Sunday, May 3, 2015

உத்தம வில்லன் - திரை விமர்சனம்


கலையும், கலைஞர்களும்தான் சாகா வரம் பெற்றவர்கள் என்று சொல்லும் படம்தான் கமலின் கதை, திரைக்கதையில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'உத்தமவில்லன்' படத்தின் கதை.

சூப்பர் ஸ்டாராக இருக்கும் கமலுக்கு இனிமேல் தன்னால் சினிமாவில் நடிக்க முடியாது என்று தெரிய வருகிறது.தன்னை வைத்து நல்ல படங்களைக் கொடுத்த பாலசந்தர் இயக்கத்தில் கடைசியாக ஒரு படத்தில் நடிக்க ஆசை. இதற்கு நடுவில் குடும்பத்துக்குள் வரும் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டிய நிலை. தான் நினைத்தபடி குடும்பப் பிரச்சனைகளையும், திரைப்படத்தையும் முடிக்க முடிந்ததா என்பதை சென்டிமென்ட், காமெடி கலந்து கொடுத்திருக்கிறார்கள்.

திரைக் கலைஞனின் வாழ்வில் வரும் புயல் காரணமாக சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் இருப்பதால், படத்திற்குள் எடுக்கும் கதையை காமெடியாக வரும்படி பார்த்துக் கொண்டது புத்திசாலித்தனம். ஆனால், எட்டாம் நூற்றாண்டுக் காட்சிகள் பெரிதாக சிரிப்பை வரவைக்காமல் இருப்பதுதான் படத்தின் பெரிய பலவீனம். ஒருவேளை குழந்தைகளை மனதில் கொண்டு அக்காட்சிகள் எடுக்கப்பட்டனவோ என்று தோன்றுகிறது. செத்துக் கொண்டிருக்கும் ஒரு கலைஞன், மக்களை மகிழ்விக்க சினிமாவில் சிரித்து நடிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையை சரியாகக் காட்ட முடியாமல் போனதற்கும் இக்காட்சிகள்தான் காரணம். அதுவும் படத்தின் சரிபாதிக் காட்சிகள் எட்டாம் நூற்றாண்டுக் காட்சிகளாய் இருப்பதால் படமும் 'கொஞ்சம்' சுவாரசியமற்று நகர்கிறது. சாகாவரம் பெற்ற இரணியன்,வில்லுப்பாட்டு-தெய்யம் கலைகள் படத்தின் கதைக்கும், க்ளைமாக்சுக்கும் பெரிதும் துணை நின்றாலும், படத்திற்குள் வரும் சினிமாவில் கமலின் வழக்கமான சமகாலத்திய காமெடி கொண்டு படம் விரிவடைந்திருந்தால் ஒரு திரைப் படத்திற்குள் இரண்டு வெவ்வேறு(சென்டிமென்ட்+காமெடி) கதைகள் என்று அட்டகாசமாய் இருந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது.

நீண்ட நாட்களுக்குப் (மகாநதி) பிறகு முழுமையான சென்டிமென்ட் படத்தில் கமல். ஜெயராம்-கமல் பேசிக் கொள்ளும் இடம், கமல் தன் மகளுடனும், மகனுடனும் பேசும் இடங்களில் எல்லாம் சென்டிமென்ட் காட்சிகள் நச். மகள், மகன் முன் கமல் தன் முதல் மனைவியுடனான பந்தத்தை கடிதத்தில் வெளிப்படுத்தியிருப்பதைக் காட்டுவதும், பின் தன் மேக்கப்பைக் கலைப்பதும் அருமை. தன் சுயநலத்துக்காகக் கமலை அவர் முதல் மனைவியுடன் பிரித்து கல்யாணம் செய்து கொள்ளும் ஊர்வசி, பின் 'பேருக்கு' ஊர்வசிக்குக் கணவனாக இருந்து  ஆன்ட்ரியாவுடன் கமலுக்கு ஏற்படும் காதல் என்று கமலின் சினிமா கலைஞன் பாத்திரம் அழகாகப் படைக்கப்பட்டிருக்கிறது.படம் முழுவதும் க்ளோசப் ஷாட் வைத்தாலும், கமலால் முகத்தில் மாறுபட்ட உணர்ச்சிகளைக் காட்டிக் கொண்டே இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. என் பியூட்டியைத் தின்னே தீர்த்துட்டேன், உலகத்திலுள்ள மத்த குழந்தைங்க மாதிரி இருந்தா உடம்பு கெட்டுடும் போன்ற புத்திசாலித்தனமான வசனங்களும் படம் நெடுக இருக்கின்றன. ஜிப்ரானின் இசை ஓகே.

இந்தப் படத்தின் போஸ்டர்களில் 'சினிமா கலைஞர்களுக்கு அர்ப்பணம்' என்றே சொல்லியிருக்கலாம். சினிமா கலைஞர்கள் இறந்த பின்னாலும், சாகா வரம் பெற்று மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்ற கருத்தைச் சொல்லும் படத்தில், பாலசந்தர் நடித்திருப்பதும், அவர் இறந்த பின்னும் நாம் அவரை படத்தில் பார்த்துக் கொண்டிருப்பதும், கமல் இந்தப் படத்தை ஏன் பாலசந்தருக்கு அர்ப்பணம் என்று சொன்னாரென்றும் படம் பார்க்கையில் புரிகிறது,

No comments:

Post a Comment