Sunday, April 26, 2015

ஓ காதல் கண்மனி - திரை விமர்சனம்


திருமணம் என்பது தங்களுடைய சுதந்திரத்தைப்  பறிக்கும்;கனவுகளைச் சிதைக்கும் என்று நினைக்கும் துல்கர் சல்மானும், நித்யா மேனனும் லிவ்விங் டுகெதராக வாழ முடிவெடுக்கிறார்கள். கடைசியில், கல்யாணத்திற்குப் பிறகும் கூட ஒருவருக்கொருவர் அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் வாழ முடியும் என்று உணர்ந்து, கல்யாணப் பிணைப்பில் இணைவதுதான் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஓ காதல் கண்மனி படத்தின் கதை.

இன்றைய இளைஞர்கள் எல்லா விஷயத்திலேயும் ஃபாஸ்டாகத்தான் இருக்கிறார்கள் என்பதால், ஒரு பெண்ணைப் பார்த்து, ஃபோன் நம்பர் வாங்கி, காஃபி ஷாப்பில் சந்தித்து என்று பர பரவென அறிமுகக் காட்சிகள் நகர்கின்றன. US போய் செட்டிலாக விரும்பும் சாஃப்ட்வேர் இளைஞன் வேடத்திற்கு துல்கர் சல்மானும், Paris போய் செட்டிலாக விரும்பும் பில்டிங் ஆர்க்கிடெக்ட் வேடத்தில் நித்யாவும் பொருத்தமாக இருக்கிறார்கள். படம் முழுவதும் மும்பையில் நடப்பதால், பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் தம்பதிகள் வீட்டில் துல்கர் வந்து தங்குவதும், பின்பு நித்யா வந்து சேர்வதும் இயல்பாக இருக்கின்றன.

விவாகரத்தான பெற்றோருக்கு மகளான நித்யா, கல்யாணத்தை வெறுப்பதும்;பணத்திற்காகத்தான் தன்னைக் கல்யாணம் பண்ண ஒருவன் விரும்பினான் என்று அறிந்து கல்யாணத்தின் மேல் பிடித்தம் இல்லாமல் இருப்பதும்; பிரகாஷ்ராஜ் தம்பதிகளின் அந்நியோன்யத்தைப் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக கல்யாணம் என்ற பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்  முடிவுக்கு வருவதும், அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நித்யாவிற்காவது கல்யாணத்தின் மேல் வெறுப்பு வருவதற்கு இதுபோல் காரணமிருக்கின்றன.  அதேபோல் ரூம் மாறுகையில் மீனைக் கூட பத்திரமாக நித்யா எடுத்து வருகையிலேயே அவருடைய குணாதிசயம் 'கொஞ்சம்' புரிந்து விடுகிறது. அப்பா, அம்மா இல்லாததால் துல்கருக்கு கல்யாணத்தின் அருமை தெரியவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தாலும்;ஆரம்பத்தில் பிரகாஷ்ராஜ் போல் யாராலும் இருக்க முடியாது என்று சொல்லும் துல்கர், பின்னர் நித்யாவிடம் என்னாலும் பிரகாஷ்ராஜ் போல் இருக்க முடியும் என்று கூறினாலும், அவரின் கதாபாத்திரம் சரியாய் காட்சிப்படுத்தப்படாதது போல் இருக்கிற‌து. அதேபோல் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்யாண பந்தத்திற்குள் வரும் நித்யாவின் கண்களில் காதல் பொங்கி வழிகிறது. ஆனால், துல்கர் எந்த மாற்றமுமில்லாமல் தேமேவென்று இருக்கிறார். லிவ்விங் டுகெதர் வாழ்வும் கொஞ்ச நாட்களுக்குப் பின் போரடித்துவிடும் என்று சிம்பாலிக்காக சொல்கிறார்களோ என்னவோ இடைவேளைக்குப் பின் வரும் சில காட்சிகள் போரடிக்கின்றன. பொதுவாக மணிரத்னத்தின் காதல் படங்களில் ஹீரொயின்கள் என்னதான் நன்றாக நடித்திருந்தாலும், ஹீரோக்கள்தான்(கார்த்திக், அரவிந்த்சாமி, மாதவன்) மனதில் நிற்பார்கள். ஆனால் இப்படத்தில் நித்யா மேனன் மொத்தமாக மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறார், ஃபிரிட்ஜ்ஜிற்குள் இருந்து அப்போதுதான் வெளிவந்தது போல் படம் முழுவதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார்.

படம் வெளிவருவதற்கு முன் பெரிதாகக் கவராத பாடல்கள், படத்தோடு பார்க்கையில் நன்றாக இருக்கின்றன. நீண்ட நாட்களுக்குப் பின் ரகுமானின் இசையும், பின்னணி இசையும் இளமைத் துள்ளலோடு இருக்கிறது. வீடியோ கேம்ஸ் சாஃப்ட்வேட் இளைஞனுக்கு வைரமுத்துவின் காரா..ஆட்டக்காரா வரிகள் கச்சிதமாகப் பொருந்துகின்றன. தன்னுடைய படங்களில் சில நல்ல பாடல்களை மணிரத்னம் முழுமையாகக் காட்சிப்படுத்தமாட்டார்(நெஞ்சமெல்லாம்-ஆயுத எழுத்து, பூங்காற்றிலே- உயிரே,), அதேபோல் இந்த படத்திலும் நானே வருகிறேன் பாடல் முழுமையாகக் காட்சிப்படுத்தவில்லை. பிசியின் கேமரா கச்சிதம். கல்யாணத்தை வெறுப்பவர்கள் கல்யாண வைபவத்தில் அறிமுகமாகிக் கொள்வது;கல்யாணத்தைப் பற்றி ஹீரோவும், ஹீரோயினும் என்ன நினைக்கிறார்கள் என்று முதல் சந்திப்பிலேயே சொல்லிவிடுவது;ஆக்சன் காட்சிகளாய் விரியும் அனிமேஷன் காட்சிகள், ரொம்பக் க்யூட்டான வசனங்கள் என்று ஓ.கேவான காதல் கதையைக் கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.


No comments:

Post a Comment