Friday, December 12, 2014

லிங்கா - திரை விமர்சனம்


மக்களின் பல்ஸ் தெரிந்த நடிகர் ரஜினிகாந்தும், இயக்குனர் கே.எஸ், ரவிக்குமாரும் அடித்திருக்கும் ஹாட்ரிக் வெற்றிதான் 'லிங்கா'. தன் அப்பா(ரஜினி) கட்டிய அணைக்குப் பாதிப்பு வரும்போது மகன்(ரஜினி) வந்து அதைக் காப்பதுதான் 'லிங்கா' படத்தின் கதை.

பொதுவாக ரஜினி, ரவிக்குமார் கூட்டணியில் வரும் படம் எப்படி இருக்குமோ இம்மி பிசகாமல் இப்படமும் அப்படியே இருக்கிறது. இந்தப்படத்திலும் ராஜாவாக வரும் ரஜினி மக்களுக்காகத் 'தன்' பணத்தை அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும், பின்பு சொத்துக்களை எல்லாம் இழந்து 'ஏழை' வாழ்க்கை வாழ்வதாகவும் வருகிறார். படத்தின் ஆரம்பத்தில் திருடன் ரஜினி மரகதக் கல்லைத் திருடும் காட்சிகளுக்கெல்லாம் இயக்குனர், ரஜினி படத்திற்கு இதுவே அதிகம் என்ற அளவிற்கு காட்சிகளை அமைத்திருக்கிறார்.

திருடன் ரஜினியை விட கலெக்டர்+ராஜாவாக வரும் ரஜினி வசீகரிக்கிறார். அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா இருவரில் சோனாக்ஸிக்குத்தான் நடிப்பதற்கு வாய்ப்பு அதிகம். அவரும் அதை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். ரஜினியின் வயதிற்கு அனுஷ்கா அவருக்குப் 'பொருத்தமாக' இருக்கிறார். எந்திரனை விட சந்தானத்தின் காமெடி இந்தப் படத்தில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் மற்றும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள். இவர்களை வைத்துக்கொண்டு இயக்குனர் படத்தை ஆறே மாதங்களில் முடித்திருப்பது பெரும் சாதனைதான்.

"வாழ்க்கையில் எதுவும் ஈஸி இல்லை;முயற்சி செஞ்சா எதுவும் கஷ்டமில்லை"," ஒரு காரியம் வெற்றி பெறுவதற்கு நிறைய பேர் துணையா இருப்பாங்க. ஆனால் ஒரு எதிரிதான் காரணமாய் இருப்பான்" , "இங்க(இதயத்தில்) சந்தோஷம் இருந்தா எந்த இடத்திலும் சந்தோஷமாக இருக்கலாம்; இங்க சந்தோஷம் இல்லைனா எந்த இடத்திலும் சந்தோஷமாக இருக்கமுடியாது" என்று ரஜினிக்காகவே எழுதப்பட்ட வசனங்கள் கவர்கின்றன. அரசியல் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். படத்தில் ராஜாவாக வரும் ரஜினி தன் பிறந்த நாளைக் கொண்டாடுவது, ரஜினியின் பிறந்தநாளில் வெளிவந்திருக்கும் இப்படத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது.

தண்ணீர் பிரச்சனையில் மக்கள் படும் கஷ்டங்கள் மனதில் பதிவது போன்று, சில கனமான காட்சிகளை வைத்திருக்கலாம். க்ராஃபிக்ஸ் காட்சிகளெல்லாம் சவுந்தர்யா ரஜினியின் கம்பெனி மூலம் பண்ணப்பட்டிருக்கும் போல். க்ளைமாக்ஸில் வரும் அக்காட்சிகளெல்லாம் பல்லிளிக்கின்றன. ரகுமானின் இசையில் பாடல்கள் எதுவும் பெரிதாகக் கவரவில்லை.

ஒரே குடும்பத்தில் அப்பா, மகன்(அம்மா,மகள்) இருவருமே ரசிகர்களாக இருப்பது ரஜினிக்கு மட்டும்தான். அவர்கள் இருவருக்கும் பிடிக்கும்படி படம் பண்ணுவது சாதரணமான விசயமல்ல. ரஜினி, கே.எஸ். ரவிக்குமார் கூட்டணி மறுபடியும் இதில் வெற்றி பெற்றிருக்கிறது. 

