Friday, March 29, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா - திரை விமர்சனம்


திருச்சி பக்கமிருக்கும் பொன்மலை என்ற ஊரில். நான்கு பேர்கள்(விமல், சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இன்னொருவர்) வெட்டியாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். கடைசியில் இவர்கள் திருந்தி, வாழ்க்கையில் செட்டில் ஆனார்களா என்பதுதான் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'கேடி பில்லா, கில்லாடி ரங்கா' படத்தின் கதை.

படம் பார்ப்பவர்களை சிரிக்காமல் வீட்டுக்கு அனுப்பக்கூடாது என்று முடிவோடு படம் எடுத்திருப்பார்கள் போல. படத்தின் முதல் இரண்டு மணி நேரங்கள், விழுந்து விழுந்து சிரிப்பதற்கும், கடைசி 15 நிமிடங்கள் வரும் சென்டிமென்ட் காட்சிகளுக்காகவும்,கர்சீப் இல்லாமல் யாரும் இந்தப் படத்திற்கு செல்ல வேண்டாம். சண்டைக்காட்சி முதற்கொண்டு அனைத்தும் சிரிப்பு வெடிதான்.'தேனீ' கேசவனாக விமல், 'பட்டை' முருகனாக சிவகார்த்திகேயன். விமலும், சிவகார்த்திகேயனும் அநாயசமாக நகைச்சுவையில் பட்டையக் கிளப்பியிருக்கிறார்கள். விமலுக்கு ஜோடியாக பிந்து மாதவியும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெஜினாவும் நடித்திருக்கிறார்கள். இரண்டு ஹீரோ அவர்களுக்கு இரண்டு நண்பர்கள். இரண்டு ஹீரோக்களின் அப்பா அம்மாக்கள், அவர்களின் வீட்டில் இரண்டு நாய்கள். அப்புறம், இரண்டு ஹீரோயின்கள், அவர்களின் அப்பா, அம்மாக்கள் என்று அனைத்து கேரக்டர்களையும் வைத்துக் கொண்டு நகைச்சுவைப் பட்டாசு வெடித்திருக்கிறார்கள்.

விமல், வீட்டில் தனக்கு சாப்பாடு கொடுக்கும்போது 'விஷம்' கலந்திருக்கிறதா என்று நாய்க்கு முதலில் சாப்பாடு கொடுத்து செக் செய்வது, அப்பாவுக்கு 'பீட்டர்' என்று பேர் வைப்பது என்று ஒரு பக்கம் கலக்கினால், மறுபக்கத்தில் சிவகார்த்திகேயன் காதலுடன் ரெஜினா பின்னாடியே சுற்றுவதும், நடிச்சு பேசுறாளா இல்லை புடிச்சு பேசுறாளா என்று புலம்புவதும், ரெஜினா அனுப்பிய ஆட்கள் சிவகார்த்திகேயனை "நையப்(?)" புடைப்பதும் குபீர் சிரிப்பு அளிக்கும் காட்சிகள். மாமாஸ் கிஃப்ட் என்று பைக்கில் ஸ்டிக்கரோடு சூரி ஊர் சுற்றிக் கொண்டிருப்பதும், சிவகார்த்திகேயனிடம் "லிஃப்ட் கேட்கும் போது ஸ்விப்ட் கார்தான் வேணும்னு அடம்பிடிக்கக் கூடாது, ஓட்டை சைக்கிளா இருந்தாலும் போகனும்" என்று அட்வைஸ் பண்ணுவதும், பச்சப் புள்ள காசுல குடிக்கிறோமுன்னு தோணுதா என்று கேட்பது, அதேபோல் எலக்சன் ரிசல்ட் வந்தவுடன் சிவகார்த்திகேயனிடம், எல்லாம் ஓகே, ஆனால் பெட்டியைத் தூக்கிட்டுப் போயிடுவாங்கன்னு நைட் ஃபுல்லா முழிக்க வச்சதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்வதும்,சூரியும் காமெடியில் தன்னுடைய பங்கை நன்றாக அளித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் பிந்து மாதவி விமலிடமும், ரெஜினா சிவகார்த்திகேயனிடமும் உடனே காதலில் விழுவது நம்பும்படி இல்லை.

