Saturday, August 2, 2014

ஜிகர்தண்டா - திரை விமர்சனம்


ஊரே பார்த்து பயப்படும் ஒரு ர‌வுடியை எப்படி அதே ஊர் பார்த்து சிரிக்கும் நிலை வருகிறது என்பதுதான் சித்தார்த், சிம்ஹா மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'ஜிகர்தண்டா' படத்தின் கதை.

குறும்படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் சித்தார்த், தன் படத்தின் கதைக்காக, மதுரையில் மிகப் பெரிய தாதாவாக இருக்கும் சிம்ஹாவைப் பற்றி தெரிந்து கொள்ள மதுரை செல்கிறார். அதன்பின் நடக்கும் சம்பவங்களை ஆக் ஷன், காமெடி, காதல், சென்டிமென்ட் கலந்த ஜிகர்தண்டாவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

தாதாவான சிம்ஹாவை நெருங்க சித்தார்த் அவருடைய வலது கை ஆளுக்கு 'உலக(?)' சினிமா கொடுப்பதும், அதற்கு அவர் தமிழ் டப்பிங் வெர்ஷன் கேட்பதும், ஆங்கில கேங்ஸ்டர் படங்களின் காட்சிகளைத் தாதாவிற்கு ஐடியாவாகக் கொடுப்பதும் சுவாரசியம். இடைவேளைக்கு முன் வரும் அரை மணி நேரக் காட்சிகள் பரபரவென்று நகருகின்றன. 'பீட்சா' படத்தில் நடித்த 'மெயின்' கேரக்டர்கள் அனைவரும் இப்படத்திலும் இருக்கிறார்கள். யூகிக்க முடியாத திரைக்கதையாலும், புத்திசாலித்தனமான காட்சிகளாலும் படத்தை அழகாக நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். சிம்ஹாவின் ப்ளாஷ்பேக் காட்சியில் இயக்குனரின் புத்திசாலித்தனம் பளிச். "தூரத்திலிருந்து பார்க்கும்போது இருந்த பயம் தோளில் கை போட்டவுடன் போயிடுச்சா", "நீ தோத்தாயா, ஜெயிச்சாயான்னு மத்தவன் சொல்லக் கூடாது, உனக்குள்ள இருக்கிறவன் தான் சொல்லனும்" என்று வசனங்களும் ஷார்ப்பாக இருக்கின்றன.

படத்தின் முதல் 30 நிமிடங்கள் மெதுவாகச் செல்வதும், சித்தார்த், லட்சுமி மேனன் காதலில் உயிர்ப்பு இல்லாமல் இருப்பதும் படத்தின் பலவீனம்; அதுவும் சித்தார்த்திற்கு லட்சுமி மேனன் மேல் காதல் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. என்னதான் ரவுடியாக இருந்தாலும் சிம்ஹா, கேமரா முன்பு 'ஒப்புதல்' வாக்குமூலம் போல் கொடுப்பது நம்பும்படி இல்லை. ஒருவனைப் பார்த்து ஆயிரம் பேர் பயப்படுவதை விட, அதே ஆயிரம் பேர் கை தட்டிப் பாராட்டும்படி நடந்து கொள்வதுதான்  அவனுக்குப் போதையளிக்கும் என்று காட்டி விட்டு, சித்தார்த் கடைசிக் காட்சியில் 'நான்கு' பேர் சூழ நடந்து போவது போல் காட்டியிருப்பது ஒட்டவே இல்லை. சிம்ஹா, குழந்தையிடம் 'கை' கொடுக்கையிலேயே அவர் மனதில் முழுமையாக‌ மாற்றம் ஏற்பட்டு விடுகிறது, அத்துடனே படத்தை முடித்திருக்கலாம். கடைசி பத்து நிமிடக் காட்சிகளை, படத்தின் நீளம் கருதி  தாராளமாக வெட்டி எறிந்திருக்கலாம்.

படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக‌ சிம்ஹாவின் நடிப்பு கச்சிதம். ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு நன்கு துணை புரிந்திருக்கின்றன‌. 'பாண்டி நாட்டு கொடி' பாடல் ஆட்டம் போட வைக்கிறது. படத்தின் இயக்குனர் நன்கு உழைத்திருப்பது படத்தில் தெரிகிறது.

ஜிகர்தண்டா - குடித்து முடித்த பின்பும் நாக்கில் ருசி ஒட்டிக் கொண்டிருக்கும்

No comments:

Post a Comment