Wednesday, June 29, 2011

180-திரை விமர்சனம்



திருமண வாழ்க்கையை சந்தோஷமாகத் துவக்கும் நாயகனுக்கு,'180' நாட்கள்தான் அவனால் உயிர் வாழமுடியும் எனத் தெரிய வருகிறது.இந்நிலையில் அவனின் வாழ்வில் புதிதாக ஒரு பெண் வேறு நுழைகிறாள்.அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் '180' படத்தின் கதை.

மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் இளைஞன் வேடத்திற்கு சித்தார்த் கச்சிதமாகப் பொருந்துகிறார்.படத்தின் ஆரம்பத்தில் 'தீர்க்காயுசா' இருப்பா என்று வாழ்த்தும் சாமியாரைப் பார்க்கும் பார்வையிலும்,சிறுவன் மூலமாகத் தன் வாழ்க்கையை உணரும் தருணத்திலும்,தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி பின்பாதியில் வருந்தும் இடங்களிலும் சித்தார்த்தின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி.இரு பெரு கண்களை(யும்) உடைய நித்யா மேனனை விட,பிரியா ஆனந்திற்குத்தான் 'ஸ்கோப்' அதிகம்.அவரும் அதை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.

சித்தார்த்திற்கு அவர் மனைவி அருகில் இருக்கும்போது மட்டும்,கயிற்றுடன் ஒருவர் அவர் கண்களுக்கு மட்டும் தெரிவது நன்றாக இருக்கிறது.அதேபோல்,மனிதனின் உண்மையான சந்தோஷம் குழந்தைகளோடு இருக்கையில்தான் கிடைக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தியிருப்பதிலும் இயக்குனர் 'ஜெயேந்திரா' வெற்றி பெற்றிருக்கிறார்.இரண்டாம் பாதியில் படம் மெதுவாகச் செல்வதைத் தவிர்த்து இருக்கலாம்.இடைவேளைக்குப் பின் கதை எதை நோக்கி நகருகிறது என்பதையும் ஊகிக்க முடிகிறது.

படத்தின் மெயின் ஹீரோ 'பாலசுப்ரமணியத்தின்' காமெராதான்.அவர் காமெரா கண்கள் வழியாகத் தெரியும் காட்சிகள் அனைத்தும் அத்தனை துல்லியம்(சித்தார்த்தின் தலையில் இருக்கும் ஒரே ஒரு வெள்ளை முடி கூட துல்லியமாகத் தெரிகிறது).ஷரத்தின் இசையில் 'நியாயம் தானா' மற்றும் 'சிறு சிறு கனவுகள்' மனதை வருடுகின்றன‌.

180-முதல் பாதி இளமைத் துள்ளல்;இரண்டாம் பாதி உணர்ச்சிக் குவியல்

Thursday, June 16, 2011

ஆரண்யகாண்டம்-திரை விமர்சனம்



ஒரு கேங்க் லீடரின்(ஜாக்கி ஷெராஃப்) கீழே வேலை பார்க்கும் அடியாள் சம்பத்திற்கு ஜாக்கி ஷெராஃப் போல் லீடராக ஆசை. அதே நேரத்தில் ஜாக்கி ஷெராஃபிடம் மாட்டிக் கொள்ளும் பெண்ணிற்கு அவருடைய பணத்தின் மேல் ஆசை.தாங்கள் ஆசைப்பட்டதை அடைவதற்காக ஒரு ஆணும்,பெண்ணும் எவ்வாறு புத்திசாலித்தனத்துடன் வெவ்வேறு விதமாகக் காய்களை நகர்த்துகின்றனர் என்பதுதான் அறிமுக இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்,எஸ்.பி.பி சரண் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் 'ஆரண்யகாண்டம்' படத்தின் கதை.