படத்தின் காமெடிக்குப், படத்தின் வசனகர்த்தாவும் மிகப் பெரிய காரணம்("நான் பசியா இருக்கேன்; அப்புறம் கூப்பிடு", "போன பஸ்ஸுக்கு ஏன் கையக் காட்டுற"). படம் ஆரம்பத்தில், இடைவேளையில் மற்றும் அடிக்கடி காட்டப்படும் 'ரெயிலை'ப் படத்தின் க்ளைமாக்ஸில் பயன்படுத்தியிருப்பதில் இயக்குனர் தெரிகிறார்.பொதுவாகக் காமெடிப் படங்களில் சென்டிமென்ட் எடுபடாது. ஆனால் இந்தப் படத்தில் கடைசி 15 நிமிடங்கள் வரும் சென்டிமென்ட் காட்சிகள் 'பாண்டிராஜின்' திறமையைக் காட்டுகின்றன.

படம் முடிந்தவுடன், இந்த 'மாதிரி' ஒரு படம் பார்த்து 'எவ்வளவு' நாளாச்சு என்று தோன்றுவதுதான், இந்தப் படத்தின் வெற்றி.

Saturday, March 16, 2013

பரதேசி - திரை விமர்சனம்


பெரிதாக காசு ஏதுமில்லையென்றாலும் சொந்த ஊரில் சந்தோஷமாகவே இருக்கும் மக்கள், பஞ்சம் பிழைக்க வெளியூருக்கு சென்று, படும் அவலத்தை சொல்லும் படம்தான் பாலா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'பரதேசி' படத்தின் கதை.

சாளூர் என்ற கிராமத்தில், சுதந்திரத்திற்கு முன் வாழும் கிராமத்து மக்களின் கொண்டாட்டமான வாழ்க்கையோடு படம் ஆரம்பிக்கிறது. ஊர் மக்களுக்கு 'தண்டோரா' போட்டு கல்யாணம், கருமாதி போன்றவற்றை சொல்பவராக அதர்வா. அதர்வாவும், வேதிகாவும் காதலிக்கிறார்கள்.  அதன்பின் உள்ளூரில் உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்காததால், வெளியூரில் வேலைக்கு சென்று படும் அவலத்தைக் கண்ணீரும், கம்பலையுமாக சொல்லியிருக்கிறார்கள்.

பாலா தன்னுடைய முந்தைய படங்களில் இருந்த 'க்ளிஷே'வை முடிந்தவரை தவிர்த்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.(ஹீரோ, ஹீரோயினை 'லந்து' பண்ணிக்கொண்டே இருப்பது, படத்தின் க்ளைமாக்ஸில் மெயினான கேரக்டர் இறப்பது, சண்டைக்காட்சிகளில் மிக குரூரமாக அடிப்பது). அதேபோல் அவருடைய படங்களில் மிகக் கச்சிதமாக அமைந்த‌ திரைக்கதையும் இதுதான் என்று தோன்றுகிறது.  கல்யாணத்தன்று, ஊரில் ஒருவர்(விக்ரமாதித்யன்) இறந்துவிட,நெல்லுச் சோறு சாப்பிடுவதற்காக, ஊர் மக்கள் அனைவரும் அதை மறைப்பதிலேயே கிராமத்தின் வறுமையை அழகாகக் காட்டிவிடுகிறார்கள். அதனாலேயே கங்காணி ஆசை காட்டி, கிராம மக்களை எளிதாக அழைத்துச் செல்ல முடிகையில் நமக்கு எந்த கேள்வியும் எழுவதில்லை. 48 நாட்கள் நீளும் பயணத்தின் போது, ஒருவன் உயிருக்குப் போராடுவதும், அவனை அப்படியே விட்டுவிட்டு மக்கள் பயணத்தைத் தொடர்கையில், அவனின் விரல்கள் அவர்களை நோக்கி நீள்வது என்று படத்தின் பல காட்சிகள் படம் பார்ப்பவர்களை கலங்கடிக்கின்றன. அதர்வா, வேதிகா நினைவாக அவர் அனுப்பிய லெட்டரை எடுத்துப் பார்ப்பது க்ளாஸ். இத்தனை காலமும் தன்னுடைய மனைவியாவது குழந்தையுடன் ஊரில் சந்தோஷமாக இருக்கிறாள் என்று அதர்வா 'டீ எஸ்டேட்டில்' கஷ்டப்படுவதும், கடைசியில் அதர்வா வேதிகாவைப் பார்த்தவுடன் அழுவதும், அதர்வாவைப் பார்த்ததில் வேதிகா சந்தோஷப்படுவதும், பாலாவின் படங்களில் இதுதான் 'பெஸ்ட்' க்ளைமாக்ஸ் என்று தோன்றுகிறது.

