Monday, December 10, 2012

கமல் விஸ்வரூபம் படத்தை DTH-ல் வெளியிடுவது சரியா?


கமல் தன்னுடைய விஸ்வரூபம் படத்தை நேரடியாகப் படம் வெளியாகும் தினத்திற்கு முதல் நாள் இரவே 'DTH' ல் ஒளிபரப்புவதைப் பற்றிதான் பெரும்பாலான இடங்களில் இப்போது பேச்சு. தியேட்டர்காரர்களெல்லாம் இதை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்புவதால், திருட்டு விசிடியும் உடனடியாக வெளிவந்துவிடும் என்றொரு குற்றச்சாட்டு.இப்படத்தை நேரடியாக DTH'ல்  காட்டுவதன் மூலம்,படத்தின் தயாரிப்பாளரான‌ கமலுக்கு என்னென்ன நன்மை என்பதைப் பார்ப்போம்

1. தியேட்டர் டிக்கெட் அதிகம் என்று நினைப்பவர்கள்,  ஒரு வாரம் கழித்து திருட்டு விசிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள், இப்போது காசு கொடுத்து DTH-ல் பார்க்கலாம். இந்தக் காசு படத்தின் தயாரிப்பாளருக்கு நேரடியாகக் கிடைக்கக்கூடிய வாய்ப்பு
2. தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதில்லை. புதிதாக ரிலீசானப் படங்களைப் பார்க்க, 50 கி.மீட்டர்கள் இதற்காகவே பயணம் செய்ய வேண்டியவர்கள், பெரும்பாலான நேரங்களில் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில்லை. ஒரு வாரத்திற்குள்ளாகவே திருட்டு விசிடி கிடைத்து விடுவதால், அவர்கள் தியேட்டருக்கு சென்று பார்ப்பதுற்குப் பதில், எப்படியாயினும் திருட்டு விசிடியில்தான் பார்ப்பார்கள். அவர்களில் சில பேர் DTH-ல் பார்ப்பதன் மூலம்,அந்தக் காசு தயாரிப்பாளருக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு.எத்தனையோ சிறு முதலீட்டுப் படங்கள், தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் ரிலீஸ் செய்யப்படுவதில்லை. சிறு முதலீட்டுப் படங்களுக்கெல்லாம்  இனிவரும் காலங்களில் இது ஒரு பெரிய வரப்பிரசாதம்.
3. கமலின் தீவிர ரசிகர்களில் சிலர்,  DTH-ல் பார்த்து, அதன் பின் தியேட்டர்களுக்கும் சென்று பார்க்கலாம்
4. தமிழ் படங்கள், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுள்ள எல்லா ஊர்களிலும் ரிலீஸ் செய்யப்படுவதில்லை. காஷ்மீரிலோ, ஒடிஷாவிலோ இல்லை வட கிழக்கு மாநிலங்களில் இருக்கும் தமிழர்களெல்லாம், தியேட்டருக்கு சென்று தமிழ் படங்கள் பார்க்கும் ஆசை இருந்தாலும் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும். அவர்களுக்கெல்லாம் இப்போதைய ஒரே வழி,திருட்டு விசிடிதான். இப்போது, DTH-ல் கிடைக்கும் வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தக் கூடும்.
5. தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் நிலையில்லாதவர்கள், பயணம் செய்ய இயலாதவர்கள், வயதானோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தக்கூடும்.

இதேபோல் இன்னும் பலரும், DTH-ல் படம் பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இவர்கள் மூலமாக வேறு யாருக்கோ செல்லும் பணம், இப்போது தயாரிப்பாளருக்கே நேரிடையாகக் கிடைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

படத்தை DTH-ல் நேரடியாக ரிலிஸ் செய்வதால், தியேட்டர்காரர்கள் அவர்களுக்கு ஏற்படும் இழப்பு என்று அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு:

1. படம் வெளிவருவ‌தன் முன்பே, DTH-ல் ஒளிபரப்புவதால், படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்துவிடும்.படம் நன்றாக இல்லாத பட்சத்தில், தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்துவிடும்.