படத்தில் கிளைக்கதைகளாக வரும் ரவிகிருஷ்ணா,வாழ்ந்து கெட்ட ஜமிந்தார் மற்றும் அவருடைய சிறு பையன்,எதிர் குரூப் லீடர் கஜேந்திரன் என்று படத்தின் அனைத்து பாத்திரங்களுமே படத்தின் திரைக்கதைக்கு உதவியாக இருக்கின்றன. தமிழில் கேங்க்ஸ்டர்ஸின் வாழ்க்கையைப் பிரதானமாகக் கொண்டு,பாடல்களே இல்லாமல் வெளிவந்திருக்கும் முதல் படம் இதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.

தன்னுடைய லீடரான ஜாக்கி ஷெராஃப்பே தன்னைக் கொல்வதற்காகத் தன் மனைவியைக் கடத்தி சென்று விட்ட பிறகு, எதிர் குரூப் ஆட்கள் தன்னைக் கொல்ல வருகையில்,ஓடிக் கொண்டே சம்பத்,ஒவ்வொரு பிரச்சனையையும் ஆராய்ந்து கொண்டே அவர் உடனடியாக முடிவெடுக்க வேண்டியது எது எனத் திட்டமிடும் இடம் அசத்தல்.படத்தின் முன் பாதியில் வரும் சில காட்சிகளைத் தவிர்த்து விட்டு பார்த்தால்,மொத்தப் படமுமே மிக நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் பின்னணியில் ஒலிக்கும் பழைய பாடல்களையும்,படங்களின் வசனங்களையும்(டிவியில்) காட்சிக்கு ஏற்றவாறு தேர்வு செய்திருப்பது நன்றாக இருக்கிறது.உதாரணத்திற்கு ரவி கிருஷ்ணா ஹீரோயின் யாஸ்மின் பொன்னப்பாவுடன் படுக்கையில் இருக்கையில் டி.வி யில் '16 வயதினிலே' சப்பாணி கமல் பேசிக் கொண்டிருப்பது என்று பார்த்து பார்த்து செலக்ட் செய்திருக்கிறார்கள்.அதேபோல் வாழ்ந்து கெட்ட ஜமீந்தார் போதைப் பொருட்களை பறிகொடுக்கையில்,அவரின் பையன் கையில் இருந்து ஐஸ் கீழே விழுவ‌து டைர‌க்ட‌ர் ட‌ச்.

யுவ‌ன்ச‌ங்க‌ர் ராஜாவின் பின்ன‌ணி இசை,வினோத்தின் ஒளிப்ப‌திவு ம‌ற்றும் ப‌ட‌த்தின் வ‌ச‌ன‌ங்க‌ள்('புத்த‌ருக்கு போதிம‌ர‌ம் மாதிரி,கேங்ஸ்ட‌ர்சுக்கு சேசிங்','ப‌ய‌ம் போக‌லை;ஆனால் தைரிய‌ம் வ‌ந்திடுச்சு','கப்பு பார்த்தா மப்பு இல்லை') ந‌டிக‌ர்க‌ளின் தேர்வு என்று அனைத்துமே மிக‌ சிற‌ப்பாக‌ வ‌ந்திருக்கிற‌து.

ஆர‌ண்யகாண்ட‌ம்-'ஆ'ச்ச‌ர்ய‌ காண்ட‌ம்.

Sunday, May 15, 2011

அழகர்சாமியின் குதிரை--திரை விமர்சனம்


திருவிழாவிற்காகக் காத்துக் கொண்டிருக்கும் 'சாமி' அழகரும், திருமணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும் 'ஆசாமி' அழகரும் தத்தம் குதிரைகளைத் தொலைத்து விடுகிறார்கள்.குதிரை கிடைத்து திருவிழாவும்,திருமணமும் நடந்ததா என்பதுதான் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'அழகர்சாமியின் குதிரை' படத்தின் கதை.

பாஸ்கர் சக்தியின் 'அழகர்சாமியின் குதிரை' குறுநாவலை சிதைக்காமல் அப்படியே படம் எடுத்ததற்காக சுசீந்திரனுக்கு ஒரு சல்யூட்.கிராமத்து மக்களின் வாழ்க்கையை அப்படியே படமாக்கிவிட வேண்டும் என்று முனைந்ததில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நாடகம்போல் ஆகிவிட்டிருப்பதுதான் சோகம்.அப்புகுட்டியின் வருகைக்குப் பிறகு படம் வேகமெடுத்தாலும்,க்ளைமாக்ஸில் கோட்டைவிட்டு விட்டார்கள்.