எல்லா விதத்திலும் ஒரு டாக்குமென்டரி படம்போல் ஆகக் கூடிய விசயத்தை, மக்கள் ரசிக்கக் கூடிய வகையில் ஒரு திரைப்படமாக எடுத்திருப்பதே பாலாவின் வெற்றி என்று தோன்றுகிறது. அதேபோல்,படத்தின் ஆச்சரியப்படத்தக்க விசயம், இரண்டு மணி நேரப் படத்தில், பல விசயங்களை படத்தின் ஊடாகச் சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்( தீண்டாமைப் பிரச்சனை, கல்யாணத்திற்கு முன் உறவு கொள்வது, பேஷன்ட் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில், டாக்டர் அவரைக் காப்பாற்றாமல், கிறித்தவ மதத்தைப் பரப்புவதில் முனையாக இருப்பது,  அதர்வா விறகு வெட்டிப்போட்டு விட்டு, டீக்கடையில் காசு கிடைக்காமல் ஏமாற்றப்படுவது, காந்தி மேலான வெள்ளைக்காரர்களின் அபிப்ராயம்). பாலா படத்தில், படத்தில் நடித்திருப்பவர்களின் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

படத்தின் சில காட்சிகள் 'நான் கடவுளை' ஞாபகப்படுத்துவதும், படத்தில் அடுத்துவரும் காட்சிகள் எளிதாக ஊகிக்கக் கூடிய‌ அளவில் இருப்பதும் படத்தின் பலவீனம். ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும், பின்னணி இசை கொஞ்சம் பரவாயில்லை. செழியனின் ஒளிப்பதிவு படத்திற்குத் தேவையான 'மூடை'க் கொடுக்கிறது.

பொதுவாக பல பிரச்சனைகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், அதிலிருந்து மூன்று மணி நேரமாவது விடுபடலாம் என்று சினிமாவுக்கு செல்வார்கள்.  திரைப்படங்களும் 'என்டெர்டைய்ன்' ஆக இருந்து, மக்களை 3 மணி நேரம் மட்டும் அவர்களுடைய பிரச்சனைகளை மறக்கச் செய்யும். பரதேசி போன்ற திரைப்படங்கள் பார்க்கையில், நமக்கு இருக்கும் பிரச்சனைகளெல்லாம் ஒன்றுமேயில்லை என்று படம் முடிந்தவுடன் தோன்ற செய்து, பிரச்சனைகளை மறக்கடிக்கும்.

பரதேசி - சக மனிதனை நேசி

Friday, February 22, 2013

ஆதி பகவன் - திரை விமர்சனம்


தாய்லாந்தில் தாதாவாக இருக்கும் ஜெயம் ரவி, மும்பை தாதா 'ஒருவரின்' வலையில் விழுந்து, அவருக்குப் பதில் ஜெயில் செல்ல நேர்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிப்பில் அமீர் இயக்கியிருக்கும் 'ஆதி பகவன்' படத்தின் கதை.