தமிழ்படங்கள் உலக அளவில் ரிலிஸ் செய்ய ஆரம்பித்த பிறகு, இப்போதும், தமிழ்நாட்டில் முதல்காட்சி ஒளிபரப்புவதற்கு முன்னரே, வெளிநாடுகளில் படம்பார்க்கும் ரசிகர்கள் மூலம், படத்தின் ரிசல்ட் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. DTH-ல் ஒளிபரப்புவதன் மூலம் புதிதாக ஒன்றும் படத்தின் ரிசல்ட் தெரியப்போவதில்லை.  இதைவிட, சில படங்கள், பொதுவாக மற்ற தியேட்டர்களில் திரையிடுவதன் முன்னரே,  Premier show என்ற பெயரில் முதல் நாள் இரவோ அல்லது அதிகாலைக் காட்சி அதிக விலை வைத்தோ திரையிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் மற்ற திரையரங்க அதிபர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்த‌தது ஏனோ?

2. DTH-ல் படம்பார்த்துவிடுவதால், தியேட்டருக்கு வந்து பார்க்கும் மக்கள் குறைந்து விடுவார்கள்.

DTH-ல் படம் பார்க்கப் போகும் மக்கள் மிக மிக குறைவான சதவீதம் பேர். மேலும்,பெரும்பாலான ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதைத்தான் விரும்புவார்கள். இப்போதெல்லாம் மக்கள் 3D படத்தை, அதற்கான வசதி இல்லாத சாதரண தியேட்டர்களில் பார்க்க விரும்புவதில்லை;3D வசதி இருக்கும் தியேட்டருக்கு சென்றே பார்க்க விருப்பப்படுகிறார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களை, தியேட்டருக்கு சென்று பார்க்கத்தான் விரும்புவார்கள். தியேட்டரில் ஏற்கெனவே ஒளிபரப்பான படத்தைத்தான் இப்போது டி.வி யில் போடுகிறார்கள். படம் நன்றாக இருக்கும் பட்சத்தில், மக்களெல்லாம் மறுபடியும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தியேட்டர்களுக்கு மக்கள் குறைவாக வந்தால், அது படத்தின் தயாரிப்பாளரையும்தான் பாதிக்கும். அதனால், கமலும் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதைத்தான் விரும்புவார்.

3. DTH-ல் ஒளிபரப்புவதன் மூலம், திருட்டு விசிடி வெளிவந்துவிடும்.

திடீரென்று தியேட்டர் அதிபர்களெல்லாம், திருட்டு விசிடியைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக‌ இருக்கிறது, பெரும்பாலான படங்களின் திருட்டு விசிடி, தியேட்டர் அதிபர்களின் ஆதரவு இல்லாமல் வெளிவரும் வாய்ப்பு குறைவு. இப்போது விஸ்வரூபம் படத்திற்கெதிராக இவர்கள் காட்டும் ஒற்றுமையை, திருட்டு விசிடியை எதிர்த்தும் முன்பே இவர்கள் காட்டியிருக்கலாம். இவர்கள் மட்டும், திருட்டு விசிடியை ஒழிக்கும் வரை, தமிழ்நாட்டின் அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என்று ஒரு வாரம் தியேட்டர்களை மூடியிருந்தால், திருட்டு விசிடி பிரச்சனை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். திருட்டு விசிடி வெளிவருவதை விட, அது தெருவுக்கு தெரு எல்லா இடங்களிலும் கிடைப்பதுதான் பிரச்சனை. குறைந்தபட்சம், அப்படி அனைத்து இடங்களிலும் கிடைக்காமலாவது இருந்திருக்கும். அப்போதெல்லாம், இது தயாரிப்பாளர்களின் பிரச்சனை என்று இருந்துவிட்டு, இப்போது, அதைப்பற்றி கூக்குரலிடுவது அநியாயம்.

4. மக்கள் எல்லோரும் நாளை, தியேட்டரை விட DTH-ல் படம் பார்க்க முன்னுரிமை குடுப்பார்கள்.

அப்படி நடந்தால், அதற்கு காரணமும் தியேட்டர்களாகத்தான் இருக்கும். பெரும்பாலான தியேட்ர்களில், அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் விலையை விட அதிக விலையில் டிக்கெட் விற்பது. எவ்வளவோ புது புது டெக்னாலஜி வந்த போதும், தியேட்டரை 10 வருடங்களுக்கும் மேலாக மராமத்து பண்ணாமல் இருப்பது, கேன்டினில் அதிக விலை வைத்து பொருட்களை விற்பது, பார்க்கிங்கில் கொள்ளை போன்றவைகளால்தான் மக்கள் நாளை தியேட்டர்களுக்கே வராமல் போகலாம். இப்போதும் சத்யம் போன்ற தியேட்டர்களில் ஒளிபரப்பாகும் மட்டமான படத்திற்கும் கூட்டம் இருப்பது, தியேட்டர் நன்றாக இருப்பதால்தான். பொதுவாக திருட்டு விசிடிகளில் தரம் அவ்வளவு நன்றாக இருக்காது. அதற்குக் காரணம் டெக்னாலஜி மட்டுமல்ல. பெரும்பாலான தியேட்டர்களிலேயே திரையில் படம் அப்படித்தான் இருக்கும். அதிலிருந்து எடுக்கும் திருட்டு விசிடியில் மட்டும் தரம் வேறு எப்படி இருக்கும்?