Saturday, August 2, 2014

ஜிகர்தண்டா - திரை விமர்சனம்


ஊரே பார்த்து பயப்படும் ஒரு ர‌வுடியை எப்படி அதே ஊர் பார்த்து சிரிக்கும் நிலை வருகிறது என்பதுதான் சித்தார்த், சிம்ஹா மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'ஜிகர்தண்டா' படத்தின் கதை.

குறும்படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் சித்தார்த், தன் படத்தின் கதைக்காக, மதுரையில் மிகப் பெரிய தாதாவாக இருக்கும் சிம்ஹாவைப் பற்றி தெரிந்து கொள்ள மதுரை செல்கிறார். அதன்பின் நடக்கும் சம்பவங்களை ஆக் ஷன், காமெடி, காதல், சென்டிமென்ட் கலந்த ஜிகர்தண்டாவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

தாதாவான சிம்ஹாவை நெருங்க சித்தார்த் அவருடைய வலது கை ஆளுக்கு 'உலக(?)' சினிமா கொடுப்பதும், அதற்கு அவர் தமிழ் டப்பிங் வெர்ஷன் கேட்பதும், ஆங்கில கேங்ஸ்டர் படங்களின் காட்சிகளைத் தாதாவிற்கு ஐடியாவாகக் கொடுப்பதும் சுவாரசியம். இடைவேளைக்கு முன் வரும் அரை மணி நேரக் காட்சிகள் பரபரவென்று நகருகின்றன. 'பீட்சா' படத்தில் நடித்த 'மெயின்' கேரக்டர்கள் அனைவரும் இப்படத்திலும் இருக்கிறார்கள். யூகிக்க முடியாத திரைக்கதையாலும், புத்திசாலித்தனமான காட்சிகளாலும் படத்தை அழகாக நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். சிம்ஹாவின் ப்ளாஷ்பேக் காட்சியில் இயக்குனரின் புத்திசாலித்தனம் பளிச். "தூரத்திலிருந்து பார்க்கும்போது இருந்த பயம் தோளில் கை போட்டவுடன் போயிடுச்சா", "நீ தோத்தாயா, ஜெயிச்சாயான்னு மத்தவன் சொல்லக் கூடாது, உனக்குள்ள இருக்கிறவன் தான் சொல்லனும்" என்று வசனங்களும் ஷார்ப்பாக இருக்கின்றன.

படத்தின் முதல் 30 நிமிடங்கள் மெதுவாகச் செல்வதும், சித்தார்த், லட்சுமி மேனன் காதலில் உயிர்ப்பு இல்லாமல் இருப்பதும் படத்தின் பலவீனம்; அதுவும் சித்தார்த்திற்கு லட்சுமி மேனன் மேல் காதல் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. என்னதான் ரவுடியாக இருந்தாலும் சிம்ஹா, கேமரா முன்பு 'ஒப்புதல்' வாக்குமூலம் போல் கொடுப்பது நம்பும்படி இல்லை. ஒருவனைப் பார்த்து ஆயிரம் பேர் பயப்படுவதை விட, அதே ஆயிரம் பேர் கை தட்டிப் பாராட்டும்படி நடந்து கொள்வதுதான்  அவனுக்குப் போதையளிக்கும் என்று காட்டி விட்டு, சித்தார்த் கடைசிக் காட்சியில் 'நான்கு' பேர் சூழ நடந்து போவது போல் காட்டியிருப்பது ஒட்டவே இல்லை. சிம்ஹா, குழந்தையிடம் 'கை' கொடுக்கையிலேயே அவர் மனதில் முழுமையாக‌ மாற்றம் ஏற்பட்டு விடுகிறது, அத்துடனே படத்தை முடித்திருக்கலாம். கடைசி பத்து நிமிடக் காட்சிகளை, படத்தின் நீளம் கருதி  தாராளமாக வெட்டி எறிந்திருக்கலாம்.

படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக‌ சிம்ஹாவின் நடிப்பு கச்சிதம். ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு நன்கு துணை புரிந்திருக்கின்றன‌. 'பாண்டி நாட்டு கொடி' பாடல் ஆட்டம் போட வைக்கிறது. படத்தின் இயக்குனர் நன்கு உழைத்திருப்பது படத்தில் தெரிகிறது.

ஜிகர்தண்டா - குடித்து முடித்த பின்பும் நாக்கில் ருசி ஒட்டிக் கொண்டிருக்கும்