ஆந்திராவில் இன்கம்டாக்ஸ் ஆஃபிஸர் போல் 'Special' ஆக நடித்து, கிரானைட் அதிபர்களின் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு ஜெயம் ரவி தாய்லாந்து செல்லும் ஆரம்பக்கட்டக் காட்சிகள் பரபரவென்று நகருகின்றன. அதன் பின், ஆக் ஷன் படமான ஆதிபகவன், மெதுவாக செல்லும் திரைக்கதையால் இடைவேளை வரை தடுமாறுகிறது. இடைவேளைக்கு சற்று முன் வரும் ட்விஸ்டும், அதன் பின் வரும் மற்றொரு ட்விஸ்டும் படத்தைக் 'கொஞ்சம்' காப்பாற்றுகின்றன. கொஞ்சம் தாய்லாந்து பெண் சாயலில் இருக்கும் 'சாக் ஷி' ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார்.

படத்தின் பெரிய பலவீனம், இப்படத்திற்கு ஜெயம் ரவியைத் தேர்வு செய்ததுதான்(இப்படத்திற்கு அஜித் சரியான தேர்வாக இருந்திருப்பார்). ஜெயம் ரவி ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருந்தாலும்,தாதா வேடமும் அவருக்குப் 'பெரிதாக' பொருந்தவில்லை. பகவான் வேடத்திலும் அவருடைய 'குரல்' ஒத்துழைத்த அளவிற்கு 'முகம்' ஒத்துழைக்கவில்லை. ஹீரோயினான நீது சந்திரா படம் முழுவதும் வருகிறார்; கிடைத்த வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். நீது சந்திராவிற்கு பின்னணி குரல் கொடுத்தவரும் அசத்தியிருக்கிறார்.அரசியல்வாதியைக் கொல்ல அவர் எழுந்திருக்கும் வரை காத்திருந்துவிட்டு அவர் எழுந்தவுடன் 'காலை வணக்கம்' என்று ஜெயம் ரவி சொல்வதில் அவருடைய 'வாய்ஸ் மாடுலேஷன்' ரசிக்க வைக்கிறது. நீது சந்திரா, 'ஆதி' ஜெயம் ரவியைக் குறைவான தலை முடியோடு படமாக வரைவதில் இயக்குனர் தெரிகிறார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

பெரிய தாதா போல் பில்ட் அப் கொடுக்கப்படும் ஜெயம் ரவி சாதாரணமாகப் பாரிலும், ரோட்டிலும் தனியாக சுற்றிக் கொண்டிருப்பதும், அவரைக் கொல்ல அவருடைய எதிரி பாபு ஆண்டனி திணறிக் கொண்டிருப்பதும் படத்தில் தனியாகக் 'காமெடி' காட்சிகள் இல்லாததை நிவர்த்தி செய்கின்றன. பெரிய தாதாவாகக் காட்டப்படும் 'ஆதி' ஜெயம் ரவியை, மும்பை தாதாவான 'பகவான்' ஜெயம் ரவி சுலபமாக வலையில் விழ வைப்பதில், மும்பை தாதாதான் பெரிய ஆள் என்று நினைத்தால், திரும்பவும் பகவானை, ஆதி சுலபமாக வீழ்த்துவது நம்பும்படி இல்லை.

நீண்ட இடைவேளைக்குப் பின்(பருத்தி வீரன்) இப்படத்தை இயக்கியிருக்கும் அமீர், இதுபோன்ற ஒரு கதைக்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆதி பகவன் - பாதி பகவன்

Sunday, February 10, 2013

கடல் - திரை விமர்சனம்




கிறித்துவ ஆசிரியப் பள்ளியின் ஆசிரியர்களாக இருக்கும் அரவிந்த்சாமி மிகவும் ஒழுக்கமானவர். அர்ஜீன் அவருக்கு நேர் எதிரானவர். அர்ஜீன் செய்த  தவறைச் சுட்டிக்காட்டி,  அவரை பள்ளியிலிருந்து அரவிந்த்சாமி வெளியேறச் செய்கிறார். அதற்கு அர்ஜீன் அவரை பழிவாங்க முயற்சிப்பதுதான் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'கடல்' படத்தின் கதை.

