Friday, July 3, 2015

கமலும் அவரின் தவறுகளும்(?)

தமிழ் நடிகர்களிலேயே, ஏன் இந்திய நடிகர்களிலேயே என்று கூட சொல்லலாம், ஒரு நடிகருக்கு அதிகமான அறிவுரைகளை சினிமா ரசிகர்கள் அளிப்பது கமலுக்கு மட்டும்தான். 55 ஆண்டுகளாக சினிமா உலகில் இருக்கிறார்;45 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் நேற்று படம் பார்க்க ஆரம்பித்தவர்கள் முதற்கொண்டு தங்களுடைய அறிவுரைகளை அள்ளி வழங்குவது கமலுக்கு மட்டும்தான்.

1) ஒரு 'மார்க்கெட்' உள்ள நடிகராக அவர் காலம் முடிந்துவிட்டது. ஏனென்றால் அவர் கடைசியாக நடித்த உத்தம வில்லன் ஃப்ளாப் என்பது ஒரு குற்றச்சாட்டு. கமலின் கேரியரில் கடந்த 25 வருடங்களைப் பார்த்தால் அவர் 'தொடர்ந்து' ஹிட் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்ததேயில்லை. ஆனாலும் அவரால் இதுவரை டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்க முடிகிறது. தேவர் மகன், சிங்கார வேலன் ஹிட் என்றால் அடுத்து வந்த கலைஞன் ஃப்ளாப். இண்டியன், அவ்வை சண்முகி ஹிட் என்றால் அடுத்து வந்த ஹேராம் ஃப்ளாப். பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் ஹிட் என்றால், அன்பே சிவம் ஃப்ளாப். விருமாண்டி, வசூல் ராஜா ஹிட்;மும்பை எக்ஸ்பிரஸ் ஃப்ளாப். வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் ஹிட்;உன்னைப் போல் ஒருவன் ஃப்ளாப். ஏதோ அவர் புதிதாக ஃப்ளாப் கொடுப்பது போன்று, அவர் கேரியர் முடிந்துவிட்டது என்று சொல்வதெல்லாம் ரொம்பவே அதிகம். ஃப்ளாப் படங்களே கொடுக்காத ரஜினிக்கு, அவரின் கடைசி இரண்டு படங்கள் ஃப்ளாப்தான். அட தமிழில் முன்னணியில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் முதற்கொண்டு எந்த நடிகர்தான் ஹிட் படங்களாக தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், கமலை மட்டும் குறை சொல்ல.

2) கமல் புதிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது அடுத்த அறிவுரை. ஷங்கருக்கு இந்தியன் அவருடைய மூன்றாவது படம்தான். வேட்டையாடு விளையாடு, கவுதம் மேனனிற்கு மூன்றாவது படம்தான். ஒரு படம் ஹிட் கொடுத்த இயக்குனரையோ, இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த இயக்குனரையோ தலையில் தூக்கிவைத்து ஆடுவது நம்மில் சிலர்தான். அட நாமளே, அவர்களின் அடுத்த படங்களுக்கு, 120 ரூபாய் கொடுத்து முதல் நாள் டிக்கெட் புக் பண்ணுவதற்கு யோசிப்போம். அப்படி இருக்கையில் கமல் மட்டும் எப்படி நம்பி தன்னுடைய படத்தைக் கொடுக்க முடியும்? கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குவதால் முதல் படமோ, இரண்டு படங்களிலேயோ தாக்குப் பிடிக்கும் இயக்குனர்கள், தங்களுடைய மூன்றாவது படத்திலிருந்து 'சரக்கு' காலியாகித் திணறியதற்கு எத்தனையே உதாரணங்கள் இருக்கிறது, லவ் டுடே பாலசேகரனாகட்டும், துள்ளாத மனமும் துள்ளும் கொடுத்த எழிலாகட்டும், பின்னர் என்ன ஆனார்கள்? சுப்ரமணியபுரம் பொன்ற 'க்ளாசிக்' படத்தைக் கொடுத்த சசிகுமாரின் அடுத்த படம் ஃப்ளாப். பருத்தி வீரன் கொடுத்த அமீர் அதன் பின் பெரிதாக வெற்றிப் படம் எதுவும் கொடுக்கவில்லை. ஓரளவிற்கு தாக்குப் பிடித்த இயக்குனர்களான கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி, சரண், ஷங்கர், கவுதம் மேனன் போன்ற அத்தனை இயக்குனர்களின் படங்களிலும் கமல் நடித்திருக்கிறார் . விடுபட்ட சில இயக்குனர்களாக பாலா, பாலாஜி சக்திவேல், மிஷ்கின், செல்வராகவன், சுசீந்தரன் போன்றோர் இருக்கலாம். செல்வராகவன், பாலாஜி சக்திவேல் போன்றோர் காதல் படங்கள்தான் பெரும்பாலும் கொடுத்திருக்கிறார்கள். மிஷ்கினுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்து ட்ராப்பாகிவிட்டது. பாலா, கமலுக்கான கதையுடன் இல்லாமலிருந்து அவர்கள் இணைவது தள்ளிப் போயிருக்கலாம். மற்றபடி, உன்னைப் போல் ஒருவன் இயக்குனருக்கு அது முதல்படம்தான், அடுத்து நடிக்கும் தூங்காவனம் படத்தின் இயக்குனருக்கும் அது முதல் படம்தான்.

3) கமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பது அவருக்குக் கொடுக்கப்படும் இன்னொரு அறிவுரை. அது கமலை ஒரு நடிகராக 'மட்டுமே' நினைத்துக் கொண்டிருப்பதால் வரும் பிரச்சனை. இரண்டு படங்கள் இயக்கி, பத்து படங்களில் நடித்திருக்கும் சசிகுமாரை நாம் நடிகர்-இயக்குனர் சசிக்குமார் என்றுதான் அழைப்போம். சுந்தர் சியையும் இயக்குனர்-நடிகர் என்றுதான் அழைப்போம். ஆனால் கமலை மட்டும் நாம் நடிகர் என்று மட்டுமே நினைப்போம்; இயக்குனராக ஒத்துக்கொள்ள மனம் வராது. இத்தனைக்கும் 2000-ல் இயக்குனராக கமல் தமிழில் அறிமுகமானார். இதுவரை ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார், இந்த மூன்று படங்களின் ஜானரும் வேறு. ஹேராம் 1940 காலகட்ட பின்புலத்தில் வந்த படம்;விருமாண்டியில் தென் தமிழக கிராமத்துப் பின்னணி;விஸ்வரூபத்தில் ஆக்சன். தமிழில் அவருடன் அறிமுகமான எந்த இயக்குனருக்கும் அவர் சளைத்தவரில்லை. இந்த மாதிரி வித்தியாசமான ஜானரில் ஓரளவிற்கு 'தரமான' படங்களை வேறு யாரும்  கொடுத்ததில்லை என்பதுதான் உண்மை. ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், தசாவதாரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கும் கதை, திரைக்கதை கமல்தான். அதேபோல் 50 வயதைக் கடந்த சூப்பர் ஹிட் இயக்குனர்களான பாரதிராஜா, மணிரத்னம், பாக்யராஜ்,விக்ரமன் போன்றவர்கள் கூட இயக்குனராக 'ஹிட்' படங்கள் கொடுக்க திணருகையில் இப்போதும் இயக்குனராக வெற்றிப் படங்கள் கொடுத்துக் கொண்டிருப்பதும் கமல்தான்.


4) மோகன்லால், மம்மூட்டி போன்று வித்தியாசமான படங்களில் நடிக்கவேண்டும் என்பது அடுத்த குற்றச்சாட்டு. பாபநாசத்தில் கூட மோகன்லாலுடன் ஒப்பிட்டு கமல் நன்றாக நடிக்கவில்லை என்றுதான் கூறுவார்கள். ஒரிஜனல் படத்தைப் பார்த்துவிட்டு என்னதான் ரீமேக் படம் நன்றாக இருந்தாலும் நாம் முதலில் பார்த்த ஒரிஜினல்தான் நமக்குப் பிடிக்கும். மோகன்லால் நடித்த எந்த படத்தையும் 'தில்' லாக ரீமேக்கி கமலால் 'ஓரளவிற்கு' நடிக்க முடியும். ஆனால் கமல் நடித்த சில படங்களை ரீமேக்கி நடிக்க மோகன்லாலால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. மோகன்லால், மம்மூட்டி நடித்த 50 படங்களைப் பார்த்திருக்கிறேன்; அவர்கள் நடிப்பு சூப்பர் என்பார்கள். விஜய், அஜித்தின் சில படங்களுக்கு போட்டியாக மோகன்லாலும், மம்மூட்டியும் சமீபத்தில் எத்தனையோ 'மொக்கை'ப் படத்தில் தொடர்ந்து நடித்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் கடந்த இருபது வருடங்களில் ஏதாவது ஒரு கமல் படத்தை இந்த மாதிரி ஒரு மோசமான படத்தில் கமல் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என்று சொல்ல முடியுமா?  உத்தமவில்லன் ஃப்ளாப்தான்;அதை மோசமான படம் என்று ஒதுக்க முடியுமா?. மும்பை எக்ஸ்பிரஸ், காதலா காதலா, கலைஞன், ஹேராம், அன்பேசிவம், நம்மவர் என்று எந்தப் படத்தையும் மோசமான மசாலா படம் என்று ஒதுக்க முடியாது. அவருடைய கடைசி மொக்கைப் படம் என்பதே இருபது வருடங்களுக்கு முன் வெளிவந்த மகராசன், சூரசம்ஹாரமாகத்தான் இருக்கும்