எப்படி பார்த்தாலும், தியேட்டர் அதிபர்கள் சொல்வதெல்லாம் அநியாயமாகத்தான் இருக்கிறது. படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு, தன்னுடைய படத்தை எந்த வழிகளிலெல்லாம் வெளியிட்டு பணம் சம்பாதிக்க முடியுமென்று பார்த்து, அவ்வழிகளில் பணம் ஈட்டுவதற்கான உரிமை உள்ளது, புத்தகங்களெல்லாம் இன்றைய காலகட்டத்தில் இ-புத்தகங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்காக, புத்தகக் கடை வைத்திருப்பவர்களெல்லாம், இ-புத்தகமாக வெளிவந்தால் எப்படி எங்களிடம் இருக்கும் புத்தகங்கள் விற்கும் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் புத்தகம் கொடுக்கும் அனுபவத்தை இ-புத்தகம் கொடுக்க முடியாது. இ-புத்தகம் என்பது புத்தகம் கிடைக்க வழியில்லாதவர்களுக்குதான். தியேட்டர் அதிபர்கள் எழுப்பும் பிரச்சனையால் கிடைத்திருக்கும் ஒரே இலாபம் விஸ்வரூபம் படதிற்கு, கமல் பெரிதாக செலவு பண்ணாமலேயே கிடைத்திருக்கும் விளம்பரம்தான், அதேபோல், விஸ்வரூபம் படம் நன்றாக வந்திருப்பதனாலேயே, கமல் DTH-ல் படத்தை முதலிலேயே வெளிவிடலாம் என்று முடிவு பண்ணியிருப்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், இதேபோல் நன்றாக இருக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் திரையிலேயே பார்க்கத் தகுந்தவை. அதனால், DTH-ல் படம் பார்ப்பவர்களும், மறுபடியும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள் என்றே தோன்றுகிறது. DTH-ல் படம் வெளிவரும் முன்னரே ஒளிபரப்புவது போன்று, பணம் கட்டி 'Youtube'  போன்ற தளங்களிலும் கமல் இப்படத்தைத் திரையிட செய்ய‌லாம் என்று தோன்றுகிறது.

Friday, August 31, 2012

முகமூடி - திரை விமர்சனம்

அமெரிக்கக் கதாபாத்திரமான 'பேட்மேனை'யும் சீனக் கலையான 'குங்ஃபூ' வையும் கிண்டி மிஷ்கின் கொடுத்திருக்கும் நூடுல்ஸ்தான் ஜீவா,நரேன் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'முகமூடி' படத்தின் கதை.

குங்ஃபூ கற்றுக்கொண்டு வேலை வெட்டி எதுவுமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஜீவாவிற்கு, சென்னை நகரத்தில் நடக்கும் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் போலிஸ் ஆஃபிஸரான நாசர் பெண் பூஜாவைப் பார்த்தவுடன் காதல். காதலுக்காக தன் முகத்தை மறைக்க ஆரம்பிக்கும் ஜீவா,அதன் பின் முகத்தை மறைத்துக் கொண்டே எப்படி கொள்ளைக் கூட்டத்தை பிடிக்கிறார் என்று பேட்மேனை அழகாகத் தமிழ்படுத்தியிருக்கிறார் மிஷ்கின்.

