகப் புரிந்து கொண்டு அவர்கள் விரும்பும்படி தன்னுடைய படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க முடிகின்றது என்பதுதான்.பாட்ஷாவிற்கு பிறகு படையப்பா தவிர்த்து வேறு எந்த ரஜினியின் படங்களும் எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்,அவர் கடந்த 17 வருடங்களில் கொடுத்த ஃபிளாப் படங்கள் மிகவும் குறைவு.தன்னுடைய ரசிகர்களுக்கும்,பெரும்பாலான மக்களுக்கும் எந்த மாதிரியான படங்கள் பிடிக்கும் என்று சரியாகத் தெரிந்துகொண்டு,அதுபோன்ற‌ படங்களில் நடிப்பது சாதரணமான விசயம் கிடையாது.பாபா படத்தைக் கூட ரஜினி தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,அந்தப் படம் வெளிவருவதற்கு சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றி பெற்ற 'தாலி காத்த காளியம்மன்' போன்ற படங்களோ என்று தோன்றுகிறது.(சாமி படங்களுக்கு மார்க்கெட் வந்து விட்டது என்று நினைத்து பாபா போன்ற படத்தில் நடித்தாரோ என்னவோ).

அதேபோல் பாபா படத்தின் தோல்விக்குப் பிறகு,படத்தில் தனக்குப் பெரிய மெயின் ரோல் இல்லையென்றாலும்,மக்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து எடுத்த சந்திரமுகி,மறுபடியும் மக்களின் ரசனையை சரியாகப் புரிந்து கொண்டவர் ரஜினி என்பதைக் காட்டியது.எந்த மாதிரி படங்களில் இனிமேல் நடிப்பது என்று ரஜினி திணறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்த சரியான இயக்குனர்தான் ஷங்கர்.இன்றைய‌ கால‌க‌ட்டத்தில் ஷ‌ங்க‌ர் போன்று ம‌க்க‌ளுக்குப் பிடித்தாற்போல் ப‌ட‌ங்க‌ள் இய‌க்கும் இய‌க்குன‌ர்க‌ள் மிக‌வும் குறைவு.ர‌ஜினிக்கு,ஷ‌ங்க‌ர் போன்ற‌ ஒரு இய‌க்குன‌ர் தேவைப்ப‌ட்டார்.ஷ‌ங்க‌ருக்கும்,ர‌ஜினியைப் போன்ற‌ ஒரு பெரிய‌ ந‌டிக‌ர் தேவைப்ப‌ட்டார்.இந்த‌ இரு பெரும் ச‌க்திக‌ளும் சேர்ந்த‌தால்தான் கலாநிதிமாற‌னால் '150' கோடிக்கும் அதிக‌மான‌ ப‌ட்ஜெட்டில் ஒரு ப‌ட‌த்தைத் த‌யாரிக்க‌ முடிந்திருக்கின்ற‌து.

ர‌ஜினியிடம் அவ‌ரின் எளிமை,அட‌க்க‌ம்,ப‌ந்தா ப‌ண்ணாம‌ல் இருப்ப‌து,பிடித்திருந்தால் ம‌ற்ற‌வ‌ர்களை உட‌ன‌டியாக‌ப் பாராட்டுவ‌து,க‌ஷ்ட‌த்தில் இருக்கும் தயாரிப்பாளர்க‌ளுக்கு ப‌ட‌ம் ப‌ண்ணிக் கொடுப்ப‌து என்று ப‌ல‌ விச‌ய‌ங்க‌ள் பிடித்திருந்தாலும் அவ‌ரிட‌ம் பிடிக்காத‌ ஒரே விச‌ய‌ம் த‌ன்னுடைய‌ ப‌ட‌ம் ந‌ன்றாக‌ ஓட‌ வேண்டுமென்ப‌த‌ற்காக, த‌ன் ப‌ட‌ம் வெளிவ‌ரும் நேர‌ங்க‌ளில் எல்லாம் தேவையில்லாம‌ல் பேசி மாட்டிக்கொள்வ‌து.முன்பு த‌ன்னுடைய‌ ப‌டங்க‌ளில் அர‌சிய‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ங்க‌ளைப் பேசி தன்னுடைய படங்களின் மேல் எதிர்பார்ப்பை உண்டு ப‌ண்ணிக் கொண்டிருந்தார்.அப்புற‌ம் அவ‌ர் அர‌சிய‌லுக்கு வ‌ர‌வே மாட்டார் என்று தெரிந்து விட்ட‌ இன்றைய‌ நிலையிலும் கூட, ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பிற்காக‌ எந்திர‌ன் ஆடியோ கேசட் ரிலீஸ் ஃப‌ங்ச‌னில் ஷ‌ங்க‌ர்,க‌லாநிதிமாற‌ன்,ர‌குமான் போன்ற‌வ‌ர்களின் கூட்ட‌ணியில் வெளிவ‌ரும் எந்திர‌ன் ப‌ட‌த்தை மன‌தில் வைத்துக் கொண்டு "இந்த‌ மாதிரி ஒரு கூட்ட‌ணி கிடைத்தால் 234 தொகுதிக‌ளிலும் நிற்க‌லாம்' என்று பேசுவ‌தெல்லாம் ர‌ஜினியின் சுய‌ந‌ல‌த்தைத்தான் காட்டுகிற‌து.

த‌மிழ் சினிமாவில் ம‌ட்டும‌ல்ல‌ தென் இந்திய சினிமாவிலேயே த‌விர்க்க‌ முடியாத‌ ச‌க்தியாக‌ விளங்கும் ர‌ஜினி,த‌மிழ் ப‌ட‌ங்க‌ளுக்கான‌ மார்க்கெட்டை உல‌க‌ அளவில் ப‌ர‌ப்பிய‌தில் முக்கிய‌மான‌வ‌ர்.இன்று ர‌ஜினியின் ப‌ட‌ங்க‌ள் இந்தியாவில் உள்ள‌ அத்த‌னை முக்கிய‌மான‌ ந‌க‌ர‌ங்க‌ளிலும் த‌மிழிலேயே ரிலிஸாகிக் கொண்டிருக்கின்ற‌ன‌.இந்தியாவில் உள்ள வேறு எந்த‌ ந‌டிக‌ர்க‌ளையும் விட‌ ர‌ஜினியின் ப‌ட‌ங்க‌ளுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பு மிக‌வும் அதிக‌ம்.இனிமேல் எந்திர‌ன் போன்ற ஒரு ப‌ட‌த்தில் தற்போது 61 வ‌ய‌தாகும் ர‌ஜினி நடிப்ப‌து இயலாத‌ காரிய‌ம் என்றே தோன்றுகிற‌து.அதேபோல் ர‌ஜினியும் த‌ன‌க்குக் கிடைத்த‌ இந்த‌ வாய்ப்பை முழுமையாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன்.ரோபோ போல் வ‌ரும் ர‌ஜினியையும்,வில்ல‌னாக‌ வ‌ரும் ர‌ஜினியையும் பார்க்கையில்,ர‌ஜினி த‌ன்னுடைய‌ ர‌சிக‌ர்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்லாது அனைத்து த‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் ஒரு பெரிய‌ விருந்தை எந்திர‌னில் குடுப்பார் என்ற‌ ந‌ம்பிக்கையில், எந்திர‌ன் திரைப்ப‌ட‌ம் மாபெரும் வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள்.