இப்படத்தின் கதை, திரைக்கதை(மணிரத்னத்துடன் இணைந்து), வசனத்தை ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அவருடைய சமீபத்திய சாதாரண நாவல்களான அனல்காற்று, இரவு, உலோகம் போன்றவற்றில் தன்னுடைய வார்த்தை ஜாலத்தின் மூலம் இலக்கியமாக காட்ட முயற்சித்திருப்பார். அதேபோல் காலம்காலமாக தமிழ் சினிமாவில் இருக்கும்(அண்ணன் தம்பியில் அண்ணன் நல்லவன்; தம்பி கெட்டவன், இரண்டு நண்பர்களில் ஒருவன் நல்லவன்;மற்றொருவன் கெட்டவன்) அரதப் பழசான கதையை தேவன், சாத்தான் என்று முலாம் பூசி பெரும் 'அறத்துடன்' வித்தியாசமான கதை போன்று கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

கவுதம் கார்த்திக்கின் சிறு வயது எபிசோடும், மீனவ மக்களின் பின்னணியைச் சொல்லும் ஆரம்பக்கட்ட காட்சிகளும் அற்புதம். கடலை அதன் அத்தனை பிரம்மாண்டத்தோடு அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். அனாதை போன்று இருக்கும் கவுதம் சிறு வயதில் பொறுக்கிபோல் சுற்றிக் கொண்டிருப்பதும், அரவிந்த் சாமியின் வருகைக்குப் பிறகு நல்ல இளைஞனாக வாழ்ந்து கொண்டிருப்பது, துளசி மேல் ஏற்படும் காதல் என்று படத்தின் முதல் பாதி அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் வசனங்களும் பல இடங்களில் பலே(ஏன் பார்க்க வந்திருக்கீங்க;பார்க்காம இருக்க முடியலை, என்ன தொழில் செய்றவங்கன்னு தெரியாது; கெட்ட தொழில் செஞ்சா நானும் செய்வேன்)இரண்டாம் பாதியின் இறுதியில்தான்  'கொஞ்சம்'சொதப்பியிருக்கிறார்கள்'. க்ளைமாக்ஸ் பெருத்த ஏமாற்றம்; க்ளாமாக்ஸ் ஃபைட்டிற்கு ரஹ்மானின் இசையும் பொருந்தவே இல்லை. அதுவும் அர்ஜீன் தோற்ற பிறகு கவுதம், துளசியிடம் சென்று பேசிக் கொண்டிருக்கும் கடைசி 10 நிமிடக் காட்சிகளைத் தாரளமாக‌ வெட்டியிருக்கலாம்

கவுதம் கார்த்திக் முதல் படம் போலவே இல்லாமல் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். துளசியின் 'முகம்' கூட '15' வயது பெண் போல் இல்லை. துளசியின் நடிப்பைப் பார்த்த பின் மணிரத்னம் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து, அவருக்குக் 'கொஞ்சம்' மனநிலை சரியில்லாதவர் போல் மாற்றிவிட்டாரோ என்று தோன்றுகிறது. அர்ஜீன், அரவிந்த்சாமியின் நடிப்பு கனகச்சிதம். 'கண்ணோடு காண்பெதெல்லாம்' படத்திற்குப் பின் அர்ஜீன் கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டியிருக்கிறார்.

பொதுவாக மணிரத்னத்னம் படங்களில் குறைவாகப் பேசுவார்கள். நமக்கு கொஞ்சம் புரியாது. இந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களும் அதிகமாகவே பேசுகிறார்கள். அப்படியும் கொஞ்சம் புரியவில்லை. கவுதம் போன்றே அர்ஜீனின் பழைய வாழ்க்கைதான் அவர் சாத்தானாக மாறக் காரணம் என்று தெரிகிறது. அதனால்தான் கவுதமைப் பார்த்தவுடன், அர்ஜீன் அவரைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார். ஒரு முறை அர்ஜீனால் அவமானப்பட்டு, சிறைக்கு சென்று வந்ததற்கே அரவிந்த்சாமி கடைசியில் அர்ஜீனைக் கொல்ல முயற்சிக்கிறார். அப்படி இருக்கையில் அரவிந்த்சாமியைத் தேவன் போன்று காட்டுவதும் ,அர்ஜீனைச் சாத்தான் போன்று சித்தரிப்பதும் பொருந்தாதது போன்று இருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை வேறு ஏதாவது இயக்குனர்கள் இயக்கியிருந்தால், படம் மிகவும் 'மொக்கை'யாக இருந்திருக்கும். உண்மையிலேயே மணிரத்னம் இயக்கியிருப்பதால்தான் படம் ஓரளவிற்கு பார்க்கும்படி இருப்பதாகத் தோன்றுகிறது. மணிரத்னம் செய்த ஒரே தவறு இந்தக் 'கதை'யைத் தேர்வு செய்ததுதான். நல்ல இலக்கியங்களால் சினிமாவில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். ஆனால் இலக்கியவாதிகளால் அல்ல‌.

