Sunday, September 5, 2010

பலே பாண்டியா-திரை விமர்சனம்

தன்னுடைய கடைசி ஆசையே உடனடியாக சாவதுதான் என்பதாக வைத்திருக்கும் ஹீரோவின் வாழ்வில், ஒரு தாதாவும்,பெண்ணும் குறிக்கிடுகிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் 'பலே பாண்டியா' படத்தின் கதை.

பிறந்ததிலிருந்து தான் நினைத்தது எதுவுமே நடக்காமல்,வாழ்க்கையில் விரக்தி அடையும் பாத்திரத்திற்கு விஷ்ணு பொருத்தமாக இருக்கிறார்.ப‌ட‌த்தில் விஷ்ணுவின் காஸ்ட்யூம்க‌ள் ந‌ன்றாக‌ இருக்கின்றன.குறைந்த பட்ஜெட் படமென்பதால் சென்னையின் பெரிய தாதாவைச் சுற்றி எப்போதும் இரண்டு பேர் மட்டுமே இருக்கிறார்கள் போல்.விஷ்ணுவின் 'பேட் லக்கை' காட்டுவதற்காக வரும் காட்சிகளான 'அவருடைய ஜாதகத்தை எழுதின ஜோஸியக்காரர் சாவது;அவர் வருகையில் குறுக்கே வரும் பூனை பஸ்ஸில் அடிபட்டு சாவது' போன்ற ஆரம்பக்கட்ட காட்சிகள் சுவாரசியமாக இருக்கின்றன.தாதா RKP ஆக வருபவர் நல்ல தேர்வு.பிணம் போனாத்தான் அழணும்;பணம் போனா அழக்கூடாது என்று சொல்லி விஷ்ணுவிற்கு படத்தில் கார்டியன் போல் இருக்கிறார். ஜான் விஜய் வாயைத் திறந்தாலே, நம் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

விஷ்ணு காதல் வயப்பட்டவுடன் அவர் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதும்,காதலித்த பெண் அவருடைய நண்பரை தேர்வு செய்தவுடன் பட்டாம் பூச்சிகள் இடம் மாறுவதும் நன்றாக இருக்கிறது.படத்தின் ஒரு பாடலுக்கு அதைப் பாடிய அனைத்து பாடகர்களும் நடித்திருக்கிறார்கள்(விஜய் யேசுதாஸ் டீக்கடை சேட்டனாக வருகிறார்).ஹீரோவிற்கு வாழ்வில் பிடிப்பு ஏற்பட்டு வாழ வேண்டும் என்று நினைக்கையில்,அவருடைய சாவு தேதி நெருங்கி வருவது பரபரப்பைக் கூட்டினாலும்,அதன் பின் வரும் காட்சிகள்,படம் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லத் தொடங்குகின்றன.

முதல்பாதியில் கொஞ்சம் சுவாரசியமாக செல்லும் படம், இரண்டாம் பாதியில் நம் பொறுமையை சோதிக்கிறது.குறிப்பாக விவேக் வரும் காட்சிகளிலெல்லாம் தியேட்டரில் மயான அமைதி.ஹீரோ தன்னைக் கொலை செய்யச் சொல்லி தாதாவிடம் கேட்பது(சிந்தனை செய்),அவர் ஸ்கூட்டரில் செல்லும் போது,நடப்பவர்கள் முதற் கொண்டு அவரை முந்திச் செல்வது(ஓரம் போ) என்று சில படத்தின் காட்சிகளை இயக்குனர் அப்படியே உருவியிருக்கிறார்.

சின்ன சின்ன ஐடியாக்கள் ஒரு விளம்பர படத்திற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாமே தவிர, ஒரு முழு படத்தையும் காப்பாற்ற‌ உதவாது என்பது விளம்பரபட இயக்குனராக இருந்து,தன் முதல் படத்தை இயக்கியிருக்கும் சித்தார்த் சந்திரசேகருக்கு இப்போது தெரிந்திருக்கும்.

பலே பாண்டியா-முதல் பாதி 'ஹையோ' பாண்டியா;இரண்டாம் பாதி 'ஐயோ' பாண்டியா.

4 comments:

  1. நல்ல விமர்சனம் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்

    ReplyDelete
  2. எல்லோரும் ஒரே மாதிரி கருத்து சொல்கிறார்கள் இந்த படத்தை பற்றி! இண்டர்வல்லே வெளியே கெளம்பிருங்க ;-)

    ReplyDelete
  3. @ Riyas!

    வருகைக்கு நன்றி ரியாஸ். படம் அப்படி ஒண்ணும் இம்ப்ரெஸ் பண்ணாததினாலே,இதுவுமே போதும்னு விட்டுட்டேன்.இருந்தாலும், பியா பாஜ்பாயைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்திருக்கனும்:-)

    ReplyDelete
  4. @ சிவராம்குமார்!

    உண்மைதாங்க.இரண்டாம் பாதி ரொம்பவே இழுவை!

    ReplyDelete