தன்னுடைய‌ மாஸ்டரை அவமானப்படுத்தியவனை அடிக்க‌ முகத்தை மறைக்கும் ஜீவா, அதன் பின் காதலியை சந்திப்பதற்காக முகத்தை மறைக்கத் தொடங்குவதும், அதன் பின் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிப்பதற்காக முகத்தை முழுவதும் மறைத்துக்கொண்டு படிப்படியாக பேட்மேனாவதை, தன் இயல்பான திரைக் கதையால் அழகாகக் காட்சிப்படுத்தியிருகிறார் இயக்குனர்.அமெரிக்காவில் இருப்பதுபோல் உயரமான கட்டிடங்கள் இல்லாவிட்டாலும்,சென்னையின் இரவில் நட‌க்கும் சேஸிங் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. முகமூடி வேடத்திற்கு ஜீவா கச்சிதமாகப் பொருந்துகிறார்.படத்தில் இரண்டே பாடல்கள்தான். பார் பாடலில் வரும் பலதரப்பட்ட மனிதர்களும்(மஞ்சள் தேவதை மிஸ்ஸிங்), வாயை மூடி சும்மா இருடா பாடலில் வரும் லொக்கேஷன்களும் ; உலகமே சோத்துக்காகத்தான் வாழுது, சில பேர்தான் அதையும் தாண்டி வாழ்றாங்க போன்ற வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன. 'கே' யின் பாடல்களும்,பின்னணி இசையும் படத்திற்குப் பெரிய பலம்

பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் அப்படியே 'சித்திரம் பேசுதடி' பாவனா போல்தான் இருக்கிறது. ஜீவாவிற்கு பூஜாவின் மேல் வரும் காதலிலும் பெரிதாக உயிர்ப்பில்லை.பேட்மேன்,ஸ்பைடர் மேன்,சூப்பர் மேன் ,அயர்ன் மேன் என்று நரேன்'அசால்ட்டாக' நடந்து வருவ‌தும், அவருடைய பாடி லாங்வேஜும் கொஞ்சம் செயற்கையாக இருக்கின்றன. அதேபோல் நரேன் கொள்ளையடிப்பதிலாகட்டும்,போஃலிஸ் அவரைப் பின் தொடர்வதிலாகட்டும் கொஞ்சம் கூட புத்திசாலித்தனமான காட்சிகள் இல்லை.

குங்ஃபூ தெரிந்த நரேன் அதை தப்பான வழியில் உபயோகிப்பதும், அதையே ஜீவா நல்ல விசயத்திற்காகப் பயன்படுத்துவதும் தான் படத்தின் அடிநாதக் கருத்தாக இருக்கிறது.

முகமூடி - பேட்மேன் பார்த்தவர்களுக்கு முகமூடி பிடிக்கலாம்; பார்க்காதவர்களுக்குப் பிடிக்கும்

Wednesday, July 11, 2012

ஈகா(நான் ஈ) - திரை விமர்சனம்


நானியைக் காதலிக்கும் சமந்தாவை சுதீப்பும் விரும்புகிறார். சமந்தாவிற்காக தன்னைக் கொல்லும் சுதீப்பை,'பேயாக' மாறி பழிவாங்காமல் 'ஈயாக' மாறி நானி பழிவாங்குவதுதான் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'ஈகா' படத்தின் கதை.

கன்னடத்திலேயே பேசி அறிமுகமாகும் கன்னட ஹீரோ 'சுதீப்' ,வில்லன் ரோலில் அநாசயமாக நடித்திருக்கிறார். படம் ஆரம்பித்து இருபது நிமிடங்களிலேயே இறந்து விடுவதால்,நானிக்குப் பெரிதாக வேலை இல்லை.ட்ரெயிலர்லேயே படத்தின் கதை தெரிந்துவிட்டாலும், படத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.கிராபிக்ஸ் உறுத்தாமல் இருப்பதினாலேயே, ஈயின் சேட்டைகளை ரசிக்க முடிகிறது.

சமந்தா,நானிக்கு இடையேயான காதல் காட்சிகள் 'Short and Sweet'. இரவு நேரத்தில் தனக்குத் தனியாக வீட்டிற்குப் போக பயமாக இருக்கிறது என்று சொல்லி நானி சமந்தாவுடன் போவது காதல் விளையாட்டு. நானி சாவதற்கு முன் சமந்தாவிடம் இருந்து 'I love you' மெசேஜ் வருவது டைரக்டர் டச். அதனாலேயே, நானி 'ஈயாக' வந்து சுதீப்பை டார்ச்சர் செய்வதை ரசிக்க முடிகிறது.சமந்தாவை மைக்ரோ ஆர்டிஸ்டாகக் காட்டியிருப்பது கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது.