கடல் - முதல் பாதி தேவன்; இரண்டாம் பாதி சாத்தான்.

Friday, February 1, 2013

டேவிட் - திரை விமர்சனம்



விக்ரம், ஜீவா நடிப்பில், மணிரத்னத்தின் உதவியாளர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் 'டேவிட்'. ஒரே பேர்(டேவிட்) கொண்ட இருவரின் வாழ்க்கையின் சில பகுதிகளை மட்டும் நாம் கதறக் கதறக் காட்டியிருக்கிறார்கள்.

1999-ல் மும்பையில் ஜீவா, தன் தந்தை நாசருடன் வாழ்ந்து வருகிறார். மதபோதகரான நாசருக்கு, சில மத அமைப்புகளால் அவமானம் நேர்கிறது. 2000-ல் கோவாவில், விக்ரம் வாழ்ந்து வருகிறார். விக்ரம் வரும் காட்சிகளிலெல்லாம் 'மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது' என்று திரையில் வருகிறது. நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்(இஷா ஷெர்வானி) மீது விக்ரமிற்கு திடீரென்று காதல் வருகிறது. விக்ரமிற்கு காதலி கிடைத்தாரா, நாசருக்கு ஏற்பட்ட அவமானத்தை அவர் பையன் ஜீவா துடைத்தாரா என்பதை நாம் சலிப்படையும் வகையில் திரையில் காட்டியிருக்கிறார்கள். இப்படி ஒரு படத்தை போய் ஏன் இந்தி, தமிழ் என்று இரு மொழிகளில் வேறு எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

விக்ரமை விட ஜீவாவிற்குதான் ஸ்கோப் அதிகம்.விக்ரம், ஜீவா, நாசர் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரத்னவேலுவின் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது. விக்ரம் வரும் போர்ஷனை விட, ஜீவா வரும் காட்சிகள் 'கொஞ்சம்' பரவாயில்லை. தன் குழந்தையுடன் இருக்கும் லார தத்தா ஜீவாவிற்கு நண்பி. அதேபோல் தபு, விக்ரமிற்கு.மொத்தப் படமுமே சுவாரஸ்யம் எதுவுமில்லாமல் நகர்கிறது. படத்தில் இறந்து போன விக்ரமின் அப்பா, ஆவியாக மற்றவர்களின் உடம்பில் புகுந்து பேசுவது எரிச்சல். படத்தின் ஒரே ஆறுதல், படம் இரண்டு மணி நேரங்களில் முடிந்து விடுகிறது.

படம் பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பாக தம் மீது கோபம் கொள்வார்கள் என்று தெரிந்தோ என்னவோ, படத்தில் விவரமாக 'உங்களுக்கு யார் தீங்கு செஞ்சாலும் மன்னிச்சுடுங்க' என்று ஒரு வசனம் வருகிறது. அதேபோல் 'கோடியில் ஒருத்தருக்குத்தான் கடவுள் வலியைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கிறார்' என்றும் ஒரு வசனம் வருகிறது. அந்த ஒருவர் நீங்களென்றால் தாராளமாக இந்தப் படத்தைப் போய் பார்க்கலாம்.

