Friday, December 12, 2014

லிங்கா - திரை விமர்சனம்


மக்களின் பல்ஸ் தெரிந்த நடிகர் ரஜினிகாந்தும், இயக்குனர் கே.எஸ், ரவிக்குமாரும் அடித்திருக்கும் ஹாட்ரிக் வெற்றிதான் 'லிங்கா'. தன் அப்பா(ரஜினி) கட்டிய அணைக்குப் பாதிப்பு வரும்போது மகன்(ரஜினி) வந்து அதைக் காப்பதுதான் 'லிங்கா' படத்தின் கதை.

பொதுவாக ரஜினி, ரவிக்குமார் கூட்டணியில் வரும் படம் எப்படி இருக்குமோ இம்மி பிசகாமல் இப்படமும் அப்படியே இருக்கிறது. இந்தப்படத்திலும் ராஜாவாக வரும் ரஜினி மக்களுக்காகத் 'தன்' பணத்தை அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும், பின்பு சொத்துக்களை எல்லாம் இழந்து 'ஏழை' வாழ்க்கை வாழ்வதாகவும் வருகிறார். படத்தின் ஆரம்பத்தில் திருடன் ரஜினி மரகதக் கல்லைத் திருடும் காட்சிகளுக்கெல்லாம் இயக்குனர், ரஜினி படத்திற்கு இதுவே அதிகம் என்ற அளவிற்கு காட்சிகளை அமைத்திருக்கிறார்.

திருடன் ரஜினியை விட கலெக்டர்+ராஜாவாக வரும் ரஜினி வசீகரிக்கிறார். அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா இருவரில் சோனாக்ஸிக்குத்தான் நடிப்பதற்கு வாய்ப்பு அதிகம். அவரும் அதை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். ரஜினியின் வயதிற்கு அனுஷ்கா அவருக்குப் 'பொருத்தமாக' இருக்கிறார். எந்திரனை விட சந்தானத்தின் காமெடி இந்தப் படத்தில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் மற்றும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள். இவர்களை வைத்துக்கொண்டு இயக்குனர் படத்தை ஆறே மாதங்களில் முடித்திருப்பது பெரும் சாதனைதான்.

"வாழ்க்கையில் எதுவும் ஈஸி இல்லை;முயற்சி செஞ்சா எதுவும் கஷ்டமில்லை"," ஒரு காரியம் வெற்றி பெறுவதற்கு நிறைய பேர் துணையா இருப்பாங்க. ஆனால் ஒரு எதிரிதான் காரணமாய் இருப்பான்" , "இங்க(இதயத்தில்) சந்தோஷம் இருந்தா எந்த இடத்திலும் சந்தோஷமாக இருக்கலாம்; இங்க சந்தோஷம் இல்லைனா எந்த இடத்திலும் சந்தோஷமாக இருக்கமுடியாது" என்று ரஜினிக்காகவே எழுதப்பட்ட வசனங்கள் கவர்கின்றன. அரசியல் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். படத்தில் ராஜாவாக வரும் ரஜினி தன் பிறந்த நாளைக் கொண்டாடுவது, ரஜினியின் பிறந்தநாளில் வெளிவந்திருக்கும் இப்படத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது.

தண்ணீர் பிரச்சனையில் மக்கள் படும் கஷ்டங்கள் மனதில் பதிவது போன்று, சில கனமான காட்சிகளை வைத்திருக்கலாம். க்ராஃபிக்ஸ் காட்சிகளெல்லாம் சவுந்தர்யா ரஜினியின் கம்பெனி மூலம் பண்ணப்பட்டிருக்கும் போல். க்ளைமாக்ஸில் வரும் அக்காட்சிகளெல்லாம் பல்லிளிக்கின்றன. ரகுமானின் இசையில் பாடல்கள் எதுவும் பெரிதாகக் கவரவில்லை.

ஒரே குடும்பத்தில் அப்பா, மகன்(அம்மா,மகள்) இருவருமே ரசிகர்களாக இருப்பது ரஜினிக்கு மட்டும்தான். அவர்கள் இருவருக்கும் பிடிக்கும்படி படம் பண்ணுவது சாதரணமான விசயமல்ல. ரஜினி, கே.எஸ். ரவிக்குமார் கூட்டணி மறுபடியும் இதில் வெற்றி பெற்றிருக்கிறது. 

1 comment:

  1. அப்பா(ரஜினி) கட்டிய அணைக்குப் பாதிப்பு வரும்போது மகன்(ரஜினி) வந்து அதைக் காப்பதுதான் 'லிங்கா' படத்தின் கதை????????????????????

    ReplyDelete