'ஈ'யை எக்சர்சைஸ் பண்ண வைப்பது, டான்ஸ் ஆட விடுவது போன்ற 'ஷங்கர்' டைப் விசயங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன.படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திலேயே 'ஈ' வந்து விடுவதால்,பின்பாதியில் சுதீப்பை இம்சிக்கும் 'ஈ' யின் சாகஸங்கள் நம்மையும் 'கொஞ்சம்' இம்சிக்கின்றன.மரகதமணியின் பின்னணி இசை படத்திற்குப் பெரிய பலம்.அதுவும் 'ஈ' யின் அட்டகாசங்களுக்கு 'லாவா லாவா' என்று பின்னணியில் குரல் ஒலிப்பது அட்டகாசம். 'ஈ'க்கு ராஜமவுலியின் பின்னணி குரல் அழகாகப் பொருந்துகிறது.பொதுவாக படங்களில் ஹீரோ காலில் அடிபட்டு நடக்க முடியாமல் சண்டை போடுவது போல், இப்படத்திலும் கிளைமாக்ஸில் ஒரு இறக்கை பறி போன பின்னரும், 'ஈ' ஹீரோவப் பறந்து சென்று பழிவாங்குவது சுவாரசியம். முழுப் படத்தையுமே அப்பா பையனுக்கு சொல்லும் கதை என்று ஆரம்பித்த‌தில், படத்தில் உள்ள அத்தனை 'லாஜிக்' மீறல்களையும் இயக்குனர் அழகாகக் கடந்து விடுகிறார்.
பெரிய ஹீரோக்கள் துணையில்லாம‌ல்,தன்னையும் கிராஃபிக்ஸையும் நம்பி சுவாரசியமான படத்தைக் கொடுத்திருக்கும் ராஜமவுலிதான் படத்தின் நிஜமான ஹீரோ.

தமிழில் உள்ள பெரிய ஹீரோக்கள்,இயக்குனர்கள் படங்களெல்லாம் தமிழில் வெளியாகும் அதே தினத்திலேயே,தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேபோல் தெலுங்கு இயக்குனர்களும்,ஹீரோக்களும் எவ்வளவோ முயற்சித்தும், தமிழ் சினிமா கோட்டை இதுவரை அவர்களுக்காக திறக்காமல்தான் இருந்துவந்தது. விஜயசாந்தி,ராஜசேகருக்கு அப்புறம் எந்த தெலுங்கு பட ஹீரோக்களுக்கும் தமிழில் மார்க்கெட் இருந்ததே இல்லை.இயக்குனர் கே.விஸ்வநாத்தின் படங்கள் டப் செய்யப்பட்டு(சலங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து) வெற்றிகரமாக ஓடியிருந்தாலும், அதன் பின்னணியில் கமல் போன்ற பெரிய தமிழ் ஹீரோதான் இருந்தார்.அம்மன்,அருந்ததி,மாவீரன்(மகதீரா)போன்ற சில படங்களும் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற பிறகே, தமிழுக்கு டப் செய்யப்பட்டன.சில தெலுங்கு ஹீரோக்களின் படங்கள் தமிழில் வெற்றி பெற்றிருந்தாலும்,அவர்களால் அந்த வெற்றியைத் தக்க வைத்து கொண்டிருக்க முடிந்ததில்லை.சமீபத்தில் கூட ராம்சரண் தேஜா நடித்த மாவீரன் வெற்றி பெற்றாலும் அதன் பின் வந்த 'ரச்சா' பெரிய ஃப்ளாப்.

தெலுங்கு ஹீரோக்களுக்கும்(சிரஞ்சீவி,நாகர்ஜுனா,மகேஷ் பாபு,அல்லு அர்ஜீன்,ராம்சரன் தேஜா),இயக்குனர்களுக்கும்(ராம்கோபால் வர்மா,பூரி ஜெகன்னாத்,ராஜமவுலி, ஸ்ரீனு வைத்லா)தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி மேல் தொடர்ந்து கண் இருந்தாலும், இங்குள்ள ஷங்கர்,மணிரத்னம்,ரஜினி,கமல்,சூர்யா,விக்ரமிற்கு இருக்கும் தெலுங்கு மார்க்கெட் போல் அவர்களின் படங்களுக்கு ஒருபோதும் இங்கு மார்க்கெட் இருந்ததில்லை. தெலுங்கில் படம் வெளியாகும் அதே தினத்தில், அவர்களின் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவராமல் இருந்த சாதனையை, எந்த ஒரு பெரிய ஹீரோவின் உதவியுமில்லாமல் தனியொரு மனிதராகத் தகர்த்திருக்கிறார் 'ராஜமவுலி. மாவிரன்,நான் ஈ என்று தமிழிலும் தொடர்ந்து வெற்றியைக் குவிக்கும் ராஜமவுலி மேலும் வெற்றி பெற வாழ்த்துகள.