அப்புகுட்டிக்கும்,சரண்யா மோகனுக்குமான காதல் அழகான கவிதை.அப்புக்குட்டிக்கும் குதிரைக்குமான உறவும் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.இளையராஜாவின் பின்னணி இசையும்,'பூவைக் கேளு' பாடலும் காதுகளில் இன்னும் ரீங்காரம். அதுபோலவே தேனி ஈஸ்வரின் கேமராவும் கண்களுக்கு குளிர்ச்சி.ஊர் திருவிழாவிற்கு வரி கொடுக்க யோசிக்கும் மக்கள்,வெளியூர் கோடாங்கிக்குப் பணத்தை அள்ளிக் கொடுப்பது நிதர்சனம்.

மெதுவாக நகரும் திரைக்கதையில் பாஸ்கர் சக்தியின் வசனம் பெரிய ஆறுதல்.'வாசல் தெளிக்கிற மாதிரி பெய்யுது மழை','கோடாங்கிக்கு கிறுக்கா பிடிச்சிருக்கா;இல்லை சாமி பிடிச்சிருக்கு;ரெண்டும் ஒண்ணுதான்','காட்டேரி பூஜை கட்டு,இல்லை இன்னொரு பொண்டாட்டி கட்டு,ஆனால் என் தாலியை அக்காதே' என்று கிடைத்த இடங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

வறுமையில் உழலும் கிராமத்து மக்கள் திருவிழாக் காலங்களில் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது போல் படமும் சில இடங்களில் மட்டும் சுவாரசியமாக இருக்கிறது.

அழகர்சாமியின் குதிரை-மரக் குதிரை

Friday, January 28, 2011

ஆடுகளம்-திரை விமர்சனம்


சேவல்களுக்கிடையே வன்முறை,குரூரம் போன்றவற்றை உருவாக்குவதில் தேர்ந்தவனான ஒருவன்,அதே பகை,வன்முறை போன்றவற்றை மனிதர்களுடையே உருவாக்கும்போது என்ன நேர்கிறது என்பதுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'ஆடுகளம்' படத்தின் கதை.

சேவல் வளர்ப்பின் நுணுக்கங்களை 'பேட்டைக்காரன்' தன்னுடைய சிஷ்யர்களான கிஷோர்,தனுஷிற்கு சொல்லிக்கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் தனுஷ் பேட்டைக்காரனை விடவும் அதில் நிபுணத்துவம் பெற நேர்கையில் என்ன நடக்கிறது என்பதை மதுரை மண்ணின் உக்கிரத்துடனுடம்,நாட்டுக் கோழியின் சுவையுடனும் படமாக்கியிருக்கிறார்கள்.

தனுஷிற்கும்,தபஸிற்கும்(பேர் பொருத்தமே நன்றாக இருக்கிறது) நடுவில் வரும் காதல் நன்றாக இருந்தாலும்,தபஸிக்கு தனுஷ் மேல் உடனே காதல் வருவது செயற்கையாக உள்ளது. தபஸியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நாமும் கொஞ்சம் கொஞ்சமாய் தனுஷாக மாற ஆரம்பித்து விடுகிறோம்.

தனுஷ் சில இடங்களில் மதுரை பாஷையில் கொஞ்சம் திணறினாலும், நடிப்பில் வெளுத்திக் கட்டியிருக்கிறார். அதுவும் சில காட்சிகளில் முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் நடித்திருப்பது,அவர் எவ்வளவு தூரம் அந்த கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.தபஸி அவரைக் காதலிக்கவில்லை என்று சொல்லும்போது,அவர் தபஸியுடன் கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கையையும்,முதல் குழந்தைக்கு நாம் மொட்டை போடும்போது நீ சேலையில் இருக்கிறாய் என்று சொல்வதும் அருமை. படத்தில் நடித்திருக்கும் அனைவருமே மிகவும் நன்றாக நடித்திருக்கின்றனர்.இடைவேளையின் போது வரும் சேவல் சண்டையும், கிளைமாக்ஸில் தனுஷும்,கிஷோரும் சேவல்கள் போன்று உக்கிரமாக சண்டையிடுவதும் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை சில இடங்களில் 'ஓவர்' டோஸாக தெரிந்தாலும் பல இடங்களில் மிகவும் நன்றாக வந்திருப்பதும் உண்மை;யாத்தே யாத்தே பாடல் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.

