
தன்னுடைய மகன் கஷ்டத்தில் இருக்கும்போது அவனுடைய விபத்தில் இறந்துபோன பெற்றோர் எப்படி ஆவியாக மாறி அவனுக்கு உதவுகிறார்கள் என்பதுதான் 'ஆனந்தபுரத்து வீடு' படத்தின் கதை.
நந்தா தன் மனைவி சாயா சிங் மற்றும் குழந்தையுடன் சென்னையிலிருந்து தன்னுடைய பரம்பரை வீடு இருக்கும் ஆனந்தபுரத்திற்கு வரும் ஆரம்பக் காட்சிகளும்,அந்த சூழலும் நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.அதன் பின்னர் நம் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து படம் முடியும்போது முற்றிலும் இல்லாமல் போய் விடுகின்றது.
படத்தில் நடித்திருக்கும் வாய் பேச முடியாமல் வரும் குட்டிக் குழந்தையும் அதன் நடிப்பும் கொள்ளை அழகு.அதுவும் பேய் செய்யும் வித்தைகளுக்கெல்லாம் அந்தக் குழந்தை பழி ஏற்க நேர்வதும்,அதன் முக பாவங்களும் அருமை.இரண்டாம் பாதியில் படு பயங்கரமான த்ரில்லிங் காட்சிகள் வருமென்று எதிர்பார்த்தால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.வீட்டை வாங்க வருபவரிடம் பேய் செய்யும் மாயாஜாலக் காட்சிகளாகட்டும்;நந்தாவின் நண்பனுடைய காதலியும் ஆனந்தபுரத்து வீட்டிற்கு வந்தவுடன், வில்லன் சொல்லும் 'நாலும்,ஒண்ணும் அஞ்சு;யாரும் வீட்டை விட்டுப் போகக்கூடாது' என்பதும் 'பதினெட்டு ரூபாய்க்கு இந்த மேஜிக் ஒர்த்' என்பதும் பேசாமல் இந்தப் படத்தை முழு காமெடி படமாகவே எடுத்திருக்கலாமென்று தோன்றுகிறது.
சின்னத் திரையில் மர்ம சீரியல்கள் எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் 'நாகா', பெரிய திரையிலும் இரண்டே கால் மணி நேரத்திற்கு ஒரு சீரியலை விளம்பர இடைவேளை மட்டும் இல்லாமல் எடுத்திருக்கின்றார்.இப்ப வருகின்ற தமிழ் படங்களெல்லாம் நன்றாக இருக்குமா என்று பயத்துடன் பார்க்க வேண்டியதாயிருக்கிறது.ஆனால்,இந்தப் படத்தை ஒரு பயமுமில்லாமல் பார்க்கலாம் என்பதுதான் படத்தின் பலவீனம்.இருந்தாலும்,இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் 'ஷங்கருக்கு' கண்டிப்பாக 'கிலி' ஏற்பட்டிருக்கும்.
ஆனந்தபுரத்து வீடு-பாழடைந்த வீடு.
//ஆனந்தபுரத்து வீடு-பாழடைந்த வீடு. //
ReplyDeleteசூப்பர்....
நன்றி ஜெட்லி!
ReplyDelete