5) ஏதாவது ஒரு நல்ல படம் தமிழில் வந்துவிட்டால், இத்தனை வருடங்களாக சினிமா உலகில் இருக்கும் கமலால் ஏன் இது போல் ஒரு படம் கொடுக்க முடியவில்லை என்பது, நல்ல படம் அமைவது என்பது மொத்த டீம் ஒர்க்தான். இதில், கமலுக்கு மட்டுமே பெரிய பங்கு இருப்பதாக சொல்ல முடியாது. இளம் வயதில் யாராலும் வித்தியாசமான படங்கள் கொடுக்க முடியும். கமலால் இந்த வயதில் அதுபோல் படங்கள் கொடுக்க முடியாமல் இருப்பது உண்மைதான் என்றாலும், அதற்காக மொத்தமாக அவரை மட்டுமே குறை சொல்ல முடியாது. 30 களில் இருக்கும் தனுஷ் பண்ணிய சாதனைகளை விட கமல் செய்த சாதனைகள் மிக அதிகம். 40 களில் இருக்கும் சூர்யா, விக்ரம் பண்ணிய சாதனைகளை விட கமல் செய்த சாதனைகள் மிக அதிகம் இன்று புதிதாக கிரிக்கெட் உலகில் நுழையும் பேட்ஸ்மேன் 15 பால்களில் 50 ரன்கள் அடித்தால், இத்தனை வருடங்களாக கிரிக்கெட் விளையாடும் சச்சினால் அந்த சாதனையை ஏன் பண்ண முடியவில்லை என்று கேட்க முடியுமா?


6) சிவாஜி, அமிதாப் போன்று கமல் ஏன் தன் வயதிற்குரிய கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில்லை என்பது அடுத்த குற்றச்சாட்டு. சிவாஜியும் சரி;அமிதாப்பும் சரி; தாங்கள் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ந்து ஃப்ளாப்பானதால் வேறு வழியில்லாமல், ஹீரோவாக இல்லாமல், தங்களுடைய நடிப்பிற்கு தீனி போடும் சில படங்களில் நடித்தார்கள், ரஜினிக்கும் சரி;கமலுக்கும் சரி; அந்த நிலைமை இன்னும் வரவில்லை என்பதுதான் உண்மை. கமல் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு இன்றும் மார்க்கெட் இருக்கிறது . இந்த கேள்வியை நாம் கேட்க வேண்டிய ஆட்கள் நடிப்புத் திறமை இருந்தும்,  ஹீரோவாக மார்க்கெட் இல்லாமல் நடித்துக் கொண்டு இருக்கும் சத்யராஜூம், பிரபுவும்தான்.


7)  இவ்வளவு சொன்னாலும், கமல் மேல் எனக்கும் குற்றச்சாட்டு இருக்கிறது. தென்னிந்திய நடிகர்களிலேயே கமல் ஒருவர்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று அனைத்து மொழிகளிலும் நேரடிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்த ஒரே நடிகர். இப்போதைய நிலைமையில் கமலின் சம்பளத்திற்கு, மலையாளப் படங்களின் பட்ஜெட் ஒத்து வராது. சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என்று தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடும் தெலுங்கு படங்களில் நடித்த கமல் அதற்குப் பின் அதேபோன்ற தெலுங்கு படங்களில் நடிக்கவே இல்லை என்பதுதான் புரியாத விசயம். ஸ்டார் வேல்யு இருப்பதால், தமிழில் ஹீரொவாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமல் தயங்கியதில் நியாயம் இருக்கிறது. ஆனால் கடந்த பத்து வருடங்களில் வித்தியாசமான படங்கள் எடுக்கத் தொடங்கியிருக்கும் இந்தியில் அவர் துணிந்து ஹீரோவாக இல்லாமல், தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடும் படங்களில் தாராளமாக நடித்திருக்கலாம். அதை ஏன் பண்ணவில்லை என்பதுதான் தெரியவில்லை. அவர் நேரடியாக நடித்த வேற்று மொழி படமே 25 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளிவந்த இந்திரன், சந்திரனாகத்தான் இருக்கிறது.

நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக இருக்கும் கமலுக்கு, தன்னுடைய பட்ஜெட் தெரிந்தே இருப்பதால்தான், தன்னுடைய ஒன்றிரண்டு படங்கள் ஃப்ளாப்பானால், குறைந்த பட்ஜெட்டில் ஒரு படம் நடித்து, அதை ஹிட் படமாக்கும் வித்தை தெரிந்திருக்கிறது. ஃப்ளாப் என்று சொல்லப்படும் உத்தம வில்லனே 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. பாபநாசம், உத்தமவில்லன் அளவிற்கு ஓடினால் கூட அது விநியோகஸ்தார்களுக்கும், தயாரிப்பளர்களுக்கும் இலாபத்தையே கொடுக்கும்; த்ருஷ்யம் படத்தின் மொத்த பட்ஜெட்டே 5 கோடிகள் என்கையில் பாபநாசத்தின் பட்ஜெட் 30 கோடிகளுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. அதேபோல் காமெடி படங்களிலோ, ரீமேக் படங்களிலோ நடித்துக் கொண்டே, தன்னுடைய உழைப்பை அதிகமாகக் கோரும் அடுத்த படங்களின் பட வேலைகளில் ஈடுபடுவது கமலின் பாணி. அதனால்தான் ஹேராமிற்கு முன் காதலா காதலா, ஆளவந்தானிற்கு முன் தெனாலி, அன்பே சிவம், விருமாண்டிக்கு முன், பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், தசாவதரத்திற்கு முன் மும்பை எக்ஸ்பிரஸ், விஸ்வரூபத்திற்கு முன் மன்மதன் அம்பு, உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தவறுகள் செய்யாத மனிதனோ, குறைகள் இல்லாத மனிதனோ யாரும் இருக்க முடியாது. ஆனால் கமலை மட்டும் அவரிடம் சிறு தவறு/குறைகள் இருந்தாலும், அவருடைய நிறைகள் எதையும் கண்டு கொள்ளாமல், அவரைப் போட்டு துவைத்து எடுப்பதைத்தான் புரிந்து கொள்ள முடிவதில்லை. கமல் நல்ல நடிகர் என்றால், மோகன் லால், மம்மூட்டி அளவிற்கு அவர் நல்ல நடிகரில்லை என்பது. பாக்யராஜை விட விமல் கூட நல்ல நடிகராக இருக்கலாம். அதற்காக விமலையும், பாக்யராஜையும் ஒப்பிட முடியுமா? பாக்யராஜின் தகுதி நடிகர் என்பது மட்டுமா? கமலும் அதுபோல்தான்; நடிகர், இயக்குனர், தயாரிப்பாளார், கதை, திரைக்கதை, வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் என்று பல முகங்கள். அவர் போல் நடிப்பிலும் மற்ற பிற துறைகளிலும் சிறந்து விளங்கும் யாராவது ஒருவரை கமலுடன் ஒப்பிட்டால் நியாயம். அட மோகன்லாலோ, மம்மூட்டியோ, அமிதாப்போ கமலை விட நன்றாக நடிக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.இன்னும் வெறும் 'நடிகர்களாக' மட்டும் இருக்கும் இவர்களை கமலுடன் ஒப்பிடுவது எப்படி சரியாகும்? ஆப்பிளை, ஆப்பிளோடு ஒப்பிடுவதுதானே சரியாக இருக்க முடியும்.

நம்மை சுற்றி இருக்கும் அறுபது வயதான, நம்முடைய அப்பாவையோ, பெரியப்பா, சித்தப்பாவையோ, மாமாவையோ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். ரிட்டையர்மென்ட் வாங்கிவிட்டு, ஹாயாக இந்துவோ, தந்தியோ படித்து பொழுதை போக்கிக் கொண்டிருப்பார்கள். இன்றைய இளம் நடிகர்களே வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வயதிலும், நடிகனாக உடல் உழைப்பு, கிரியேட்டராக மூளைக்கு வேலை என்று தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் கமலை, இளைஞர்களான நாம் நம்முடைய இன்ஸ்பிரஸனாகத்தானே எடுத்துக் கொள்ள வேண்டும். கமலைப் பாராட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும்; அவரை தூற்றாமலாவது இருக்கலாமே!

1 comment:

  1. http://poonaikutti.blogspot.com/2015/07/blog-post.html

    படிக்கவும். ஒருவேளை நீங்கள் எதிர்பார்க்கும் பதில் இதில் இருக்கலாம்.

    ReplyDelete