படத்தின் மிகப் பெரிய பலமே,அந்தந்த கேரக்டர்கள் பேசும் வசனங்கள்.தனுஷின் அம்மா இறந்தவுடன் அவர் சொல்லும் "இவ்வளவு சின்ன வீட்டிலேயே எங்கம்மா ஞாபகம் எனக்கு இவ்வளவு இருக்கையில்,காரை வீட்டில் எங்கப்பாவுடன் அம்மா வாழ்ந்த வாழ்க்கை அவருக்கு எவ்வளவு தூரம் ஞாபகத்தில் இருந்திருக்கும்" என்பதும், "உன்கூட வருகின்ற பெண்தான் நாம் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் போகின்றோமென்பதை முடிவு பண்ணுபவள்" , குறிப்பாக தனுஷ் கிளைமாக்ஸில் பேட்டைக்காரனிடம் சொல்லும் 'நீங்க சாகுடான்னு நானே செத்திருப்பேன்' என்பது கச்சிதம். அதேபோல் பேட்டைக்காரன் தன்னுடைய மனைவியை பிரிந்திருக்கையில் அவர்,தனுஷை தபஸியுடன் பார்க்கையில் பேட்டைக்காரனாக நடித்திருக்கும் ஜெயபாலனின் உணர்ச்சிகள் அழகு.

ஆடுகளம்-சொல்லி ஆடியிருக்கிறார்கள்.

Thursday, January 27, 2011

கேள்வித் தீ

எல்லா சாத்தியங்களும்
சாத்தியமற்றுப்போன ஒரு நிலையில்
விடையில்லாக் கேள்விகள்
என்னைத் துரத்தத் தொடங்கின!

ஒவ்வொரு கேள்வியும்
என்னுயிரைக் கொஞ்சம் கொஞ்சமாய்
தின்னத் தலைப்பட்ட கணத்தில்
உன்னை யாசித்துக் கிடந்தேன்!

பதில்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த
அறையின் சாவியை
தூக்கி எறிந்துவிட்டு
புன்னகைக்கிறாய் நீ!

கேள்விகள் என்னை
தின்னத் தொடங்கு முன்பே
இறக்கத் தொடங்குகிறேன் நான்.

Tuesday, January 4, 2011

பிரிய‌சகி-7


எல்லா ந‌திக‌ளும்
ரோமை நோக்கி செல்வ‌து போல்
என் எல்லாப் பாதைகளும்
உன்னை நோக்கியே இருக்கின்ற‌ன‌!

உன‌க்குப் பைய‌ன் வேண்டுமா
இல்லை பெண் வேண்டுமா? என்றாய்
நீதான் வேண்டுமென்றதில்
குரோமோஸோம்க‌ளெல்லாம்
கும்மி அடிக்க‌த் தொட‌ங்கின‌!

க‌ன்ன‌த்தில்
கை வைக்காதே!
நினைப்ப‌து ந‌ட‌க்காதென்றாய்
உன் க‌ன்ன‌த்தில் கை வைத்தேன்
நினைக்காததெல்லாம் ந‌ட‌ந்த‌து!

முத்த‌ம் கேட்கையில்
ப‌ணிவாய் கேள்
அதிகார‌மாய் கேட்காதே என்கிறாய்
காம‌த்துப் பாலும்
ஒரு அதிகாரம்தானே என்கிறேன் நான்!

உன்னுடம்பின் மச்சங்களை
எத்தனை முறை
எண்ணிச் சொன்னாலும்
எண்ணிக்கையில் ஒன்று
குறைகிறது என்கிறாய்!