டைரக்டர் சார், திரும்பவும் மணிரத்னம் கிட்ட போய் அசிஸ்டென்ட்டா சேர்ந்து, இன்னும் கொஞ்சம் தொழிலைக் கத்துக்கிட்டு வந்து படம் எடுங்களேன், ப்ளீஸ்!

Thursday, January 31, 2013

விஸ்வரூபம் - திரை விமர்சனம்


ஒரு இடத்தில் குண்டு வெடிக்கும்போது, பொதுவாக எல்லா மதத்தைத் சேர்ந்த அப்பாவிகளும் பலியாகின்றனர். அப்படி அமெரிக்காவில் வைக்கப்படும் குண்டை, முஸ்லீமான கமல், இந்துவான ஆண்ட்ரியா, கிறித்தவரான ஒரு வெள்ளைக்காரர் அனைவரும் சேர்ந்து எப்படி தடுக்கிறார்கள் என்பதுதான் கமல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'விஸ்வரூபம்' படத்தின் கதை.

கதக் டான்ஸராக மனைவி பூஜாவோடு கமல் வாழ்ந்து வருகிறார். வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கும் பூஜாவிற்கு, கமலிடம் ஏதாவது தப்பு இருந்தால், அவரை விவாகரத்து செய்வது எளிதாக இருக்கும் என்று, துப்பறியும் நிபுணர் உதவியோடு கமலைப் பின் தொடரச் செய்கிறார். அப்போது, கமலின் உண்மையான ரூபம் வெளிவருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதை ஆஃப்கான் பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் இடம்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்கள் முழுத்திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்கள். ஆஃப்கான்,அமெரிக்கா பின்னணியில் வரும் காட்சிகள் ரசிகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கலாம். கமல் முகத்திற்கு எந்த வேடமானாலும் நன்றாகப்  பொருந்துகிறது. நீ முஸ்லிமா என்று கமலிடம் கேட்கும் போது, கமல் காட்டும் முகபாவனையும், கதக் டான்ஸராக அவருடைய உடல்மொழியும் அருமை. அதேபோல், கமலை ஃபோட்டோ எடுக்கும்போது, ஃபோட்டாவில் தன் முகம் சரியாக வரக்கூடாது என்று வேண்டுமென்றே அவர் அடிவாங்குவது டைரக்டர் டச். படத்தின் வசனங்களும் பல இடங்களில் பளிச்(உதா: கஷ்மீரிங்கிற பேரை இன்னும் ஏன் வைச்சுக்கிட்டிருக்கிற? அப்பா விவாகரத்துப் பண்ணிட்டுப் போயிட்டாரு, அம்மா மானத்துக்காக பேரை இன்னும் வைச்சுக்கிட்டுருக்காங்க).கமல் தன் ரூபத்தைக் காட்டும் காட்சி, அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.அதேபோல், இடைவேளைக்கு முன்பு வரும், அமெரிக்க, ஆஃப்கான் சண்டைக் காட்சிகளிலும் பிரம்ம்மாண்டம்.

ஆனாலும், படம் ஆரம்பத்திலும்,இடைவேளைக்குப் பின்பும், பல இடங்களில் மெதுவாக நகருகிறது. விருமாண்டி படத்தில் பசுபதி தன் கதையை அவருடைய கோணத்தில் சொல்லும்போது, நம்மிடம் பல கேள்விகள் இருக்கும். பின்பு, கமல் அவருடைய கதையை சொல்லும்போது, நம்முடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அதேபோல் இந்தப் படத்தில் இரண்டாம் பாகத்தின் போதுதான், இப்படத்தில் தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு விடை கிடைக்குமோ என்னமோ! படத்தின் க்ளைமாக்ஸும் கொஞ்சம் ஏமாற்றமே!

முழுமையான ஹாலிவுட் படமாகவும் இல்லாமல், தமிழ் மசாலாப் படமாகவும் இல்லாமல் இருப்பதுதான் படத்தின் பலமாகவும், பலவீனமாகவும் உள்ளது. படம் நல்லா இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால், நல்லா இருந்திருக்கலாம்!

விஸ்வரூபம் - Viswaரூபம்.